

சாரு நிவேதிதா, ’ செங்கல் குவியலிலே தனிக்கல் ஒன்று சரிகிறது’ என்கிற ஞானக்கூத்தனின் வரிகளைப் போல் தமிழின் வித்தியாசமான கதைசொல்லி. பத்தி எழுத்துக்குரிய சுவாரசியத்தையும் நாவலுக்குரிய ஆழத்தையும் ஒருசேரக் கொண்டவை அவர் படைப்புகள். ‘எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும்’ அவரது முதல் நாவல். ‘ஸீரோ டிகிரி’ உள்ளிட்ட 8 நாவல்கள், 9 சிறுகதைத் தொகுப்புகள், 20க்கும் மேற்பட்ட கட்டுரைகள் வெளிவந்துள்ளன. ‘நான் தான் ஔரங்ஸேப்’ என்கிற அவரது நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்புக்காக இந்திய இலக்கியத்தின் உயரிய விருதான க்ராஸ்வேர்டு விருதுபெற்றுள்ளார். அது குறித்து மேற்கொள்ளப்பட்ட நேர்காணல் இது.
க்ராஸ்வேர்டு விருது கிடைத்துள்ளது பற்றி... எனக்குக் கிடைத்திருக்கும் இந்த விருது நடுவர் விருது கிடையாது; மக்கள் தேர்வு விருது இது. நடுவர்கள் விருது என்றால் எனக்குக் கிடைத்திருக்காது. ஏனென்றால் நடுவர்கள் பழசாக இருக்கிறார்கள். என்னை தருண் தேஜ்பாலின் நண்பராகப் பார்க்கிறார்கள்.
அவர் இலக்கியத்தில் தீண்டத்தகாதவராகப் பார்க்கப்படுகிறார். என்னையும் அப்படியே பார்க்கிறார்கள். மேலும் இந்த ஆயிரம் பக்கத் தமிழ் நாவலை, 350 பக்கமாகக் குறைக்க ஒப்புக்கொண்டேன். அதனால் அது பென்குயின் பதிப்பகத்தில் வெளிவந்து கவனம் பெற்றுள்ளது.
இமையத்தின் ‘செல்லாத பண’மும் பெருமாள் முருகனின் ‘ஆளண்டாப்பட்சி’யும் உங்களுடன் போட்டிபோட்ட தமிழ் நாவல்கள்... பெருமாள்முருகன், இந்தியா முழுவதும் அறியப்படுகிற இலக்கிய சூப்பர் ஸ்டார். ராகுல் காந்தி மாதிரி பலரும் விரும்பும் எழுத்தாளர். அதனால் இந்தியா முழுவதும் பலரும் அவருக்குத்தான் வாக்களித்திருப்பார்கள். எனக்குக் கிடைக்க வாய்ப்பில்லை என்றுதான் நினைத்தேன். ஆனால், எனக்குத் தமிழ்நாட்டிலிருந்து பெரும்பாலானவர்கள் வாக்களித்திருக்கிறார்கள்.
‘நான்தான் ஒளரங்ஸேப்’ நாவலின் பின்னணி என்ன? - வரலாற்றைப் பொருத்தவரை வெகுஜன மனத்துக்கு ஒரு ஹீரோவும் ஒரு வில்லனும் தேவைப்படுகிறது. நமக்கு ஹீரோ ஷாஜகான். ஏனென்றால் அவர் தாஜ்மஹாலைக் கட்டியிருக்கிறார். இவருக்கு ஒரு வில்லனும் வேண்டுமல்லவா, அவர்தான் ஒளரங்கசீப். ஆனால், ஹீரோவாகப் பார்க்கப்படும் அசோகர்கூட, தன் சகோதரர்கள் பலரையும் கொன்றுதான் பதவிக்கு வந்தார்.
