கலை வெளிப்பாடுகளின் விரிந்த கோலங்கள் | கலைவெளிப் பயணம் - 8

கலை வெளிப்பாடுகளின் விரிந்த கோலங்கள் | கலைவெளிப் பயணம் - 8
Updated on
3 min read

எண்பதுக்கும் மேற்பட்ட ஓவிய, சிற்பக் கலைஞர்களின் இருநூறுக்கும் மேற்பட்ட படைப்புகள் அடங்கிய கண்காட்சி இது. பல்லவா ஓவியர் கிராமத்தின் சார்பாக இக்கண்காட்சியை ஓவியர் விஸ்வம் சிறப்பான முறையில் ஒருங்கிணைத்திருக்கிறார். விஸ்வத்தின் தேர்ந்த அக்கறையையும் நேர்த்தியான திட்டமிடலையும் இக்கண்காட்சியின் ஒவ்வொரு பகுதியும் வெளிப்படுத்துகின்றன. பல்லவா ஓவியர்களின் பகுதி; இன்று இயங்கிக்கொண்டிருக்கும் பல படைப்பாளிகளையும் இணைத்துக்கொண்டிருக்கும் பொதுப் பகுதி; தனிநபர் கண்காட்சிப் பகுதியாக ஓவியர் விஸ்வத்தின் சமீபத்திய அரூப ஓவியங்கள்; மறைந்த கலைஞர்களுக்கான அஞ்சலிப் பகுதி; மூத்த கலைஞர்களைக் கெளரவப்படுத்துவது என இக்கண்காட்சி சிறப்பாகக் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

மேலும், இக்கண்​காட்​சியின் ஒவ்வொரு நாள் மாலை நிகழ்​விலும் கலை இலக்கிய ஆளுமை​களோடு கலந்துரை​யாடலை ஏற்பாடு செய்திருப்​பதும் சிறப்பான ஒரு முன்னெடுப்பு. நவீனக் கலைப் படைப்​பாளி​களும் நவீன இலக்கியப் படைப்​பாளி​களும் இணைந்து செயல்​படுவது நம் சூழலில் நல்ல மாற்றங்களை விளைவிக்கும் என்பது எப்போதுமே என் நம்பிக்கையாக இருந்​து​வரு​கிறது. 1970களிலும் 80களிலும் சிறுபத்​திரிகை இயக்கங்​களுக்கும் நவீன ஓவியர்​களுக்கும் இடையே இணக்கமான பரிமாற்றம் இருந்தது. ‘கசடதபற’, ‘நடை’, ‘பிரக்ஞை’ போன்ற இதழ்களோடு ஓவியர்கள் ஆதிமூலம், தட்சிணா​மூர்த்தி, ஆர்.பி.​பாஸ்​கரன், கிருஷ்ண​மூர்த்தி போன்ற நவீனக் கலைஞர்கள் இணைந்து செயல்​பட்​டனர். பின்னர், ஒருவர் மீது ஒருவர் குற்றம் கண்டு​பிடித்துப் பிரிந்து செல்லும் தம்பதி​யர்​போலக் கலையும் இலக்கியமும் தனித்​தனி​யாகப் பிரிந்து போயின. நவீனக் கலைகளின் அரிய கொடைகளை நாம் இழந்து​கொண்​டிருப்​பதும் அவற்றின் வெகும​திகளை நாம் அறியா​திருப்​பதும் அவலம். இத்தகைய சூழலில் இப்படியான கலந்துரை​யாடல்களை முன்னெடுத்​திருப்பது, மீண்டும் ஓர் இணைவுக்கான முயற்​சியாக அமையலாம்.

