

எஸ்.ராமகிருஷ்ணன், முன்னணி எழுத்தாளர். அரசியல், சமூக மாற்றத்தால் சிதையும் வாழ்க்கையை எளிய மனிதர்கள் பக்கம் நின்று சொல்பவை இவரது கதைகள். ‘யாமம்’, ‘உறுபசி’, ‘உபபாண்டவம்’ உள்ளிட்ட பல நாவல்களை எழுதியுள்ளார். இருபதுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் வெளிவந்துள்ளன. திரைத்துறையிலும் பங்களித்துள்ளார். சாகித்திய அகாடமி விருது, தாகூர் விருது, இயல் விருது உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றுள்ளார். இந்தப் புத்தகக் காட்சியை ஒட்டி இவரது ‘கவளம்’ சிறுகதைத் தொகுப்பு உள்பட நான்கு நூல்கள் தேசாந்திரி பதிப்பகம் (அரங்கு எண்: 334, 335 ) வெளியிட்டுள்ளது.
‘கவளம்’ சிறுகதைத் தொகுப்பு குறித்து...
எனது ஒவ்வொரு சிறுகதைத் தொகுப்பை எழுதும்போது என் மனம் ஒரு குறிப்பிட்ட விஷயத்தை நோக்கி இயங்கும். இது எழுதும்போது எனக்குத் தெரியாது. இந்தச் சிறுகதை நூல் உணவு சார்ந்து, உணவுப் பண்பாடு சார்ந்து அது ஏற்படுத்தும் நல்லது, கெட்டதுகள் பற்றியதாக அமைந்துள்ளது. நமக்குத் தெரிந்த மனிதர்கள், தெரியாத பக்கங்கள் இருப்பதில்லையா? இது இந்தத் தொகுப்பின் பிரதான அம்சமாக இருக்கிறது. சாவு வீட்டில் திருடுபவனைப் பற்றி இதில் ஒரு கதை இருக்கிறது. சாவு வீட்டில் யாரும் எதையும் கவனிக்க மாட்டார்கள். அந்த நேரம் வீட்டுக்குள் நுழைந்து பொருள்களைத் திருடிச் செல்வான் ஒருவன். அவன் சாவு வீட்டின் அபத்தங்களையும் சொல்கிறான். இந்தத் தொகுப்பில் இதுபோல் 11 சிறுகதைகளும் 17 குறுங்கதைகளும் உள்ளன. குறுங்கதைகள் கதைக்கும் கவிதைக்கும் நடுவில் எழுதப்பட்டது.
தலைப்புக் கதையான ‘கவள’த்தில், தவிர்க்க முடியாமல் இழைக்கும் குற்றம், அதிலிருந்து மீள நினைக்கும் பதைபதைப்பும் சொல்லப்பட்டிருக்கிறது...
நம் செயல்களுக்குப் பின் விளைவு இருக்குமோ என்கிற அச்சம் நம்மில் பலருக்கும் இருக்கும். நம் செயல்கள் நம்மைப் பாதிக்கும் என நினைக்கிறார்கள். இதில் நல்ல செயல்கள், நல்லதையும் கெட்ட செயல்கள், கெட்டதையும் உருவாக்கும் என நம்புகிறார்கள். இந்தக் கதையில் போலீஸ்காரர் நோய்வாய்ப்படுகிறார். அது தான் இழைத்த குற்றத்தின் காரணம் என அவர் நினைக்கிறார். பொதுவாக இந்த மாதிரியான பிரச்சினைகளுக்குக் கோயிலில் பிராயச்சித்தம் தேடுவார்கள். யாருக்குக் குற்றமிழைத்தோமோ அவர்கள் வீட்டில் ஒரு வாய் சாப்பிட்டால் அவர்கள் குற்றத்தை மன்னித்ததாக இவர் கருதுகிறார். நம் பண்பாட்டில் ஒரு பகையாளி வீட்டில் கை நனைத்துவிட்டால் பகை முறிந்துபோய்விட்டதாகப் பொருள். ஆனால், என் நோக்கம் இவரைப் பற்றி எழுதுவது அல்ல. போலீஸ்காரருக்கு ஒரு மகள் இருக்கிறாள். இந்த வீட்டில் கணவனை இழந்த மனைவி இருக்கிறாள். தன் அப்பாவுக்காக அவள் வந்து இவளிடம் கேட்டுக்கொண்டே இருக்கிறாள். தன் கணவன் உயிர் போகக் காரணமானவன் எனக் கணவனுக்காக அதை இவள் மறுத்துக்கொண்டே இருக்கிறாள். இந்த இருவருக்காகவும் அந்தக் கதையை எழுதினேன்.