ஒளரங்கசீப்பும் இதையேதான் செய்தார். அக்பரும் செய்துள்ளார். ஆனால், நமக்கு வில்லன் வேண்டும் என்பதால் ஒளரங்கசீப்பை மட்டும் வில்லனாக்கிவிட்டோம். உண்மையில் குரானை முறையாக ஓதி, தொப்பிகள் தைத்து விற்று எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர் ஒளரங்கசீப். சொற்ப சேமிப்பை தனது இறப்புச் சடங்குக்காகச் சேமித்துவைத்தவர் அவர். ஒளரங்கசீப் இந்துக் கோயில்களுக்கு மானியம் கொடுத்திருக்கிறார்.
இந்த நாவலுக்கான தொடக்கப்புள்ளி எது? - தியாகராஜ பாகவதர் வரலாற்றை எழுதும்போது தஞ்சை சரபோஜி மகாராஜாவைப் பற்றித் தெரிந்துகொள்ள முடிந்தது. அவரது அரசவையில்தான் தியாகராஜ பாகவதரின் தந்தை அரசவைக் கவிஞராக இருந்தார். அந்த மகாராஜா மராட்டிய மரபைச் சேர்ந்தவர் என்பதால் அது என்னை சிவாஜியிடம் கூட்டிச் சென்றது.
சிவாஜியைப் பற்றி வாசிக்கும்போது ஒளரங்கசீப்பைப் பற்றித் தெரிந்துகொண்டேன். அப்படித்தான் ஒளரங்கசீப், தன் மகன்களுக்கு எழுதிய ஒரு 100 கடிதங்களை வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அவை ஒரு கவிஞன் எழுதியதுபோல, ஒரு சூஃபி ஞானி எழுதியதுபோல் இருந்தன. அப்படித்தான் இந்த நாவலுக்குள் நுழைந்தேன்.
உங்கள் எழுத்து, புனைவுக்கும் கட்டுரைக்கும் இடையிலானது... என்னோட வாழ்க்கையே ஒரு புனைவுதான். அது நீங்கள் நம்ப முடியாதது. சினிமாவின் கனவுத் தாரகையாக இருக்கும் ஒருவர், எனக்குக் காதல் குறுஞ்செய்தி அனுப்புவார். ஒரு பெரிய பிரபலம், நான் ஒரு வார இதழில் தொடர் எழுதியபோது உங்கள் உயிருக்கு ஆபத்து இருக்கிறது எனச் சொன்னார். அவர் தமிழக அரசியலில் முக்கியமான நபர். ஆனால், இதைச் சொன்னால் உங்களால் நம்ப முடியாது. இது யதார்த்தம்தான். ஆனால், கதை மாதிரிதானே இருக்கிறது? ஆங்கிலத்தில் ‘My Life, My Text’ என ஒரு கட்டுரைத் தொடர் எழுதுகிறேன். அது புனைவு மாதிரி இருப்பதாகச் சொல்கிறார்கள்.
இந்த வகை எழுத்துக்கு உங்களுக்கு முன்னோடி யார்? - பிரெஞ்சில் எழுதக்கூடிய ஒருவர். ஆனால், அவர் நாவல்கள் எதுவும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படவில்லை. அவர் பெயர் ஜூலியன் செர்ஜ் டூப்ரோவ்ஸ்கி. ‘ஜீரோ டிகிரி’ வாசித்துவிட்டு எனக்கு எழுதியிருக்கிறார். இந்த முறையை ‘Autofiction’ என்கிறார்கள். இதை உருவாக்கியவர் டூப்ரோவ்ஸ்கிதான். இந்த முறையில் எழுதுபவர்கள் குறைவுதான்.
நம்முடைய வாழ்க்கையையே இதற்காகப் பலிகொடுக்க வேண்டியிருக்கும். வில்லியம் எஸ்.பர்ரோஸ் ‘நேக்டு லஞ்’சில் (Naked Lunch) எழுதியிருக்கிறார். பிரேதங்களின் மீது நடந்துசெல்வேன் என நானே எழுதிருக்கிறேன். என் கதை என்பது அப்பா, நண்பர்கள், மனைவி இவர்களின் கதைதானே? என் காதலிகளின் கதையை எழுதும்போது கீழே என் மனைவியின் பிரேதம்தானே இருக்கும்?
