

மூன்று ஆண்டுகளுக்கு முன் எங்கள் நிறுவனத்தின் கடைக்கோடி மாவட்டத்தின் அலுவலகத்துக்குச் சென்றிருந்தேன். அங்கே கழிப்பறையை உபயோகிக்க வேண்டி உள்ளே சென்றேன். இருட்டாக இருந்த அறை நான் நுழைந்த மறு கணம் விளக்கு எரிய வெளிச்சம் பெற்றது. வெளியே வந்ததும் விளக்கு தானாகவே அணைந்தது. எங்கள் ஊழியர் ஒருவர் தன்னார்வமாக அங்கே ஓர் உணர்கருவி (சென்சார்) பொருத்தி இருப்பதாகச் சொன்னார்.
“பெரும்பாலும் கழிப்பறை விளக்குகள் 24 மணி நேரமும் எரிந்தபடி இருக்கின்றன. நம் அசைவினை உணர்ந்து விளக்குகள் எரியும்படி செய்ததில் கொஞ்சமாவது மின்சாரத்தைச் சேமிக்கிறோம்” என்றார். அவரைப் பாராட்டிவிட்டு, என்னுடைய தலைமை அலுவலக அறையில் அதனைப் பொருத்துவதற்கும் ஏற்பாடு செய்தேன்.