

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், வெற்றிகரமாகத் தேர்தல்களை நடத்திவருகிறது தேர்தல் ஆணையம். அரசமைப்பு அமைப்பான தேர்தல் ஆணையம் தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. ஜனநாயத்தின் ஆணிவேரான வாக்காளர்கள் தினம் (ஜன. 25) நாளை கொண்டாடப்படும் நிலையில், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் முன்னாள் தலைமை ஆணையர் என்.கோபாலசுவாமி ‘இந்து தமிழ் திசை’க்கு அளித்த பேட்டி:
வாக்கு இயந்திரங்கள் நடைமுறைக்கு வந்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டன. என்றாலும் அதன் நம்பகத்தன்மை குறித்தும் வாக்குச்சீட்டு முறையிலேயே தேர்தலை நடத்த வேண்டும் என்கிற கோரிக்கைகளையும் எப்படிப் பார்க்கிறீர்கள்? - தேர்தலில் வெற்றி பெற்றால் வாக்கு இயந்திரம் பற்றி வேறு மாதிரி பேசுவார்கள். தோல்வி அடைந்தால் வாக்கு இயந்திரம் தவறு என்று சொல்வார்கள். உச்ச நீதிமன்றத்திலேயே இது சார்ந்து பல வழக்குகள் தொடுக்கப்பட்டன. ‘நீங்கள் வெற்றி பெற்றால் வாக்கு இயந்திரம் சரி, தோற்றால் தவறா?’ என்கிற கேள்வியை உச்ச நீதிமன்றமே எழுப்பியுள்ளது. இதைப் பற்றி மேலும் பேசுவதில் பெரிய அர்த்தம் இல்லை.