விடுதலை இறையியலின் தந்தை | அஞ்சலி: குஸ்டாவோ குட்டியரஸ்

விடுதலை இறையியலின் தந்தை | அஞ்சலி: குஸ்டாவோ குட்டியரஸ்
Updated on
3 min read

‘​விடுதலை இறையியலின் தந்தை’ எனப் போற்றப்​படும் லத்தீன் - அமெரிக்க இறையியல் / மெய்யியல் அறிஞர் குஸ்டாவோ குட்டியரஸ், அக்டோபர் 22ஆம் தேதி பெரு நாட்டின் லிமா நகரில் காலமானார். கிறித்து​வர்​களின் சமூகப் படிப்​பினைகளை வடிவமைத்​தவர்​களில் மிகவும் குறிப்​பிடத்​தக்​கவரான குட்டியரஸ், கத்தோலிக்கத் திருச்சபை சமூக நீதியை முதன்​மைப்​படுத்தி, ஏழைகள், விளிம்​புநிலை​யினர் சார்பாக நிலைப்பாடு எடுக்கப் பெரிதும் வலியுறுத்​தி​யவர். கிறித்துவ இறையியல் சிந்தனைப் போக்கு​களில் ஏறத்தாழ அரை நூற்றாண்​டாகச் செல்வாக்கு செலுத்​திவருவது விடுதலை இறையியல். பல முற்போக்கான கிறித்து​வர்களை இந்திய அளவிலும், பல மனித உரிமைப் போராளி​களைத் தமிழக அளவிலும் உருவாக்​கியது குட்டியரஸின் விடுதலை இறையியல் என்னும் கருத்​தியலே!

குட்டியரஸ் தென் அமெரிக்​காவின் பெரு நாட்டில் லிமா நகரில் 1928 ஜூன் 8இல் பிறந்​தார். இவர் டொமினிகன் சபை குரு. பெல்ஜியம், ஃபிரான்ஸ் நாடுகளில் இறையியல் கற்றுத்​தேர்ந்​தார். நோத்ர தாம் பல்கலைக்​கழகம் உள்ளிட்ட உலகின் பெரும் கல்வி நிறுவனங்​களில் பேராசிரியராகப் பணியாற்றினார். ‘ஏழையருக்கான விருப்பத் தேர்வு’, ‘ஏழையர் சார்பாக’ என்ற சொற்றொடர்​களைப் பிரபலப்​படுத்​தி​யவர். இவர் எழுதிய, ‘விடுதலை இறையியல்’ (A Theology of Liberation -1971), ‘நாங்கள் எங்கள் சொந்தக் கிணறுகளி​லிருந்து குடிக்​கிறோம்’ (We Drink from Our Own Wells -1983) போன்ற புத்தகங்கள் புகழ்​பெற்றவை. எனவே, ‘ஏழைகளின் இறை வாக்​கினர்’ எனப் போற்றப்​படும் குஸ்டாவோ குட்டியரஸின் சிந்தனைகளை ஆராய்வது விடுதலை இறையியலின் ஆணிவேருக்கே சென்று அறிந்​து​கொள்​வதற்குச் சமம்.

விடுதலை இறையியல்: குட்டியரஸைப் பொறுத்​தவரையில் ‘விடுதலை இறையியல்’ என்பது வெறுமனே இறையியல் சிந்தனை​களில் ஒரு புதிய கருத்து அல்ல; மாறாக, இது ஒரு புதிய இறையிய​லாக்கச் செயல்​முறை. விடுதலை என்பது இறையிய​லா​ளர்​களின் பட்டியலில் ஓர் உருப்படி அல்ல; அனைத்​தையும் ஒளிரச்​செய்​கின்ற தொடுவானம்; அனைத்​துக்கும் ஒரு புதிய அர்த்தம் தருவது. எனவேதான் குட்டியரஸ் மரபுவழி என்பதைவிட மக்கள் வழி என்பதை வலியுறுத்து​கிறார்.

