

இயக்குநரும் கவிஞருமான பிருந்தாசாரதியின் இயக்கத்தில், சமீபத்தில் வெளியாகியுள்ள கவிக்கோ அப்துல்ரகுமான் குறித்த ஆவணப்படம், தமிழ்ப் புதுக்கவிதையில் புதிய பாய்ச்சலை நிகழ்த்திய கவிக்கோ அப்துல் ரகுமானின் வாழ்க்கையை, இலக்கியப் பங்களிப்பை சிறப்பாக பதிவுசெய்துள்ளது. அப்துல் ரகுமான் காலத்திய கவிஞர்கள், அவரால் உருவான கவிஞர்கள், அவரது படைப்புகள் மூலம் இலக்கிய உலகத்திற்குள் நுழைந்த கவிஞர்கள் ஆகிய மூன்று காலக்கட்ட ஆளுமைகளின் பார்வைகள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. அத்துடன், இந்தப் படிநிலைகளை இணைக்கும் சரடாக வளர்ந்து வரும் இன்றைய இளைய தலைமுறை இலக்கிய ஆளுமைகள் கவிக்கோ குறித்து முன் வைக்கும் கருத்துகளை ஆங்காங்கே கொடுத்துள்ளது சிறப்புக்கு உரியது.
தமிழில் ஹைக்கூ, கஸல், சூஃபி கவிதை எனப் பல புதிய கவிதை வடிவங்களை அறிமுகப்படுத்திப் பரப்பியவர் கவிக்கோ என்பதை கவிஞர்கள் அறிவுமதி, தமிழச்சி தங்கப்பாண்டியன், இயக்குநர், கவிஞர் லிங்குசாமி, கஸல் கவிஞர் ஜின்னா ஆகியோர் உதாரணக் கவிதைகளுடன் இப்படத்தில் விளக்குகிறார்கள். திராவிட இயக்கங்களோடு அரசியல் சார்புநிலை கொண்டிருந்த கவிக்கோ, இறை நம்பிக்கையும், பிற மதங்களிடம் சமய நல்லிணக்கமும் கடைப்பிடித்தவர். இலக்கியத்தில், கம்பனையும் உமர்கயாமையும் உள்வாங்கி வெளிப்படுத்தியவர். கவிராத்திரி, கவியரங்கம், இலக்கிய மேடைகள் என நிகழ்த்து வடிவங்களையும் அலங்கரித்தவர். தமிழே அவருக்கான மூலமாக இருந்தாலும், அரபும், உருதும் அறிந்திருந்த கவிக்கோ அதன் ஒலியையும், கவிதைப் படிமங்களையும் தமிழில் புகுத்தி கவிதைக்கான சொல்லாடலில் புதிய சுவை கூட்டியவர்.