

சென்னை பன்னாட்டுப் புத்தகக் காட்சியில் இலக்கிய முகவர்களாக இளம் படை களமிறங்கவுள்ளது. தமிழ்நாடு அரசு இளைஞர்களைத் தேர்வுசெய்து, பயிற்சி கொடுத்துப் புத்தகக் காட்சிக்குத் தயார்ப்படுத்தும் அரும்பணியைச் செய்துள்ளது. இந்திய, சர்வதேசப் பதிப்பாளர்களுடன் தங்கள் பேச்சுவார்த்தையை இவர்கள் ஏற்கெனவே தொடங்கிவிட்டனர். அவர்களில் சிலரைப் பற்றிய அறிமுகம்:
தேன்மொழி: ஓராண்டாக இலக்கிய முகவராகப் பணியாற்றிவருகிறார். தமிழின் மூத்த எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் ‘கோபல்ல கிராமம்’. ‘கோபல்லபுரத்து மக்கள்’ ஆகிய இரு நாவல்களுக்கான உரிமங்களை வைத்திருக்கிறார். இவை அல்லாமல் சு.தமிழ்ச்செல்வியின் இரு நாவல்கள் உள்ளிட்ட நான்கு எழுத்தாளர்களின் உரிமங்களையும் வைத்திருக்கிறார். கிராவின் நாவலை மலையாளத்தில் மொழிபெயர்க்க வெற்றிகரமான முகவராகச் செயல்பட்டுள்ளார்.