வறுமையை ஒழிப்பது குறித்துச் சமூகவியல் அறிஞர்கள் பல்வேறு கோட்பாடு​களைப் பரிந்​துரைக்​கின்​றனர். அவற்றுள் வளர்ச்சிக் கோட்பாடு, பொதுவுடைமைக் கோட்பாடு இரண்டும் மிகவும் முக்கிய​மானவை. வளர்ச்சிக் கோட்பாட்​டிலிருந்து குட்டியரஸின் விடுதலை பற்றிய கருத்​தியல் வேறுபடு​கிறது. வளர்ச்சி மாதிரிகளை அவர் ‘உதவிகள்’ என்று அழைக்​கிறார்.

70% உணவு 30% பணக்காரர்​களால் மட்டுமே உண்ணப்​படு​கிறது. இந்தச் சூழலில், பிரச்​சினையை எப்படித் தீர்ப்பது? மக்களுக்கான உணவு போதுமான அளவு இல்லை என்றும், சமையலறையை நவீனப்​படுத்த வேண்டும் என்றும், உற்பத்தியை அதிகரித்து ஏழை மக்களுக்குக் கொடுக்​கு​மாறும் வளர்ச்​சி​யியல் கோட்பாட்​டாளர்கள் பரிந்​துரைக்​கின்​றனர்.

ஆனால், நம்மிடம் போதுமான அளவு உணவு இருக்​கிறது என்றும், அவற்றைச் சரிசம​மாகப் பங்கிடுவதே தீர்வு என்றும் மார்க்​சியச் சிந்தனை​யாளர்கள் பரிந்​துரைக்​கின்​றனர். மார்க்​சி​யர்​களின் கருத்தில் உடன்பட்டு சமுதாய வளங்களை ஏழைகளுக்குச் சமமாக வழங்குதல், அடிப்படை அமைப்பு மாற்றம் முதலிய​வற்றைக் குட்டியரஸ் முன்வைக்​கிறார்.

அநீதியான சமூக அமைப்பு​களி​லிருந்து விடுதலை: மூன்று நிலைகளைக் கொண்ட விடுதலை குறித்து குட்டியரஸ் பேசுகிறார். முதல்நிலை என்பது மக்களை அழித்து​வரும் அநீதியான சமூக அமைப்பு​களி​லிருந்து விடுதலை பெறுவது. இங்கிருந்​துதான் எல்லாமே தொடங்​கு​கின்றன. இந்த அமைப்புகள் அரசியல், பொருளா​தாரம், பண்பாடு சார்ந்​தவையாக இருக்​கலாம்; அவை இனம், வர்க்கம், நாடு, பாலினம் போன்ற​வற்றின் அடிப்​படையில் அமைந்த திசைதிருப்​பப்பட்ட மனோபாவங்​களால் உருவானவையாக இருக்​கலாம்.

குட்டியரஸ் இந்த முதல் நிலைக்கு இயல்பாகவே அதிக முக்கி​யத்துவம் கொடுத்​துள்ளார். அவர் வாழ்ந்த சூழலில், முழு மனிதநிலை அடைவதற்கு உடனடித் தடையாக இது இருந்​ததும், அவ்விஷ​யத்தில் கடந்த காலத்தில் திருச்சபை சிறிதளவும் கவனம் செலுத்​தாமல் இருந்​ததுமே இதற்குக் காரணமாகும். முதல் நிலையை அவர் பொருளா​தா​ர-அரசியல், சமூக-பண்​பாட்டு விடுதலை என்று இரு வகைப்​படுத்து​கிறார்.

பொருளா​தா​ர-அரசியல் விடுதலை - முதலா​ளித்துவப் பொருளாதார அமைப்பு முறையில், வசதிபடைத்த ஒரு சிலர் உற்பத்​தி​செய்யும் உரிமையைத் தங்களின் கட்டுப்​பாட்டில் வைத்துள்ளனர். இது போன்ற முதலா​ளித்துவ அமைப்பு முறையே அநீதி​யான​தாகும். எனவே, அநீதி​யாகச் சம்பா​தித்த பணம் அல்லது சேர்க்​கப்பட்ட செல்வம் இந்த அமைப்பு முறையில் ‘நல்ல’ வழியில் சேர்க்​கப்​பட்​டாலும்கூட, அது அநீதி​யானது​தான். இதை, ‘நேர்​மையற்ற செல்வம்’ (லூக்கா 16:9) என்று இயேசு சாடுகிறார்.