அதிர்​வூட்டும் படைப்புகள்

லலித் கலா அகாடமியின் வாயிலுக்குள் நாம் நுழையும்​போதே, நம் கண்களில் முதலில் தென்படுவது, வாசலுக்கு எதிரான சுவரில் வீற்றிருக்​கும், சமீபத்தில் மறைந்த, ஓவியர் நடேஷின் அதிர்​வூட்டும் ஓவியம்​தான். கொந்தளிப்பு, எக்களிப்பு என்ற இருவேறு மனநிலைகளில் இடைவிடாது இயங்கிக்​கொண்​டிருந்த அவருடைய ‘புலிகள்’ ஓவிய வரிசையிலான ஒரு மகத்தான ஓவியம் அது. இவ்விரு மனநிலைகளின் உருவகம் என்றும் அந்த ஓவியத்தைக் கருதலாம். ஒரு கட்டான ஆண் உடலில் புலி முகம். அது எழுப்பும் அதிர்​வலைகளோடுதான் நாம் கண்காட்​சிக்குள் நுழைகிறோம். இறுதியாக, காட்சிக் கூடத்தின் கடைசிப் பகுதியில் நிறைந்​திருக்கும் ஓவியர் விஸ்வத்தின் சமீபத்திய அரூப ஓவியங்கள் அடங்கிய புனைவுவெளியைச் சென்றடைகிறோம். இயற்கையின் வாசனை​களையும் குணரூபங்​களையும் வண்ணங்​களின் மாய வசீகரத்​தோடும் மந்திர அதிர்​வு​களோடும் வசப்படுத்​தி​யிருக்கும் அரூப வெளிப்​பாடுகள் அவை. பெறும​தியான கலை அனுபவங்​களின் நிறைவோடு வெளியேறுகிறோம்.

கண்காட்​சியின் அஞ்சலிப் பகுதியில் ஓவியர்கள் வீர.சந்​தானம், எம்.பாலசுப்​பிரமணியம், வில்லேஜ் மூக்கையா, மு.நடேஷ் ஆகியோரின் படைப்புகள் இடம்பெற்றிருக்​கின்றன. கடந்த ஆண்டு மறைந்த பல்லவா ஓவியர் கிராம ஓவியரான வில்லேஜ் மூக்கை​யாவின் காளை ஓவியங்கள் இப்பகு​தியில் கணிசமாக இடம்பெற்றிருக்​கின்றன. கிராமிய வாழ்க்கையைத் தன் கோடுகள் மூலமாக​வும், தன் மண் சார்ந்த வண்ணங்கள் மூலமாகவும் ஆற்றலுடன் வெளிப்​படுத்​தியவர் வில்லேஜ் மூக்கையா. பார்க்கும் எவரையும் தன் வசப்படுத்தும் வலிமை கொண்ட படைப்புகள் இவை. அதிகம் அறியப்​படாத, உரிய அங்கீ​காரம் கிடைத்​திராத கலைஞன். அவருக்கான சிறந்த அஞ்சலியை இக்கண்​காட்சி செலுத்​தியிருக்கிறது.

பல்லவா ஓவியர்​களின் படைப்புகள் அடங்கிய பகுதி​யில், மூத்த ஓவியரும் சென்னை ஓவிய இயக்கத்தின் முதன்மைப் படைப்​பாளி​களில் ஒருவருமான ஜி.ராமனின் சில ஓவியங்​களைப் பார்க்க முடிவது நமக்கான ஒரு நல்வாய்ப்பு. தஞ்சை மண்ணின் வாழ்க்கைச் சித்திரங்​களைத் தன் ஓவியங்​களில் கலை நேர்த்தி​யுடன் கைப்பற்றிய, அழகியல் வெளிப்​பாடுகள் கொண்ட மனோகரனின் ஓவியங்கள் அபாரமானவை. ‘மரத்தின் வாழ்வு’ என்கிற ஓவிய வரிசை மூலம் இன்று இந்தியக் கலை உலகில் பிரசித்தி பெற்று​வரும் இளம் கலைஞர் கார்த்தி​கேயனின் மூன்று வசீகர ஓவியங்​களும் இப்பகு​தியின் சிறப்புகள். கார்த்தியின் மரம் தோப்பாகவும் காடாகவும் உருமாற்றம் பெறுவது, அவருடைய சிந்தனை வளத்தாலும் வெளியீட்டு நுட்பங்​களாலும் படிமங்​களாலும் நிகழ்​கிறது.

