

இன்றைக்குத் திரைப்பாடல் எழுதும் பலருக்கும் அபிபுல்லா சாலையில் இருந்த கவிஞர் அறிவுமதியின் அலுவலகமே ஆரம்ப முகவரியாக இருந்தது. திராவிட இயக்கக் குடும்பப் பின்னணியுடைய அவர், எழுத்தினால் ஈர்த்த ஓர் இளைஞர் கூட்டத்தை வழிநடத்தி, அவர்கள் வாழ்விலும் முன்னேற்றத்திலும் அதீத அக்கறையைக் காட்டியிருக்கிறார்.
தமிழகத்தின் குக்கிராமங்களில் இருந்து கிளம்பிவரும் இளம் எழுத்தாளர்களுக்கு, சகல வசதிகளையும் ஏற்படுத்திக்கொடுத்து ஆக்கமாகவும் ஊக்கமாகவும் இருந்திருக்கிறார் அறிவுமதி. சமயங்களில் தமக்குக் கிடைத்த வாய்ப்புகளைப் பகிர்ந்தளித்துப் பரவசப்பட்டிருக்கிறார்.
அடிப்படையில் தமிழ் மாணவனாக இருந்த அறிவுமதி, திரைத்துறையில் தம்மை ஓர் இயக்குநராக ஆக்கிக்கொள்ளவே ஆசைப்பட்டிருக்கிறார். பாரதிராஜா, பாலுமகேந்திரா, கே.பாக்யராஜ், எம்.ஜி.வல்லபன் ஆகியோரிடம் இணைந்து பணியாற்றி உள்ளார். எண்ணியது ஒன்று, இயங்கியது மற்றொன்று என்பதாகக் காலம் அவரை அற்புதமான பாடலாசிரியர் ஆக்கியிருக்கிறது.
திரையிலக்கியப் பயிற்சியும் திராவிட இயக்கப் பின்புலமும் அவருடைய பாடல்களைத் தனித்துவமிக்கதாகக் காட்டுகின்றன. எளிய சொற்களே ஆனாலும், அவற்றிலும் இலக்கிய நுகர்வுக்கான சாத்தியங்களை ஆக்கி அளித்திருக்கிறார். அந்தவிதத்தில், ‘சிறைச்சாலை’ திரைப்படத்திற்கு அவர் எழுதிய வசனங்களும் பாடல்களும் தன்னிகரில்லாதவை. ஒரு மொழிமாற்றுத் திரைப்படத்தில் இலக்கியத்தரம் வாய்ந்த பாடல்களையும் வசனங்களையும் அவரால் எழுத முடிந்திருக்கிறது. வசனங்களிலும் உதட்டசைவிற்கு ஏற்ப அவர் நடத்தியிருக்கும் தமிழ் விளையாட்டு, அதை ஒருமொழி மாற்றுப் படமென்பதையே மறக்கடித்திருக்கிறது.
அதற்கு முன் பாடல் எழுதியிருந்தாலும் இளையராஜாவின் இசையில் அவரெழுதிய ‘ராமன் அப்துல்லா’ படத்தில் ‘முத்தமிழே முத்தமிழே’ அவரைத் திரும்பிப் பார்க்க வைத்தது எனலாம். ‘காதல்வழிச் சாலையிலே வேகத்தடை ஏதுமில்லை/நாணக்குடை நீ பிடித்தும் வேர்வரைக்கும் சாரல்மழை’ என்கிற வரிகள் திரைத்தமிழைத் தீவிர இலக்கியமாக உயர்த்தியிருக்கின்றன. அடிப்படையில், ஒரு கவிஞன் பாடலாசிரியனாகித் திரைப்பாடலை எழுதுவதற்கும், பாடலாசிரியனாக மட்டுமே அறியப்பட்டவர் எழுதுவதற்கும் நிறைய வித்யாசமுண்டு.
அது என்னமாதிரியான வித்யாசமென்பதை அறிவுமதியின் பாடல்களைக் கேட்பவர்க்குப் புரியும். ‘அணுஅணுவாய்/வாழ்வதற்கும் சாவதற்கும்/முடிவெடுத்த பிறகு/காதல் சரியான வழிதான்’ எனக் கவிதைகளில் எழுதிய அவர், அதே உணர்வுகளைத் திரைப்பாடல்களிலும் கொண்டுவர முயன்றிருக்கிறார்.
