

இந்தியாவின் நாளைய சமூகமே குழந்தைகளும் இளைஞர்களும்தான். ஆனால், நாட்டின் எதிர்காலமான அவர்களில் பலரின் நிகழ்காலம் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதுதான் சமகாலப் பெரும் அவலம். தற்போதைய சமூகக் கட்டமைப்பில் குழந்தை வளர்ப்பிடமாகக் குடும்பங்கள் இருக்கின்றன. ஆனால், பல குடும்பங்களில் குழந்தைகளுக்குப் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. இவ்வாறான சூழ்நிலைகளால் குழந்தைகளின் உடல்நலன், மனம், கல்வி, முன்னேற்றம் ஆகியவை பின்தங்கியிருப்பதை உணரலாம். இது ஒரு நாட்டுக்குப் பின்னடைவை ஏற்படுத்தும் அவலச் சூழல்.
பாதுகாப்பின்மையால் நிகழ்ந்த திருமணம்: ராணிப்பேட்டை மாவட்டத்தின் அமராபுரம் என்கிற கிராமத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தின் நிலையை உதாரணமாகச் சொல்லலாம். அக்குடும்பத்தின் தலைவர் மாற்றுத்திறனாளி. மூன்றாண்டுகளுக்கு முன் அவர் குளத்தில் தண்ணீர் குடிக்கச் சென்றபோது தவறி விழுந்து இறந்துவிட்டார். அதன் பின்னர், கூலி வேலை செய்து தன் குழந்தைகளைக் காப்பாற்றி வந்தார் அவரது மனைவி. அவரும் சமைப்பதற்கான காய் பறிக்க மரத்தில் ஏறியபோது தவறி விழுந்ததால், இடுப்புக்குக் கீழான அவரது இயக்கம் முடங்கிவிட்டது.