

அன்றாடம் என்பதே இயற்கையின் காலப் பரிமாணம் ஆகும். மானுடம் நினைவுசேகரம், அறிவுசேகரம் போன்றவற்றால் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்று பிரித்து, வரலாற்றுத் தொடர்ச்சியை உருவாக்கிக்கொள்கிறது. அதன் விளைவுகளைத் தத்துவார்த்த மானுடவியல் நோக்கில் ஆராயும் கட்டுரைத் தொடர் இது.
உடல், நரம்பு மண்டலத்தின் மூலம் நினைவுகளைச் சேகரித்துத் தான் இயங்குவதற்கான வெளியைக் கட்டமைத்துக்கொள்கிறது. நினைவுசேகரத்தைச் சரியாகப் பயன்படுத்தினால்தான், தன்னைச் சுற்றியுள்ள வெளியில் உடலால் சரிவர இயங்க முடியும். உதாரணமாக, போதைப் பொருள்களை உட்கொண்டவர்களுக்கு வெளியின் பரிமாணம் குழம்பித் தெரியும். அருகில் இருப்பது தொலைவிலும், தொலைவில் இருப்பது அருகிலும் தெரியும். நம்முடைய நினைவுசேகரம் தெளிவாக இருந்தால்தான் நாம் இயங்கும் வெளி துல்லியமாகத் தெரியும். நாம் இயங்குவதற்கு எத்தகைய ஆற்றலைச் செலவழிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில்தான் காலமும்-இடமும் பிணைந்ததாக இயல்வெளியை நமது புலன்கள் உருவாக்கித் தருகின்றன.
மனிதர்களின் புலன்உலகுகளின் இயல்வெளி பொதுவானதாக இருந்ததால் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டு வாழ்வுக்கான தொழில்நுட்பங்களை மனிதக் குழுக்கள் உருவாக்கிக்கொள்ளத் தொடங்கின. வேட்டையாடுதல், பயிரிடுதல், நெருப்பினைப் பயன்படுத்துதல், சக்கரங்கள் உள்ள வண்டிகள், நீரில் மிதக்கும் படகுகள் எனப் பல்வேறு தொழில்நுட்பச் சாதனைகளை ஆதி மனிதர்கள் செய்தனர். அவற்றின் மூலம் மானுடப் பண்பாடு செழித்தோங்கியது. இவ்வகையான வாழ்வாதாரமாக விளங்கிய அறிவுப் புலன்களெல்லாம் அன்றாட வாழ்வனுபவங்களின் அங்கமாக இருந்தன. பட்டறிவு சார்ந்து இருந்தன. மூத்தவர்கள் இளையவர்களுக்கு இந்த அறிதலை வழங்கினார்கள்; பயிற்றுவித்தார்கள்.