‘பிரியாத வரம்வேண்டும்’ திரைப்படத்தில் ‘பிரிவொன்றைச் சந்தித்தேன் முதல்முதல் நேற்று/நுரையீரல் தீண்டாமல் திரும்புது காற்று’ என எஸ்.ஏ. ராஜ்குமார் இசையில் ஒரு பாடலை எழுதியிருக்கிறார். முழுக்க முழுக்க அப்பாடல்வரிகள் கவிதையில் தோய்ந்தவை. அப்பாடலில் ‘உன் கைகள் நான் என்றும் துடைக்கின்ற கைக்குட்டை/நீ தொட்ட அடையாளம் அழிக்காது என் சட்டை’ என்று யோசித்திருக்கிறார்.
இசையோடு அவ்வரிகளைக் கேட்கும்போது, திரைப்பாடலை வேறொரு தளத்திற்கு அவர் இட்டுச் செல்ல எண்ணியிருப்பது பிடிபடும். அப்பாடல் வரிகளை வாசித்த இசையமைப்பாளர் கட்டியணைத்து, தமது கணையாழியைக் கழற்றிப் பரிசாகக் கொடுத்திருக்கிறார்.
‘தங்கம் அணிவதில்லை’ என்று அறிவுமதி மறுத்தபோதும், ‘தங்கள் தமிழை கௌரவிக்க விரும்புகிறேன்’ என்றிருக்கிறார் அவர்.
கவிக்கோ அப்துல்ரகுமான் அவரைத் தம் மகன்களில் ஒருவராகவே கருதி இலக்கியத்தைக் கற்பித்திருக்கிறார். கவிஞர் மீராவின் அறிமுகத்தால் அன்னம் வெளியீடாக அறிவுமதியின் ‘நிரந்தர மனிதர்கள்’ கவிதைநூல் வெளிவந்திருக்கிறது.
தொடர்ச்சியாக ‘அவிழரும்பு’, ‘என் பிரிய வசந்தமே’, ‘ஆயுளின் அந்திவரை’, ‘அன்பான ராட்சசி’, ‘கடைசி மழைத்துளி’, ‘அணுத்திமிர் அடக்கு’, ‘வலி’, ‘நட்புக்காலம்’ ஆகியன வந்துள்ளன.
‘கடைசி மழைத்துளி’யில் ஹைக்கூ வடிவை அசலான தமிழ் ஹைக்கூக்களாக எழுதிக்காட்டியவர் அறிவுமதிதான். ‘படையாச்சி சுடுகாடு/பறையர் சுடுகாடு/தலை முழுக ஒரே ஆறு’ என்றும் ‘மரக்கிளையில் குழந்தை/வரப்பில் பண்ணையார்/வயலில் சிந்துகிறது பால்’ என்றும் தமிழ் ஹைக்கூக்களை, சமூகத் தடத்தை நோக்கித் திருப்பிவிட்ட பெருமை அவருடையது. மூன்று வாக்கியங்களில் ஒரு கருத்தையோ சிந்தனையையோ ஹைக்கூவாக எழுதலாம் என்கிற புதுமுறையை அவரே உருவாக்கியிருக்கிறார்.
ஆண் - பெண் நட்பை மையமாக வைத்து அவர் எழுதிய ‘நட்புக்காலம்’ நூல், கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கான கவிதைக் கையேடாக மாறிப்போயிருக்கிறது. ஒரு கவிதைக்காகக் காவல்துறை படிக்கட்டிலும் நீதிமன்ற வாசலிலும் நிற்கவேண்டிய நிலையை அறிவுமதி சந்தித்திருக்கிறார்.
பல கவியரங்குகளில் அவர் கவிதை வாசிக்க ஆரம்பித்த உடனேயே, மொத்த கூட்டமும் அவர் பின்னே நடக்கத் தொடங்கியதை நிறைய மேடைகளில் நேரடியாகக் கண்டிருக்கிறேன். அப்படிப்பட்ட அவர்தான், ‘சொல்லாதே சொல்லச் சொல்லாதே’ என்கிற பாடலை ‘சொல்லாமலே’ படத்திற்காக எழுதியிருக்கிறார். ‘காத்திருக்கும் வேளையெல்லாம் கண் இமையும் பாரம்/காதல் வந்து சேர்ந்துவிட்டால் பூமி வெகுதூரம்’ என்ற அப்பாடலுக்கு, தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியர் விருதைப் பெற்றிருக்கிறார்.
