புனைவுப் பாதையில் ஏற்றப்பட்ட சிற்றகல் | நாளை மற்றுமொரு நாளே
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு, ஜி.நாகராஜன் எழுதிய ‘நாளை மற்றுமொரு நாளே’ நாவல், காலம் கடந்து இன்றும் அழியாச் சுடராக நிலைபெற்றிருக்கிறது. காலவெளியில் இந்நாவல் ஒரு புதிய புனைவுப் பாதைக்கான ஒளியோடு மேலும் மேலும் பிரகாசிக்கிறது.
‘ஞானரதம்’ மாதாந்திரச் சிற்றிதழில் 1973 ஜனவரியிலிருந்து டிசம்பர் வரையான 12 இதழ்களில் இந்த நாவல் தொடராக வெளிவந்தது. பின்னர் தனது படைப்புகள் புத்தக வடிவம் பெறுவதற்கென்றே அவர் உருவாக்கிய ‘பித்தன் பட்டறை’ பதிப்பகத்தின் வெளியீடாக 1974இல் நூல் வடிவம் பெற்றது. இப்புத்தகத்தின் இரண்டாம் பதிப்பை 1983இல் ‘க்ரியா' வெளியிட்டது. அதன் பின்னரே நாவல் பரவலான கவனிப்புக்கு உள்ளானது. 2010இல் பெங்குவின் பதிப்பக வெளியீடாக ‘டுமாரோ ஒன் மோர் டே’ என்கிற தலைப்பில் ஆங்கிலத்தில் வெளிவந்தது. மலையாளக் கவிஞர் ஆற்றூர் ரவிவர்மா ‘நாள மற்றுமொரு நாள் மாத்ரம்’ என்கிற தலைப்பில் மலையாளத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