உங்கள் எழுத்து, கலாச்சார அதிர்ச்சியை ஏற்படுத்தக்கூடியது. இதைத் திட்டமிட்டுச் செய்கிறீர்களா? - கேரளத்தில் நான் அருந்ததி ராய் மாதிரி. ஏதாவது போராட்டம் என்றால் என்னைக் கூப்பிடுவார்கள். “தமிழ்நாட்டில் நடக்கும் சமூகப் போராட்டங்களில் ஏன் கலந்துகொள்வதில்ல்லை?” என ஒரு நண்பர் கேட்டார். “இங்கே சமூகத்துக்கு எதிராகவே நான் போராடுகிறேனே” எனப் பதில் சொன்னேன்.
மொத்த சமூகமும் சினிமா பின்னாடி போய்க்கொண்டிருக்கிறது. நான் சமூகத்துக்கு எதிராகவே போராடுகிறேன். அதனால் இதைத் திட்டமிட்டேதான் செய்கிறேன். பெருமாள்முருகனுக்குப் பேச ஒரு நீதிபதி இருந்தார். என் வழக்கு நீதிமன்றம் போனால் அங்கேயும் எனக்கு ஆதரவு கிடைக்காது.
ஏற்கெனவே எழுதப்பட்ட ஒரு வரலாற்றின் மீது குறுக்கீடு நிகழ்த்தும் இந்தப் பாணியை (palimpsest) ஏன் தேர்வுசெய்தீர்கள்? - நீங்கள் சொல்வதுபோல் இது ஒரு palimpsest நாவல்தான். ஆனால், அதைத் திட்டமிட்டு உருவாக்கவில்லை. எழுதி முடித்த பிறகு விமர்சகர்கள் அப்படி வகை பிரிக்கிறார்கள்.
நவீனத் தமிழ் இலக்கியம் எப்படி இருக்கிறது? - ஆரோக்கியமாக இல்லை கு.ப.ராஜகோபாலன், எம்.வி.வெங்கட்ராமன், தி.ஜானகிராமன், சி.சு.செல்லப்பா, க.நா.சுப்ரமணியன், சார்வாகன், மெளனி, ஆதவன், அசோகமித்திரன், தி.ஜ.ரங்கநாதன் இப்படி 50 வருஷத்துக்கு முன்னாடி இவ்வளவுபேர் இருந்தார்கள். புதுமைப்பித்தனெல்லாம் தமிழில் மறுமலர்ச்சியை உண்டுபண்ணிய எழுத்தாளர். ஏ.என்.சிவராமன் என்று ஒரு பத்திரிகையாளர் இருந்தார். கக்கன், காமராஜர் போன்ற அரசியல்வாதிகள் இருந்தார்கள். இன்றைக்கு இவர்கள் மாதிரியான ஆள்களைப் பார்க்க முடிவதில்லை.
அப்படித்தான் இலக்கியத்திலும். தி.ஜ.ரங்கநாதன், காந்தி கலந்துகொண்ட ஒரு காங்கிரஸ் மாநாட்டில் கலந்துகொள்கிறார். முடிந்ததும் பரபரப்பாக வீட்டுக்குக் கிளம்புகிறார். “ஏன் இருந்து எல்லாரையும் பார்த்துவிட்டுப் போ” எனச்சொல்கிறார் ஒரு தலைவர். “காலையில் என் மகன் இறந்துவிட்டான்.
நான்தான் காரியம் செய்ய வேண்டும்” எனப் பதில் சொல்லியிருக்கிறார். “யோவ் நீயெல்லாம் மனுஷனாயா?” எனக் கேட்டார் அவர். “இல்லை நான் தொண்டன்” என்றாராம் இவர். இப்படி ஒருவரை இன்று பார்க்க முடியுமா? இலக்கியவாதிகளுக்கு இந்தத் தைரியம் இருக்கிறதா?
க்ராஸ்வேர்டு விருது: சாரு நிவேதிதா
- தொடர்புக்கு: jeyakumar.r@hindutamil.co.in