ஒரு பாடலாசிரியரே அனைத்துப் பாடல்களையும் எழுதிவந்த சூழலில், ஆளுக்கு ஒரு பாடலைத் தரத் சொல்லி இசையமைப்பாளர்களிடம் கோரிக்கை வைத்திருக்கிறார். அவர் வைத்த அந்தக் கோரிக்கையின் அடிப்படையில்தான் நா. முத்துக்குமார், கபிலன், தாமரை, பா. விஜய், விவேகா, நான் என எல்லோரும் கலந்து எழுதும் சூழல் உருவானது. எங்களை வழிநடத்தும் தலைமைப் பாடலாசிரியராக பல படங்களுக்கு அவரே இருந்து எங்களுக்குச் சிபாரிசு செய்திருக்கிறார்.
‘ரன்’ திரைப்படத்தில் அவர் எழுதிய ‘பொய் சொல்லக்கூடாது காதலி’ என்னும் பாடலின் அடுத்த வரி, எப்படி இருக்கலாம் என்று யோசிக்கையில், ‘பொய் சொன்னாலும் நீயே என் காதலி’ என்ற வரியைச் சொன்னவர், லிங்குசாமியின் சகோதரரான சுபாஷ்சந்திரபோஸ். எதேச்சையாகப் பாடல் பதிவைப் பார்வையிட வந்த அவரே இரண்டாவது வரியை எடுத்துக்கொடுத்தார் என்பது வெளியுலகிற்குத் தெரியாதது.
அப்படி, யாரையும் கவிஞனாக்கிவிடும் அன்பையும் ஆற்றலையும் அறிவுமதி மட்டுமே வைத்திருந்திருக்கிறார். அப்பாடலில், ‘அழகிய பொய்கள் பூக்கும் பூச்செடி கண்டேன்/அதை ரகசியமாக உயிரைத் தோண்டி பதியம் போட்டுக்கொண்டேன்/கண்டவுடன் எனையே தின்றதடி விழியே/என்னைவிட்டுத் தனியே சென்றதடி நிழலே’ என அவர் எழுதியிருக்கும் வரிகளைப் பாடலென்று சொல்வதைவிட, கவிதையே என்றே கொண்டாடத் தோன்றுகிறது.
சந்தத்திற்குத் தக்கவாறு வரிகளைக் குழைத்து எழுதும் பாணி அவருக்கே உரியது. சின்ன சின்ன கவிதைகளை இரண்டிரண்டு வரிகளாகச் சிந்தித்தே முழுப்பாடலையும் எழுதியிருக்கிறார். ‘உதயா’ திரைப்படத்திற்கு அவர் எழுதிய ‘உதயா உதயா உளறுகிறேன்’ பாடல் வழி இதைப் புரிந்துகொள்ளலாம்.
‘மூச்சின் குமிழ்களிலே உயிர் ஊற்றி அனுப்பிவைத்தேன்/கூச்சம் அவிழ்கையிலே உடல் மாற்றி நுழைந்துவிட்டேன்’ என்பதெல்லாம் அப்பாடலில் வரக்கூடிய வரிகளே. ‘தெனாலி’ படத்தில் ‘அத்தினி சித்தினி’ என்கிற பாடலையும் அவர் எழுதியிருக்கிறார். ‘நாணம் கூச்சலிடும் சிவந்தனம்’ என்கிற வரி அப்பாடலில் இடம்பெற்றுள்ளது.
மரபார்ந்த தமிழ் எழுத்துமுறையிலிருந்து புதுக்கவிதைகள் திரைப்பாடலாக வெளிப்பட்டதுபோல, புதுக்கவிதைகளின் அடுத்த பரிணாமமான நவீனக் கவிதைகளைத் திரைப்பாடலாக்கிய முன்னோடியாக அவர் இருந்திருக்கிறார். அவருடைய பாடல்வரிகளின் அமைப்புமுறை குறித்து தனி ஆய்வே மேற்கொள்ளலாம். அந்த அளவுக்கு மொழியை நுணுகியும் அணுகியும் பாடல்களைக் கட்டியிருக்கிறார் அறிவுமதி.
- தொடர்புக்கு: yugabhaarathi@gmail.com