மேலும் “நீங்கள் கடவுளுக்கும் செல்வத்​துக்கும் பணிவிடை செய்ய முடியாது” (லூக்கா 16:13) என்று தெளிவாகக் கூறுகிறார். தொழிலா​ளர்​களின் உழைப்பு எஜமானர்​களின் மூலதனத்தைக் கூட்டவே உதவுகிறது. ஏழைகளின் உழைப்பு சுரண்​டப்​படு​கிறது. இதனால்தான் முதலா​ளித்துவ அமைப்பால் உருவாக்​கப்பட்ட பொருளாதார முறையை ஒழிக்க வேண்டும் என்ற கருத்தை குட்டியரஸ் முன்மொழிந்​தார்.

சமூக-பண்​பாட்டு விடுதலை: சமூக-கலாச்சார விடுதலை தொடர்பான கருத்துகளை ஃபிராங்க்​பர்ட் மார்க்​சியம் அல்லது விமர்சனக் கோட்பாடு எனும் தத்துவப் பள்ளியி​லிருந்து குட்டியரஸ் பெற்றுள்​ளார். விமர்சனக் கோட்பாடு, மார்க்​சியக் கருத்​தி​யலின் பரிணாம வளர்ச்​சி​யாகும். விமர்சனக் கோட்பாடுகள் செய்ததைப் போலவே, குட்டியரஸும் பண்பாட்டு அம்சங்​களைச் சமூகப் பகுப்​பாய்​வுக்​காகப் பயன்படுத்​தி​யுள்​ளார்.

தூய்மையான வர்க்க அணுகுமுறை மட்டும் போதாது. ஏழைகள் என்று அந்தக் கருத்​தியலை அவர் விரிவாக்கு​கிறார். மக்களது ஆழ்மன ஆசைகளை ஆய்வுசெய்யும் அவர், பொருளா​தா​ரத்​தையும் தாண்டிய விடுதலைக்காக அவர்கள் ஏங்கு​கிறார்கள் என்பதை உணர்ந்​தவர். பொருளா​தாரத் தளத்தைத் தவிர, மற்ற ஒடுக்​கு​முறை​களும் மக்களிடையே இருப்​ப​தையும் அவர் கண்டறிந்​துள்ளார்.

விதியின் ஆதிக்​கத்​திலிருந்து விடுதலை: குட்டியரஸின் கருத்​துப்படி இரண்டாம் நிலை விடுதலை என்பது சற்று நுட்ப​மான​தாகும். விதியின் ஆதிக்​கத்​திலிருந்து பெறுகிற விடுதலைதான் அது. ஒரு மனிதனுடைய வாழ்க்கை என்பது முன்தீர்​மானிக்​கப்பட்ட ஒன்று என்பதும், அதைக் குறித்து எதுவும் செய்ய முடியாது என்ற நிலைதான் விதியின் ஆதிக்கம். தற்போதைய சமூக நிலையை நியாயப்​படுத்த விரும்​பு​கிறவர்கள் இவ்விதிக் கோட்பாட்டை வலியுறுத்து​கிறார்கள்.

பல நூற்றாண்​டு​களாகவே கிறித்துவம் இந்த விதிக் கோட்பாட்டை ஆதரித்தே வந்துள்ளது என்கிறார் குட்டியரஸ். விதி என்ற வார்த்​தைக்குப் பதிலாக ‘இறைச் சித்தம்’, ‘இறை விருப்பம்’ போன்ற சொல்லாடல்களை அது பயன்படுத்து​கிறது. ‘ஆண்டவர் உங்களுக்குக் கொடுப்​பதைக் குறை கூறாமல் ஏற்றுக்​கொள்​ளுங்கள். மறு உலகில் உங்களுக்கு வெகுமானம் கிடைக்​கும்’. இதுவே பெரும்​பாலான மறையுரைகளின் சாரம்.

இப்போதுள்ளது போன்ற நிலைகள் அப்படியே தொடர்ந்து நீடிக்கக் கூடாது என்பதுதான் இந்த விதியின் ஆதிக்​கத்​திலிருந்து பெறுகிற விடுதலை. விவிலியக் கடவுள் நீதியைப் பெற்றுத்தர ஆற்றலோடு செயலாற்றுகிறார். ‘நம்பிக்கை’ என்னும் வார்த்​தைதான் இங்கு முக்கி​யத்துவம் பெறுகிறது.

