

இன்று உலக அளவில் கொண்டாடப்படும் உலக நலவாழ்வு நாளை ஒட்டி (World Health Day), உலகச் சுகாதார நிறுவனம் (WHO) இந்த ஆண்டு முழுவதும் கர்ப்பிணிகளின் நலத்தையும், பிறக்கும் குழந்தைகளின் நலத்தையும் மேம்படுத்தும் விதமாக, ‘ஆரோக்கியமான தொடக்கம், நம்பிக்கையான எதிர்காலம்’ (Healthy beginnings, hopeful futures) என்னும் கருப்பொருளை முன்னிறுத்திச் செயல்பட உள்ளது.
தற்போது உள்ள தரவுகளின் அடிப்படையில், உலகில் ஒவ்வோர் ஆண்டும் ஏறத்தாழ 3 லட்சம் பெண்கள் கர்ப்பத்தினாலோ, பிரசவம் காரணமாகவோ தங்கள் உயிரை இழக்கின்றனர்; 20 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் பிறந்து முதல் மாதம் முடிவதற்குள் இறந்துவிடுகின்றன. மேலும், 20 லட்சம் குழந்தைகள் இறந்தே பிறக்கின்றன. இந்த இறப்புகள் எல்லாமே ‘தடுக்கக்கூடிய இறப்புகள்’ (Preventable deaths) என்னும் வகைமையில் வருவதால், இவற்றுக்கான காரணிகளைக் கட்டுப்படுத்துவதில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும் என்று உலக நாடுகளிடம் உலகச் சுகாதார நிறுவனம் வலியுறுத்துகிறது.