

1950 ஆம் ஆண்டு இந்திய அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான ஆண்டு. ஆம், அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்டு, உலக அரங்கில் குடியரசு நாடாக தன்னைப் பறைசாற்றிக் கொண்டது. அதே ஆண்டு இன்னொரு வகையில் உலக இலக்கிய வரலாற்றில் மிக முக்கியமான ஆண்டாக அமைந்தது. 1950, ஏப்ரல் 15 ஆம் நாள் அத்தகைய சிறப்பிற்கு காரணமாக இருந்தது.
குழந்தை இலக்கியத்தின் அடையாளமாகத் திகழ்ந்து வருகிற அழ.வள்ளியப்பா சென்னையில், பதிப்புத்துறை வித்தகரும் தனது நண்பருமான பழனியப்பாவின் வீட்டில் ஏப்ரல் 15 அன்று ஒரு முக்கியமான சந்திப்பிற்கு ஏற்பாடு செய்திருந்தார். அந்த வீடு தான் குழந்தைப் பதிப்பக அலுவலகமாகவும் அப்போது செயல்பட்டது. எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஓவியர்கள், சிறார் இதழ்களின் ஆசிரியர்கள், பதிப்பாளர்கள் என குழந்தை இலக்கியச் செழுமைக்கு வித்திடுகிற அனைத்து தரப்பிற்குமான அழைப்பு அது.