

‘இலங்கைத் தேர்தல்கள் உணர்த்தும் செய்தி என்ன?’ என்கிற தலைப்பில் தீபச்செல்வன் எழுதிய கட்டுரையை (22.11.2024) படித்தேன். அதில் உண்மைக்கு மாறான தகவல்கள் உண்டு. குறிப்பாக –
1. வடக்குக் கிழக்கைச் சேர்ந்த எவரும் அமைச்சுப் பதவிகளில் இல்லை என்பது - அருண் ஹேமச்சந்திர கிழக்கு மாகாணம் – திருகோணமலையைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பிரதிநிதி ஆவார்.
2. தனிச் சிங்கள அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ளது என்பது - இராமலிங்கம் சந்திரசேகரன், சறோஜா சாவித்திரி போல்ராஜ் என இரண்டு கேபினெட் அமைச்சர்கள், அருண் ஹேமச்சந்திரா, சுந்தரலிங்கம் பிரதீப் இரண்டு துணை அமைச்சர்கள் என நான்கு அமைச்சர்கள் (தமிழர்கள்) உண்டு.
3. 1971இல் அதிபர் பதவியைக் கைப்பற்றுவதற்காக ஜே.வி.பி போராடியது என்பது - அது ஜே.வி.பியின் முதலாவது கிளர்ச்சி. அதில் அவர்கள் ஆட்சியைக் கைப்பற்றி, சோஷலிஸ ஆட்சி ஒன்றை உருவாக்கவே முயன்றனர். வெறுமனே சதிப் புரட்சி மூலம் அதிபர் பதவியைக் கைப்பற்றுவதற்காக அந்தக் கிளர்ச்சி மேற்கொள்ளப்படவில்லை.
அப்போது, இன்று உள்ளதைப் போல ‘நிறைவேற்று அதிகாரம் உள்ள அதிபர்’ முறையும் இருக்கவில்லை. 1978இல்தான் நிறைவேற்று அதிகாரம் உடைய அதிபர் முறையை அன்றைய பிரதமராக இருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தன உருவாக்கினார். அதற்கான சர்வஜன வாக்கெடுப்பும் நடத்தப்பட்டு, அந்த அதிபர் ஆட்சிமுறை நடைமுறைப்படுத்தப்படுகிறது.
4. 1983இல் தமிழர்கள் மீதான வன்முறையைத் தூண்டியது ஜே.வி.பி என அன்றைய அரசாங்கம் அதைத் தடைசெய்தது என்பது - அந்த வன்முறையைத் தூண்டியதும் வன்முறையை நடத்தியதும் ஜே.ஆர். அரசாங்கமே. இது பல நூல்களிலும் அதற்கப்பால், நாடாளுமன்றத்தில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களாலும் வெளிப்படையாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜே.வி.பி உள்பட நவ சமசமாஜக் கட்சி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய இடதுசாரிக் கட்சிகளைத் தடை செய்ததற்கும் பழியை அவர்கள் மீது போடுவதற்கும் இதை ஒரு வாய்ப்பாக ஜே.ஆர். அரசாங்கம் முயன்றது. ஜே.வி.பியை மட்டுமல்ல, தமிழ் விடுதலை இயக்கங்களையும் அது பயங்கரவாதிகள் என்று தடைசெய்தது.
5. தமிழ்த் தேசியக் கட்சிகள் உடைந்து தேர்தலில் போட்டியிட்டதன் காரணமாகத் தமிழ் மக்களின் ஆதரவைப் பெற முடியாமல் போனது. இதனால்தான் என்.பி.பி. தமிழர் பகுதிகளில் வெற்றியைப் பெறக்கூடியதாக இருந்தது. தமிழ்க் கட்சிகள் ஒற்றுமையாக நின்றிருந்தால் என்.பி.பி. பின்தள்ளப்பட்டிருக்கும் என்று கட்டுரையில் சொல்லப்பட்டுள்ளது. அடுத்த பத்தியில் இதற்கு முரணாக - ‘பயங்கரவாதச் சட்டத்தை நீக்க வேண்டும்.
மாவீரர் துயிலும் இல்லங்களிலிருந்து ராணுவம் விலக வேண்டும், தமிழர்களின் நிலங்கள் முழுமையாக விடுவிக்கப்பட வேண்டும், அரசியல் உரிமையைத் தமிழர்களுக்கு வழங்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளுக்காக தமிழ் மக்களில் கணிசமானவர்கள் அநுரவுக்கு (என்.பி.பி.)க்கு வாக்களித்துள்ளனர்’ எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இவ்வாறு பல தகவல் பிழைகளும் முரண்களும் உண்டு. தமிழ்நாட்டு மக்களிடம் இலங்கைச் சூழலைப் பற்றி இப்படிப் பிழையாக வியாக்கியானப்படுத்துவது பிழையான புரிதலுக்கே வழிவகுக்கும்.