தமிழ்நாட்டுக்குத் தேவை, தடையற்ற உள்ளாட்சித் தேர்தலே!

தமிழ்நாட்டுக்குத் தேவை, தடையற்ற உள்ளாட்சித் தேர்தலே!
Updated on
2 min read

‘இந்து தமிழ் திசை’யின் கருத்துப்பேழை பகுதியில், 21.11.2024 அன்று ‘தமிழ்நாட்டுக்குத் தேவை ஒருங்கிணைந்த உள்ளாட்சித் தேர்தல்’ கட்டுரை வெளியாகியிருந்தது. தமிழ்நாட்டில், 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள், வரும் டிசம்பர் மாதத்தில் நடத்தப்பட வேண்டியிருப்பதையும் அதற்கான உரிய அறிவிப்புகள் மாநிலத் தேர்தல் ஆணையத்திடமிருந்து இதுவரை வராமல் இருப்பதையும் சுட்டிக்காட்டி இருப்பதோடு, அரசின் நகர்வுகளுக்காக மாநிலத் தேர்தல் ஆணையம் காத்துக்கொண்டிருப்பதையும் இக்கட்டுரை கவனத்துக்குக் கொண்டுவந்திருக்கிறது.

உருவாக்​கப்பட்ட குழப்பம்: நகர்ப்புற உள்ளாட்​சிகளைத் தரம் உயர்த்​தும்போது அருகில் உள்ள ஊராட்​சிகளை இணைப்பது வழக்கமான நடவடிக்கைதான் எனவும், அதனால் ஏற்படும் வார்டு​களின் மறுவரையறைப் பணிகள் முடியும் வரை தேர்தல் நடத்துவது தள்ளிப்​போகலாம் எனவும் குறிப்​பிட்​டிருக்​கிறார் கட்டுரை​யாளர். இங்கு நாம் கவனிக்க வேண்டியது, நூற்றுக்​கணக்கான கிராம ஊராட்​சிகளை வலுக்​கட்​டாயமாக நகரங்​களோடு இணைக்கும் முயற்சி என்பது வழக்கமான நடவடிக்கை அல்ல.

இது தேர்தல் நேரத்​தில், அரசு உருவாக்கி​யிருக்கும் குழப்பம் என்றே கருத வேண்டி​யுள்ளது. வார்டு மறுவரையறையைக் காரணமாகக் குறிப்​பிடும்​போது, நீதிமன்​றம்கூட அதில் தலையிட முடியாது என்ற வாய்ப்​பினைப் பயன்படுத்​தித்தான் கடந்த முறை (2016ஆம் ஆண்டு) அஇஅதிமுக அரசு மாவட்​டங்​களைப் பிரிக்​கிறோம் என்ற பெயரில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் காலம் தாழ்த்​தியது.

தற்போது திமுக அரசு, உள்ளாட்​சிகளைப் பிரிக்​கிறோம் என்ற பெயரில் வார்டு மறுவரையறை என்ற அதிமுக எடுத்த அதே குறுக்கு​வழியைக் கையில் எடுத்​திருக்​கிறது. ஊராட்​சிகளை நகர்ப்புற உள்ளாட்​சிகளோடு இணைக்கும் நடவடிக்கைகூட, உள்ளாட்சித் தேர்தலைத் தள்ளிப்​போடு​வதற்கான அரசின் ஓர் உத்தியோ என்ற சந்தேகம் சமூகச் செயற்​பாட்​டாளர்கள் மத்தியில் உள்ளது.

தனி அலுவலர்கள் மூலம் நகரமய​மாக்கல்: எந்த ஒரு கிராம ஊராட்​சியின் கிராமசபை​யிடமும் ஒப்புதல் பெறாமல், வலுக்கட்டாயமான நகரமய​மாக்கல் முயற்சி நடந்து​வரு​வ​தாகத் தகவல்கள் வருகின்றன. பல கிராம ஊராட்​சிகளில் மக்கள் தங்கள் ஊராட்சியை நகரங்​களோடு இணைக்கக் கூடாது; ஊராட்​சி​யாகவே அது இருக்க வேண்டும் எனப் போராடி வருகிறார்கள். மேலும், தேர்தலை நடத்தாமல், வட்டார வளர்ச்சி அலுவலர்​களைத் தனி அலுவலர்களாக நியமித்துத் தீர்மானங்களை இயற்றி, மக்களின் எதிர்ப்​பையும் மீறி, கிராம ஊராட்​சிகளை நகரங்​களோடு அரசு இணைத்து​விடுமோ என்கிற அச்சமும் மக்கள் மத்தியில் நிலவிவரு​கிறது.