புதிய படைப்பு சக்திகள்

பொதுப் பகுதி​யில், இன்று தமிழகக் கலைவெளியில் இயங்கிக்​கொண்​டிருக்கும் பல படைப்​பாளி​களின் ஓவியங்​களும் சிற்பங்​களும் காட்சிக்​கூடத்தின் மையப் பகுதியில் நிறைந்​திருக்​கின்றன. யதார்த்த வெளிப்பாடு முதல் அரூப வெளிப்பாடு வரையான பல்வேறு கலை வெளிப்​பாடுகளை இப்பகு​தியில் காண முடிகிறது. இப்பகு​தி

யில் எதிரும் புதிருமாக அமைந்​திருக்கும் சரண்யாவின் மரபான, தத்ரூபமான யதார்த்தப் படைப்பு ஒருபுறம் (நாம் அதைப் பார்த்துக் கொண்டிருக்​கும்​போது, அதிலிருக்கும் பெண்மணி சட்டகத்தை விட்டு இறங்கிவந்து நம்மிடையே பேசத் தொடங்கி​விடக்​கூடும் எனும் அளவுக்குத் தத்ரூபம் கூடியது). எனில், அசாத்​தியமான மாய வெளிப்​பாடு​களில் ஒளிரும் அதிவீர பாண்டியனின் அரூப ஓவியங்கள் மறுபுறம். அவரின் சமீபத்திய அரூப ஓவியங்​களில் வண்ணங்​களும் கோடுகளும் ஒரு லயத்தில் இசைந்து உறவாடி விந்தை புரிகின்றன. இவ்விரு நிலைகளுக்கு இடையேயான கலை வெளிப்​பாடு​களின் குறுக்கு​வெட்டுத் தோற்றமாக இக்கண்​காட்சி விரிந்து பரந்திருக்​கிறது.

பொதுப் பிரிவில் எழுபதுக்கும் மேற்பட்ட படைப்​பாளி​களின் படைப்புகள் இடம்பெற்றிருக்​கின்றன. ஒவ்வொரு​வரின் ரசனைக்கும் ஈடுபாட்டுக்கும் ஏற்ப, இவற்றோடு பார்வை​யாளர்கள் உறவாட முடியும். சென்னை, கும்பகோணம், பாண்டிச்சேரி ஓவியக் கல்லூரி​களின் மாணவர்கள், ஆசிரியர்​களின் படைப்பு​களோடு, 19 பெண் ஓவியர்​களின் படைப்புகள் இடம்பெற்றிருப்​ப​தையும் சிறப்​பாகக் குறிப்பிட வேண்டும். இப்பகு​தியில் மிக முக்கிய​மானவை என என் பார்வையில் அதிவீர பாண்டியன், அஸ்மா மேனன், ரோகிணி மணி (இப்பகு​திக்குள் நுழைந்​ததும் முதலில் என்னை ஈர்த்தது, இவரின் காகம்​தான்), நடராஜன், வேல்முருகன், கார்த்தி​கேயன், மணிவண்ணன் ஆகியோரின் படைப்பு​களைக் குறிப்​பிடலாம்.

அதேவேளை, இதுவரை நான் அறிந்​திராத புதிய படைப்பு சக்திகளாக திவ்யா, ஹெலன் பிரமாவைக் கண்டு​கொள்ள முடிந்தது. திவ்யா என்கிற இளம் பெண் ஓவியரின் ‘கேன்​வாஸின் பின்புறம்’ என்கிற ஓவியம் அவருடைய கலை மனதின் பார்வையையும் திறனையும் வியந்து பார்க்க வைத்தது. மற்றொருவரான ஹெலனின் படைப்புகள் நுட்பங்கள் கூடிய​வை​யாகவும் புதிய பார்வை கொண்ட​வை​யாகவும் அமைந்​திருக்​கின்றன. அவரவர் ஈடுபாட்டுக்கும் ரசனைக்கும் ஏற்ப பெறும​தியான கலை அனுபவம், இந்தக் கண்காட்​சி வழி கிட்டும் என நிச்சயமாக நம்பலாம்.

(இக்கண்காட்சி சென்னை லலித் கலா அகாடமியில் நவம்பர் 28 முதல் டிசம்பர் 3 வரை காலை 11 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறுகிறது)

- எழுத்தாளர், கலை விமர்சகர்

தொடர்புக்கு: kaalamkalaimohan@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in