

அன்றாடம் என்பதே இயற்கையின் காலப் பரிமாணம் ஆகும். மானுடம் நினைவுசேகரம், அறிவுசேகரம் போன்றவற்றால் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்று பிரித்து, வரலாற்றுத் தொடர்ச்சியை உருவாக்கிக்கொள்கிறது. அதன் விளைவுகளைத் தத்துவார்த்த மானுடவியல் நோக்கில் ஆராயும் கட்டுரைத் தொடர் இது.
மானுட இருப்பு உடல், சுயம், தன்னிலை என்கிற மூன்று பரிமாணங்களில் இயங்குகிறது என்பதைக் கண்டோம். உடல் இயற்கையின் அங்கமாக உள்ளது; அது முற்றிலும் அன்றாடம் என்ற காலப்பரிமாணத்தில் இயங்குகிறது. நேற்றைக்கு உணவருந்தியதை நினைவுகொள்வதன் மூலம் இன்றைய பசியைப் போக்க முடியாது. தொடர்ந்து சுவாசிக்காமல் உடல் இயங்க முடியாது. இதனை ஒட்டி உடலின் இயக்கம் பகல், இரவு காலச்சுழற்சியில் இயங்குவதை விவாதித்தோம்.