

அமெரிக்க எழுத்தாளர் கென் கேசியின் ‘ஒன் ஃப்ளு ஓவர் தி குக்கூ’ஸ் நெஸ்ட்’ (one flew over the cuckoo’s nest), பிப்ரவரி 1, 1962இல் வெளிவந்து பெரும் கவனம் பெற்ற நாவல். இந்த நாவல் இதே பெயரில் படமாகவும் வெளிவந்து வெற்றிபெற்றது. இந்த நாவலின் பாதிப்பில் ஒரு இந்தியப் படம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகியுள்ளன.
இந்த நாவல் ஒரு மன நல விடுதியை மையமாகக் கொண்டது. அந்த மன நல விடுதிக்கு வந்துசேரும் ஒரு இளைஞன் அந்தச் சூழலையே மாற்றிவிடுகிறான். அங்குள்ள சட்ட திட்டங்கள் எல்லாம் தவிடுபொடியாகின்றன. அந்த மன நல மருத்துவமனையை ஆட்சிசெய்துவரும் ஒரு செவிலிக்கு இதெல்லாம் பிடிக்கவில்லை. அதனால் அவன் மெளனிக்கப்படுகிறான். மன நல மருத்துவமனையை ஒரு உருவகமாகக் கொண்டால் இந்தச் சூழலை எவற்றுடனும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். ஒரு வீட்டுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம்; ஒரு நாட்டுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். மெக்மர்பி என்கிற அந்த இளைஞனின் வெள்ளந்தித்தனமும் துறுதுறுப்பும் நாவலில் சிறப்பாகச் சொல்லப்பட்டிருக்கும்.