

நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் காலத்தைத் தகவல் யுகம் என்கிறோம். ஒவ்வொரு நொடியும் நம் தேவைக்கும் அதிகமான தகவல்கள் நம்மைச் சுற்றிக் கொண்டிருக்கின்றன. தகவல்களால் சூழப்பட்டு, தகவல்களால் ஆளப்பட்டு, தகவல்களாகவே மாறிக்கொண்டிருக்கிறோம்.
ஏதேனும் ஒரு சமூக வலைத்தளத்தில் நாம் பார்வையிடும் ஒரு விஷயம், அடுத்த நொடியிலேயே, நாம் பயன்படுத்தும் அனைத்துச் செயலிகளிலும் நம் முன்னால் ஒளிர்கிறது. நம்முடைய விருப்பங்களும் சிந்தனைகளும் ஒரு சொடுக்கில் (click) தகவல்களாக மாறி நிறுவனங்களின் பயன்பாட்டுக்குச் சென்று, நம்மிடம் திரும்பிவருகின்றன. அதாவது யாரோ ஒருவரின் தேவைக்கான தகவல்களாக நாம் மாறுகிறோம்.