

நகரமயமாக்கல், தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றின் காரணமாக உலகில் நுகர்வுக் கலாச்சாரம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துவருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் தனிநபர் நுகர்வு பெரிதும் அதிகரித்துள்ளது. இது அதிகக் கழிவு உருவாக வழிவகுக்கிறது. மறுபுறம், மறுசுழற்சிக் கழிவுகளும் முறையாக நிர்வகிக்கப்படுவதில்லை. இப்படியான சூழலில், கழிவு மேலாண்மைத் துறையின் வளர்ச்சி அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் வேகமாக வளரவில்லை.
தெருக்கள், சாலைகள், சந்திப்புகள், ஆற்றங்கரைகள் உள்ளிட்ட இடங்களில் மறுசுழற்சிக் கழிவுகளோடு சேர்த்து சட்டவிரோதமாகக் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால் பூமிக்கு உண்டாகும் பாதிப்பை அறிவதற்குக்கூட மக்கள் தயாராக இல்லை. முறைசாராக் குப்பை பொறுக்குபவர்களின் (Informal waste pickers அல்லது rag pickers) பங்களிப்பு காரணமாகவே திடக்கழிவு மேலாண்மைத் துறை ஓரளவு தப்பிப்பிழைக்கிறது.