ஆன்மிக விடுதலை: விடுதலையின் மூன்றாம் நிலை என்பது தனிப்பட்ட பாவம், குற்ற உணர்விலிருந்து விடுதலை பெறுவ​தாகும். இறையியல் கண்ணோட்​டத்தில் பார்க்​கும்போது மனிதனின் விடுதலை என்பது பொருளாதார, அரசியல் விடுதலையைக் கடந்ததாக உள்ளது. விடுதலையின் முழுமையான நிலை என்பது ஆண்டவரோடும் மக்களோடும் இணைந்​திருத்தல் ஆகும்.

குட்டியரஸ் சொல்வதுபோல் விடுதலை என்பது முதல் இரண்டு நிலைகளிலேயே முடிந்​து​விடு​வதல்ல. பாவத்​திலிருந்து மீண்டால்தான் அது நிறைவு​பெறும். பாவம் என்பது தனிமனித விருப்​பங்​களுக்காக வேண்டு​மென்றே ஆண்டவரின் அன்பை ஏற்றுக்​கொள்ள மறுப்​ப​தாகும். ஆண்டவரின் இந்த அன்பை ஒதுக்​கித்​தள்ளும் தனிப்பட்ட மறுப்பு என்பது சமூகப் பின்விளைவு​களைக் கொண்ட​தாகும்.

ஒருங்​கிணைந்த விடுதலை: ‘விடுதலை’ என்கிற கருத்​தாக்​கத்தை மூன்று நிலைகளாகப் பிரித்​ததைப் போலவே, அவற்றை மீண்டும் சேர்த்து​வைத்து நிறைவுசெய்​வதும் அவசிய​மாகிறது. இவை ஒன்றுக்​கொன்று தொடர்​புடையனவாக​வும், ஒன்றையொன்று சார்ந்​துள்ளவை​யாகவும் இருக்​கின்றன.

இவை ஒவ்வொன்றும் தனித்துவம் வாய்ந்​தவையாக இருந்த​போ​தி​லும், ஒன்று இல்லாமல் மற்றொன்று இருக்க முடியாது. இதை மனதில் இருத்துவது, வாழ்வில் மோசமான யதார்த்​தங்களை மறுக்கும் ‘வறட்டு ஆன்மிகத்​திலிருந்து’ நம்மைக் காப்ப​தோடு, வாழ்வின் உடனடித் தேவைகளை மட்டும் பூர்த்தி​செய்யும் ஆழமற்ற ஆய்வுப் போக்கி​லிருந்தும் நம்மைக் காக்கும்.

ஏழைகளின் கண்ணோட்​டத்தில் இருந்தும் அவர்களது விடுதலைக்கான அக்கறையில் இருந்தும் யதார்த்​தங்​களைக் குறித்த ஒரு தெளிவான வாசிப்பு உருவாக்​கப்பட வேண்டும் என்றுதான் விடுதலை இறையியல் எதிர்​பார்க்​கிறது. விடுதலை இறையியல் கோட்பாடுகள் தொடர்ந்து மற்ற இறையியல் கோட்பாடு​களுக்குச் சவாலாகவே இருந்​து​வரு​கின்றன.

குறிப்பாக, முதலா​ளித்து​வத்​துடன் கைகோக்கும் கோட்பாடுகள், இதர அநீதியான சமூக அமைப்பை நியாயப்​படுத்தும் ஊக, வெற்று, வறட்டு ஆன்மிகக் கோட்பாடு​களுக்கும் சவாலாக இருந்து வருகிறது. எனவேதான் விடுதலை இறையியல், இறையியலையும் ‘விடுதலை’ செய்திருக்​கிறது எனலாம். கறுப்பர் இறையியல், பெண்ணிய இறையியல், தலித் இறையியல், பழங்குடி இறையியல், தமிழ்த் தேசிய இறையியல், சூழலியல் இறையியல் போன்ற புதிய சிந்தனைப் போக்குகள் குட்டியரஸ் உருவாக்கிய விடுதலை இறையியலின் குழந்​தைகளே!

_ தொடர்புக்கு: basilxavier@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in