

அன்றாடம் என்பதே இயற்கையின் காலப் பரிமாணம் ஆகும். மானுடம் நினைவுசேகரம், அறிவுசேகரம் போன்றவற்றால் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்று பிரித்து, வரலாற்றுத் தொடர்ச்சியை உருவாக்கிக்கொள்கிறது. அதன் விளைவுகளைத் தத்துவார்த்த மானுடவியல் நோக்கில் ஆராயும் கட்டுரைத் தொடர் இது.
அன்றாடம் என்ற இயற்கையின் காலப் பரிமாணத்திலிருந்து வரலாற்றுக் காலம் என்கிற காலப் பரிமாணத்துக்கு மானுடம் செல்ல முக்கியமான உந்துசக்தியாக இருந்தது பொருள் சேகரிப்பு. எல்லா உயிரினங்களும் உணவு, இனப்பெருக்கம் ஆகிய இரண்டு உயிரியல் தேவைகளை மையப்படுத்தி வாழ்கின்றன.
மானுடம் தன்னுணர்வு பெற்றபோது, நினைவுசேகரத்தின் மூலம் மொழிவயப்பட்ட சமூகம் ஆகியவற்றை உருவாக்கியபோது, உணவு, உடை, வசிப்பிடம் ஆகிய தேவைகள் இனப்பெருக்கத்துக்குத் தேவையான சமூக ஒழுங்குமுறைகளுடன் இணைந்து உருவாயின. அப்போதும்கூடப் பாதுகாப்பு, பகிர்ந்துகொள்ளுதல் என்ற அளவில் சகவாழ்வினை உருவாக்கிக்கொண்ட இனக்குழுக்கள் தோன்றினாலும், அவை உடனடியாகப் பொருள் சேகரிப்பு என்பதில் ஈடுபட்டிருக்க வாய்ப்பில்லை.
கலஹாரி பாலைவனத்தில் வாழ்ந்த நாடோடி இனக்குழு ஒன்றின் வேட்டையாடுதலை 1956ஆம் ஆண்டு ஜான் மார்ஷல் என்பவர் ஆவணப்படமாகப் பதிவுசெய்தார். இந்த இனக்குழுவின் பெண்கள் கிழங்குகளைத் தோண்டியெடுப்பார்கள், புதர்களில் உள்ள சிறிய பழங்களைச் சேகரிப்பார்கள். ஆண்கள் விலங்குகளை வேட்டையாடச் செல்வார்கள். இந்தத் திரைப்படம் நான்கு ஆண்கள் வேட்டைக்குச் செல்வதைப் பின்தொடர்கிறது. முதல் நான்கு நாட்கள் அவர்கள் விலங்குகளைத் தேடி அலைகிறார்கள். ஆங்காங்கே கிடைக்கும் கிழங்கு கனிகளைத் தின்றவண்ணம் திரிகிறார்கள்.
ஐந்தாவது நாளில் அவர்கள் ஒரு ஒட்டகச்சிவிங்கி கூட்டத்தைக் காண்கிறார்கள். அவர்களில் ஒருவன் விஷம் தோய்ந்த அம்பினை ஒரு ஒட்டகச்சிவிங்கியின் வயிற்றுப் பகுதியில் எய்வதில் வெற்றி பெறுகிறான். அது கூட்டத்திலிருந்து விலகித் தனியாகச் செல்லத் தொடங்குகிறது. அவர்கள் அதனைக் காலடித் தடத்தைக் கொண்டு பின்தொடர்கிறார்கள். விஷம் பரவிய நிலையில் அது தள்ளாடி நிற்கிறது. அவர்கள் அதனைச் சூழ்ந்துகொண்டு கொல்கிறார்கள். அதன் மாமிசத்தை நான்கு பங்குகளாக அறுத்து எடுத்துக்கொள்கிறார்கள். அவர்கள் குழுவுக்குத் திரும்பியவுடன் அனைவரும் அந்த மாமிசத்தை அவர்கள் விதிமுறைகளின்படி பகிர்ந்து உண்கிறார்கள்.
மானுடச் சமூகங்கள் நிலையாக ஓரிடத்தில் தங்கி விவசாயம் செய்யத் தொடங்கியபோதுதான் நதிக்கரை நாகரிகங்கள், பண்டங்களின் பரிமாற்றத்துக்கான நகரங்கள் ஆகியவை தோன்றின. வர்த்தகத்தை மேம்படுத்தத் தங்கம், வெள்ளி போன்ற உலோகங்களில் நாணயங்கள் செய்யத் தொடங்கினார்கள். இது ஆடைகள், கருவிகள், உணவுப் பொருள்கள் ஆகியவற்றை வசதிப்படி வாங்கவும் விற்கவும் வழிவகை செய்தது.