மேலும், 2016 முதல் இருந்த தனி அலுவலர் காலத்​தில், ஊழல்கள் அதிகரித்தன என்கிற குற்றச்​சாட்டுகள் உள்ள நிலையில், உரிய காலத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதே சரியான அணுகு​முறையாக இருக்​கும். ஒரே நேரத்தில் அனைத்து உள்ளாட்சித் தேர்தல்​களும் கடந்த காலங்​களைப் போல நடத்தப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் தற்போது உருவாக்​கப்​பட்​டிருக்கும் இந்த இடைவெளி நிரப்​பப்பட வேண்டும் என்பதற்காக முன்வைக்​கப்​படும் ‘தனி அலுவலர் நிர்வாக முறை’ என்பது, தேர்ந்​தெடுக்​கப்பட்ட மக்கள் பிரதி​நி​தி​களுக்கு மாற்றான தீர்வாக எந்த விதத்​திலும் இருக்க முடியாது. மேலும், இது ஜனநாயகத்தை வலுப்​படுத்த உதவாது.

எனவே, அரசுகள் நினைத்தால் எப்போது வேண்டு​மா​னாலும் உள்ளாட்சித் தேர்தலை நிறுத்​திக்​கொள்​ளலாம்; இடைப்பட்ட காலத்தில் மக்கள் பிரதி​நி​தி​களுக்கு மாற்றாகத் தனி அலுவலர்​களைக் கொண்டு நிர்வாகம் செய்து​விடலாம் என்கிற அரசியல் கணக்கு​களுக்கு இடம் கொடுக்கக் கூடாது. அரசியல் காரணங்​களுக்காக மீண்டும் மீண்டும் தனிஅலுவலர் நிர்வாகத்தை இயல்பாக்குவதை ஜனநாயக சக்திகள் ஏற்றுக்​கொள்ளக் கூடாது. உள்ளாட்​சியில் தனி அலுவலர்கள் நிர்வாகம் என்பது மாநிலத்தில் ஆளுநர் நிர்வாகம் செய்வதற்கு ஒப்பான​தாகும்.

ஒரே நாடு ஒரே தேர்தல் போலவா? - வெவ்வேறு மாவட்​டங்​களில் உள்ளாட்சித் தேர்தல்கள் வெவ்வேறு காலத்தில் நடைபெற்​றாலும் வளர்ச்சிப் பணிகள் முழுக்க முழுக்க உள்ளூர் அளவில் நிர்வாகம் சார்ந்​த​தாகவே இருக்கின்றன.தேர்தல் வெவ்வேறு காலத்தில் நடப்ப​தால், கிராம அளவிலோ நகர உள்ளாட்சி அளவிலோ திட்டங்களை நடைமுறைப்​படுத்து​வதற்கு எந்தத் தடையும் இல்லை.

மேலும், கடந்த முறை 27 மாவட்​டங்​களைத் தவிர மீதமுள்ள ஒன்பது மாவட்​டங்​களுக்​குமான ஊரக உள்ளாட்சித் தேர்தல், நகர்ப்புற உள்ளாட்​சிகளுக்கான தேர்தல் வெறும் இரண்டு - மூன்று மாத இடைவெளியில் நடைபெற்று முடிந்தன. அவற்றை ஒரே வேளையில் நடத்து​வதில் எந்தச் சிக்கலும் இல்லை.

இந்தியா போன்ற பன்மைத்துவச் சமூகத்தில் ஒரே நேரத்தில் எல்லாத் தேர்தல்​களையும் நடத்த வேண்டும் என்கிற ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ போன்ற முன்வைப்புகளோ அல்லது ஒருங்​கிணைந்த உள்ளாட்சித் தேர்தல் என்கிற முன்வைப்போ அடிப்​படையில் ஜனநாயகத்​துக்கு எதிரானவை.

தடையற்ற உள்ளாட்சித் தேர்தல்: உரிய காலத்தில் உள்ளாட்சித் தேர்தல்களை நடத்தாமல் அவற்றைத் தள்ளிப்​போடுவது என்பது ஜனநாயக விரோத​மானது; நம் அரசமைப்புச் சட்டத்தின் அதிகாரப் பரவல் நோக்கங்கள், ஜனநாயக விழுமியங்கள் ஆகியவற்றுக்கு எதிரானது. நாடாளு​மன்றத் தேர்தல்​களை​யும், சட்டமன்றத் தேர்தல்​களையும் இப்படித் தள்ளிப்போட முடியுமா? எதிர்க்​கட்​சிகளும் ஊடகங்​களும் சும்மா இருந்​து​விடுமா? மிக முக்கியமான கேள்வி என்னவென்​றால், ‘தமிழ்​நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் என்பது மாநில அரசுகளின் விருப்​பத்​துக்கு ஏற்ப அல்லது ஆளுங்​கட்​சியின் அரசியல் கணக்கு​களுக்கு ஏற்ப நடைபெறும் என்ற சூழலை நாம் அனுமதிக்கப் போகிறோமா?’ என்பது​தான்.ஒருங்​கிணைந்த உள்ளாட்சித் தேர்தல் என்பதல்ல, மாறாக, ‘தடையற்ற உள்ளாட்சித் தேர்தல்’ என்பதே நாம் முன்வைக்க வேண்டிய கோரிக்கை. அதுவே ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ள அனைவரின் விருப்​பமும்​கூட.

- தொடர்புக்கு: nanda.mse@gmail.com

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in