

ஸோனாலி பாலி ஆற்றின் மணலில் வெயில் சாய்ந்து விழுந்து கொண்டிருந்தது என்று துவங்குகிறது நீலகண்ட பறவையைத் தேடி நாவல். வெளிர் நீல ஆகாசம், ஸ்படிகம் போலத் தெளிந்த தண்ணீர். சுற்றிலும் தர்பூசணி விளையும் வயல்கள். பின்பனிக் காலத்தின் மாலைநேரம். கார்த்திகை மாதத்தின் கடைசி நாட்கள். வயதான ஈசம் ஷேக் அறிமுகமாகிறார். டாகுர் வீட்டு தனபாபுவிற்குப் பிள்ளை பிறந்திருப்பதாக மகிழ்ச்சியான செய்தி வருகிறது.
அந்த வீட்டை நோக்கி ஈசம் புறப்படுகிறார். அவரோடு நாமும் செல்லத் துவங்குகிறோம். கால இயந்திரத்தில் பயணிப்பது போல நாவல் நம்மை வேறு காலத்திற்குள், வேறு நிலவெளிக்குள் அழைத்துச் சென்றுவிடுகிறது.