

மனநல மருத்துவத் துறையில் இந்திய அளவில் அறியப்பட்ட ஆளுமை, மருத்துவர் லட்சுமி விஜயகுமார். 1986இல் இவர் தொடங்கிய ‘சினேகா’ என்கிற அமைப்பு, தற்கொலைத் தடுப்புப் பணிகளில் நாட்டுக்கே முன்மாதிரியாக விளங்குகிறது. ஐ.நா. போன்ற உலக அளவிலான அமைப்புகளின் மனநல மேம்பாட்டுப் பணிகளிலும் பங்கேற்றுள்ள இவரது நேர்காணல்:
மனநலச் சிக்கல் குறித்த புரிதல் சமூகத்தில் முன்பைவிட மேம்பட்டுள்ளதா? - மக்களிடையே மனத்தடை முழுமையாக நீங்கவில்லை என்றாலும், விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. மனநல மருத்துவத்துக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது; கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் மனநலம் எவ்வளவு முக்கியமானது என்பது பரவலாக உணரப்பட்டது. மனச்சிதைவு (Schizophrenia), இருமுனையக் கோளாறு (Bipolar disorder) போன்ற பிரச்சினைகள் எப்போதுமே இருக்கின்றன. கடந்த 30 ஆண்டுகளில் மன அழுத்தம், மனப் பதற்றம் (Anxiety) ஆகிய பிரச்சினைகள் அதிகரித்துள்ளன. மாற்றம் வேகமாக நடக்கிறது. நேற்று கற்றுக்கொண்டது, இன்றைக்குத் தேவையற்றதாகிவிடுகிறது.