

“இந்தியாவுக்குச் சுதந்திரம் வழங்கப்பட்டால், அதிகாரத்துக்காக இந்தியர்கள் தங்களுக்குள் மோதிக்கொள்வார்கள்; அரசியல் சச்சரவுகளில் சிக்கி இந்தியா சீர்குலைந்துவிடும்” என்று பிரிட்டன் நாடாளுமன்றத்தின் மக்களவையில் அன்றைய பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் இறுமாப்புடன் பேசினார். அவரைப் போலவே மேற்கத்திய நாடுகளைச் சார்ந்த பலரும் பேசியும் எழுதியும் வந்தனர்.
ஆனால், அந்தக் கணிப்புகளை முறியடித்தது சுதந்திர இந்தியா! எண்ணற்ற சவால்கள், பலவீனங்களைக் கடந்து, இறையாண்மைமிக்க, சோஷலிச, மதச்சார்பற்ற, ஜனநாயகக் குடியரசாக சுதந்திர இந்தியா சீராக முன்னேறிவருகிறது. இதற்கு அடித்தளமாக இந்திய அரசமைப்பு திகழ்ந்துவருகிறது. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 75ஆவது ஆண்டு நிறைவுறும் வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் இது.