உங்கள் சிறுகதை பல கால இடைவெளியில் நிறைய மாற்றங்கள் அடைந்துவருகின்றன...
கதைகளை, முதலில் நம்மைச் சார்ந்த விஷயங்களிலிருந்து எழுதுகிறோம். பிறகு வரலாற்றிலிருந்து எழுதுகிறோம். தொடர்ந்து எழுதுவதன் வழியாகக் கதைக்கு முக்கியம் அதன் மொழியும் வடிவமும்தான் எனப் புரிந்துகொள்கிறோம். எதை வேண்டுமானாலும் நீங்கள் கதையாக்கலாம். அதற்கு ஒரு மொழியும் வடிவமும் முக்கியம். கதைக்கு முதல் வரிதான் முக்கியம் என்றார்கள். பிறகு கதையின் கடைசி வரிதான் முக்கியம் என்றார்கள். இப்போது கதையின் முதல் வரியும் கடைசி வரியும் முக்கியமல்ல. அது, தானே நிகழ்ந்துவிடும். கதையின் மையம்தான் கதை. வளர வளர கதையின் அடிப்படையைச் சொன்னாலே போதும் என்று தோன்றியது. பசியைப் பற்றிய, குற்றவுணர்வு பற்றிய எண்ணங்களை நீக்கிவிட்டால் இன்றைய மனிதனும் குகை மனிதனும் வேறு வேறு இல்லை. அதனால் அடிப்படையான விஷயங்கள் நோக்கி நகர ஆரம்பித்தேன். கதைகளை வேறு வேறு முனைகளை விரித்து விரித்துப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
நாவல், சிறுகதை இரண்டுக்குமான பொருளை எப்படித் தேர்ந்தெடுக்கிறீர்கள்?
இரண்டுக்குமான பொருளும் முற்றிலும் வேறுபட்டது. நாவல், கதை சொல்வதற்கான வடிவம் கிடையாது. கதை வழியாகப் பலதும் சொல்லப்படுவதற்கான வடிவம். சமூக விஷயங்கள், வரலாறு, உளவியல் விஷயங்கள், உண்மைகள் எனப் பலதும் சொல்லப்படலாம். ஒரு நாவல் பல்வேறு விஷயங்கள் கொண்ட ஒரு பெரிய இடம். அதற்குள் நிறைய நடக்கலாம். அதற்குள் நாடகம் இருக்கிறது. கவிதை இருக்கிறது. நிறைய இசைக் கருவிகள் சேர்ந்து இசைக்கக் கூடிய ஒரு சிம்பனி மாதிரி அது. சிறுகதையை உங்கள் நினைவின் பலத்தில் எழுதிவிட முடியும். ஆனால், நாவலுக்குக் கொஞ்சம்தான் உங்கள் நினைவு பயன்படும். புனைவுக்குப் பின்னால் இருக்கக்கூடிய ஆழ்ந்த பார்வையும் வாழ்க்கையைப் பற்றிய உங்கள் தரிசனங்களும் சேர்ந்துதான் நாவல் உருவாகும். நாவல்களில் ஒரு வரலாறு இருக்கிறது. அது வரலாற்றில் இல்லாத வரலாறு. வரலாற்றில் வெற்றி, தோல்விகளே எழுதப்பட்டிருக்கும்போது இவற்றுக்குப் பின்னால் உள்ள மனிதர்கள் யார், அவர்கள் என்ன செய்தார்கள், எங்கிருந்து வந்தார்கள், அவர்களின் அன்றாடம் என்ன என்பன பற்றியெல்லாம் நாவல்தான் சொல்கிறது. நாவலாசிரியர்கள் வரலாற்றை எழுதவில்லை என்றால் வரலாறு உறைந்துபோனதாகத்தான் இருந்திருக்கும்.
