

அது 1965, எழுத்தாளர் நா.பார்த்தசாரதி ‘தீபம்’ என்ற பத்திரிகையைத் தொடங்கியிருந்தார். அதன் ஆரம்பக் கால இதழ்கள் ஒன்றில் ஹெப்சிபா ஜேசுதாஸனின் ‘புத்தம் வீடு’ நாவலைப் பற்றிய குறிப்பு வெளிவந்திருந்தது. அப்போதுதான் ஹெப்ஸிபா ஜேசுதாசன் என்ற பெயரும் ‘புத்தம் வீடு’ என்ற நாவலின் பெயரும் எனக்கு அறிமுகமானது.
எங்கள் பாளையங்கோட்டை, கிறிஸ்தவர்கள் அதிகம் வாழும் ஊர். அங்கேஹெப்ஸிபா என்ற பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறேன். அந்தப் பெயரில் ஒரு நாவலாசிரியர் இருக்கிறார் என்பதைத் ‘தீபம்’ இதழ் மூலம்தான் தெரிந்துகொண்டேன். ‘புத்தம் வீடு’ நாவல் பற்றி செவிவழிச் செய்தியாக அந்த நாவல் பிரசுரமாக எழுத்தாளர் சுந்தர ராமசாமிதான் காரணம் என்பது தெரியவந்திருந்தது. சுந்தர ராமசாமி ‘புத்தம் வீடு’ நாவல் பிரதியை தமிழ்ப் புத்தகாலயம் பதிப்பகம் கண.முத்தையாவிடம் கொடுத்துப் பிரசுரிக்கச் சொன்னதாகக் கேள்விப்பட்டிருந்தேன். அதன்படி 1964இல் தமிழ்ப் புத்தகாலயம் வெளியீடாக வந்த அந்த நாவலை 1972இல்தான் எனக்குப் படிக்க வாய்த்தது. திருநெல்வேலியில் பள்ளிக்கூட நூல்களை விற்பனைசெய்யும் புத்தகக் கடைகள்தான் இருந்தன. 1970 வாக்கில் எழுத்தாளர் பா.ஜெயப்பிரகாசம் நெல்லை மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்தார். அவரது அலுவலகத்தில் ‘புத்தம் வீடு’ நாவல் இருந்தது. அவரிடமிருந்துதான் அந்த நாவலை வாங்கிப் படித்தேன். ரொம்பப் பிடித்திருந்தது. பல நாட்களுக்கு லிஸி, தங்கராஜ், கண்ணப்பச்சி என எல்லாக் கதாபத்திரங்களும் மனத்தில் புரண்டுகொண்டே இருந்தன.