

எழுத்தாளர் ந.முத்துசாமி ‘பாஞ்சாலி’ என்றொரு சிறுகதையை எழுதியுள்ளார். பாஞ்சாலியாக நடிக்கும் ஒரு நடிகையின் பின்புலத்தை அடிப்படையாகக் கொண்டு இக்கதையை எழுதியுள்ளார். இவர் உருவாக்கிய கூத்துப் பட்டறை, நவீன நாடக உருவாக்கத்தில் முக்கியப் பங்காற்றி வருகிறது. பாஞ்சாலி துகிலுரிதல் கூத்தின் பின்னணியைத்தான் இக்கதை விவரிக்கிறது.
இக்கதையில் பாஞ்சாலியாக நடிக்கும் பெண் தேவதாசி மரபைச் சேர்ந்தவள். ஆனால், அவள் பாஞ்சாலியாக வேடம் புனைந்தவுடன் அனைவரும் அவளைப் பாஞ்சாலி அம்மனாகப் பார்க்கின்றனர். கூத்தில் பாஞ்சாலியின் ஆடையைத் துச்சாதனன் கலையும்போதெல்லாம் பெண்களின் தொன்ம மனம் தூண்டப்படுகிறது. பாரதக்கதை நடைபெற்ற காலமாகக் கருதப்படும் துவாபர யுகத்தின் மாந்தர்களாகவே அவர்கள் தங்களைக் கருதிக்கொள்கின்றனர்.