நாவல் நிறைய கதைகளின் தொகுப்பா?
பல்வேறு நிகழ்ச்சிகளின் தொகுப்பு. ஒரு நிகழ்ச்சி இன்னொரு நிகழ்ச்சியுடன் இணைந்து புதிதாக வேறு வேறு நிகழ்ச்சிகளை உருவாக்குகிறது. நிறைய நேரங்களில் ஒரு நிகழ்ச்சியை நோக்கியே நாவல் பயணமாகிறது. கதை என்பது ஒரு இடத்தில் தொடங்கி இன்னொரு இடத்தில் முடிவடைய வேண்டும் என்று நினைக்கிறோம். அது முடிவில்லா கயிறு. நீங்கள் சிறுகதையில் பார்ப்பது அதன் ஒரு முழத்தைத்தான். ஒரு நாவலில் உப்பும் இருக்கிறது. தேனும் இருக்கிறது. அவைதான் நாவலைக் கெட்டுப்போகவிடாமல் நூறு, இருநூறு வருடங்களாகப் படிக்கவைக்கிறது. உப்பு என்பது வாழ்க்கையின் சிக்கல் எனலாம். நாவலின் அபூர்வமான தருணங்களைத் தேன் எனலாம்.
நாவலை எந்த மையத்திலிருந்து தொடங்குகிறீர்கள்?
உதாரணமாக ‘யாம’த்தில் அரூபமான விஷயத்தை நாவலின் மையமாக வைத்துக்கொள்ள வேண்டும் என நினைத்தேன். யாமம் என்கிற ஒரு வாசனைத் திரவியத்தை வைத்துக்கொண்டேன். அதைத்தான் இரவு என்றும் வைத்துக்கொண்டேன். இரவைப் பற்றி எழுதும்போது எல்லா ஊருக்கும் இரவு ஒன்றுதானா என்ற கேள்வி எழுந்தது. எல்லா ஊருக்கும் ஒரே இரவு என்று தெரிந்தாலும் அது வேறு வேறுதான். இரவு ஓய்வெடுக்கும் நேரம் இல்லை. இரவு ரகசியங்களால் ஆனது. இரவின் கண்ணீரும் சிரிப்பும் எழுதப்படவில்லை. இதன் மையம் ஒரு நகரத்தின் இரவு என வைத்துக்கொண்டேன். அதை எழுதுவதற்கான ஒரு படிமமாக ஒரு வாசனைத் திரவியத்தை எடுத்துக்கொண்டேன்.
இன்றைக்குள்ள கதைகள் எப்படி இருக்கின்றன?
புதிய புதிய கதைக் களங்களில் புதியவர்கள் பலரும் எழுதுகிறார்கள். தமிழ்ச் சிறுகதைக்கு ஒரு பன்மைத்துவம் வந்திருக்கிறது. ஆனால், ஒவ்வொரு பத்தாண்டில்தான் அதன் முகத்தை நம்மால் பார்க்க முடியும். இப்போது பார்த்தால் அது பெரும்பாலும் நகர்சார் வாழ்க்கையைத்தான், குறிப்பாக 20, 35 வயதுக்காரனின் உலகம்தான் எழுதப்பட்டிருக்கிறது. இந்த நகரத்தின் நுகர்சார் வாழ்க்கையையும் எழுதுகிறார்கள். சென்னையைப் பற்றி கன்னடத்தில் திவாகர் எழுதியிருக்கிறார். மலையாள எழுத்தாளர்களும் எழுதியிருக்கிறார்கள். அவை நாம் பார்க்காத கோணத்தில் இருக்கின்றன. இம்மாதிரி கோணத்தில் கதைகள் எழுதப்பட வேண்டும். அதை எழுதுவதற்கான திறனுள்ள படைப்பாளிகள் இப்போது வந்திருக்கிறார்கள்.
- தொடர்புக்கு: jeyakumar.r@hindutamil.co.in