அதேவேளை அது செல்வத்தைச் சேகரிக்கும் சாத்தியத்தை உருவாக்கியது. உணவுப் பொருள்களை நீண்ட காலம் வைத்திருக்க முடியாது. வேறு எந்த ஒரு பண்டத்தையும் அதிக அளவில் வெகுகாலம் வைத்திருக்க முடியாது. ஆனால், உலோக நாணயங்களை நீண்ட காலம் சேமித்து வைக்கலாம்.
தன்னுடைய உயிரியல் வாழ்நாள் காலத்துக்குப் பிறகு தனக்கான தொடர்ச்சி இல்லையே என்று பரிதவித்த தன்னுணர்வு பெற்ற சுயம், இவ்வாறு பொருளைச் சேகரித்துத் தன் பிள்ளைகளை விட்டுச்செல்லும் சாத்தியத்தைக் கண்ணுற்றது. இது மெல்ல உடைமைச் சமூகத்துக்கு வழிவகுத்தது. செல்வந்தர்கள், வறியவர்கள் என்கிற பாகுபாடு சாத்தியமானது. நான்கு தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிடலாம் என்று பெருமையுடன் ஒருவரது பொருள் சேகரிப்பைப் பாராட்டுவது சாத்தியமானது. அன்றாடத்தில் கரைந்துபோகும் உழைப்பின் மதிப்பைப் பொன்னாகச் சேகரித்து எதிர்காலத்துக்குக் கடத்தும் வழி பிறந்தது.
எதிர்த்திசையில் அன்றாடம் தங்கள் உணவுக்காக வேலை செய்பவர்கள் ‘அன்றாடம் காய்ச்சிகள்’ என்று பெயர் சூட்டப்பட்டார்கள். அவர்களிடம் சேமிப்பு இல்லை, பொருள் சேகரம் இல்லை என்பதால் அது மரியாதைக் குறைவாக, ஏன் இழிவாகக்கூடக் கருதப்பட்டது. அன்றாடம் வேலை செய்து, ஏதேனும் கூலி பெற்றுக் கூழ் காய்ச்சிக் குடித்து வயிற்றை நிரப்புவதால் ‘அன்றாடம் காய்ச்சிகள்’ என்று அறியப்
பட்டார்கள்.
எழுத்தாளர் ஜி.நாகராஜன் நகரத்துக் குடிசைப் பகுதியில் வாழும் உதிரி உழைப்பாளர்களான தம்பதியரை வைத்து இலக்கியவாதிகள் மத்தியில் புகழ்பெற்ற ஒரு நாவலை எழுதினார். அதன் தலைப்பு ‘நாளை மற்றுமொரு நாளே’. அதில் என்ன அதிசயம், இயற்கையின் மடியில் ஒவ்வொரு நாளும் மற்றுமொரு நாள்தானே என்று கேட்கலாம்.
ஆனால், அவர் விளிம்பு நிலையில் வாழ்பவர்களுக்கு எதிர்கால நோக்கு என்பது சாத்தியமற்று இருப்பதைக் குறிக்கவே நாளை மற்றுமொரு நாள்தான் என்று சொன்னார். அந்த நாவலின் கதாநாயகன் கந்தன் அடியாள் வேலை உள்படப் பல தரகு வேலைகளைப் பார்ப்பவன்; அவன் ‘சேர்த்துக்கொண்ட மனைவி’ பாலியல் தொழிலாளி. இவர்கள் வாழ்க்கை இலக்கின்றி அன்றாடம் எதையாவது செய்து வயிற்றை நிரப்புவதாக இருக்கிறது.
அதாவது எதிர்காலம் என்பது பொருள் சேகரிப்பது, வாழ்க்கை வளம் பெறுவது என்று அர்த்தம் பெறுகையில், இவர்களுக்கு எதிர்காலம் என்று எதுவும் இல்லை என்பதாலேயே நாளை மற்றுமொரு நாளே என்ற வெறும் காலச்சுழற்சியாக இருக்கிறது. மக்கள் பேச்சில் ‘காலம் வரும்’ என்பதே எதிர்கால வாழ்க்கை மேம்படும் என்ற பொருள் சேகரம் சார்ந்த நம்பிக்கைதான். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடலில், ‘காடு விளைஞ்சென்ன மச்சான் நமக்குக் கையும் காலும்தானே மிச்சம்’ என்று பெண் கேட்க, ‘காடு விளையட்டும் பொண்ணே நமக்குக் காலம் இருக்குது பின்னே’ என்று பதில் சொல்லும் ஆண் குரல்.
அதேபோலப் புதிதாகத் தொழில் தொடங்கி வெற்றி காணத் தொடங்கும் சகோதரியும் சகோதரனும் ‘எங்களுக்கும் காலம் வரும், காலம் வந்தால் வாழ்வு வரும், வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே’ என்று பாடுவார்கள். எனவே, அன்றாடத்துக்கு அப்பாலான எதிர்காலம் கொண்ட வரலாற்றுக் காலம் என்பது பொருள் சேகரமே என்று கருதப்படுகிறது.
- தொடர்புக்கு: rajankurai@gmail.com