

கிருஷ்ணருக்கும் ஜாம்பவதிக்கும் பிறந்தவன் சாம்பன். இவன் சிறந்த உடல் நலமும் அழகும் அமையப் பெற்றவன். துரியோதனனுடைய மகளாகிய இலக்கணையை இவன் மணம் புரிந்திருந்தான். ஒருநாள் மாலையில் சாம்பன் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான். நண்பர்கள் இவனுக்குக் கர்ப்பவதி வேடம் புனைந்தனர். அங்கு விஷ்வாமித்திரர், கன்வர், நாரதர் ஆகிய மூன்று முனிவர்களும் தவம் செய்துகொண்டிருந்தனர். அவர்களிடம் சாம்பனைக் கொண்டுசென்று நிறுத்தினர். ‘இந்தப் பெண்ணுக்கு ஆண்குழந்தை பிறக்குமா? பெண்குழந்தை பிறக்குமா?’ என்று நண்பர்கள் கேட்டனர். உண்மையை உணர்ந்த முனிவர்கள், ‘உங்கள் குலத்தை அழிப்பதற்கு ஓர் இரும்பு உலக்கை பிறக்கும்’ என்று கூறினர். அவ்வாறே சாம்பனுக்கு இரும்பு உலக்கை பிறந்தது. சாபத்தின் தீவிரத்தை உணர்ந்துகொண்ட யாதவர்கள், அந்த உலக்கையைத் தூள் தூளாக்கிக் கடலில் கரைத்தனர். ஆனாலும் அதிலிருந்து தோன்றிய கோரைப் புற்கள் அவர்கள் குல அழிவுக்குக் காரணமானது. இதுதான் வியாச பாரதத்தின் மௌசல பருவம் கூறும் சாம்பனின் கதை.
சாம்பனின் பிற்பகுதிக் கதையை வடமொழிப் புராணங்கள் வேறுமாதிரியாகச் சொல்லியுள்ளன. அதிவீரராம பாண்டியர் வடமொழி நூலான சங்கரசங்கிதையைத் தழுவி, ‘காசி காண்டம்’ என்றொரு நூல் எழுதியுள்ளார். எழுத்தாளர் இமையம் ‘சாம்பன் கதை’ என்றொரு சிறுகதை எழுதியுள்ளார். ஒடுக்கப்பட்ட மனிதர்களின் யதார்த்த வாழ்க்கையின்மீது நடத்தப்படும் இடையீடுகள்தாம் இமையத்தின் புனைவுகள். எளிய மக்களின் மொழியையே தன் புனைவு மொழியாகவும் கொண்டிருக்கிறார். தற்போது தொன்மம் சார்ந்த கூறுகளையும் தம் புனைவுகளில் பயன்படுத்தி, மறுவாசிப்புச் செய்துவருகிறார். இதனை இமையத்தின் அடுத்தகட்ட நகர்வாகவும் கருதலாம். சாம்பன், யாதவர் குலத்தை அழிக்கப் பிறந்தவன் என்ற அடையாளத்தை இவரது சிறுகதை உடைக்கிறது; அவனது வரலாற்றை விரிக்கிறது.