

இன்றைய காலக்கட்ட ஈழ எழுத்தாளர்களில் குறிப்பிடத்தகுந்தவர் வாசு முருகவேல். இலங்கையின் வட பகுதியிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட நிகழ்வைப் பின்னணியாகக் கொண்ட ‘ஜெப்னா பேக்கரி’ இவரது முக்கியமான நாவல். ஈழப் பின்னணியிலும் சென்னைப் பின்னணியிலும் எழுதிவருகிறார். இவரது வெளிவராத புதிய நாவலான ‘அன்னா’ இலங்கையின் இறுதிப் போர்ச் சூழலைப் பின்னணியாகக் கொண்டது; எதிர் பதிப்பக வெளியீடாக வரவுள்ளது. அதன் ஒரு பகுதி இது.
வேலி அருகே குவித்திருந்த பூவரசம் இலைச் சருகுகளைக் காற்று கலைத்துப் போட்டிருந்தது. தென்னைகளில் மறைந்து வீசிக்கொண்டிருந்த காற்று தன்னை அடையாளம் காட்டிக்கொள்ள விரும்பவில்லை. காய்ந்த சருகுகள் மேல் சுருக்கம்விழுந்த உள்ளங்கையை விரித்துப் பார்த்துவிட்டுப் படலையைத் திறந்துகொண்டு உள்ளே போனாள். மக்களை வீரியம்கொண்டு அடித்து ஒழுங்காக்கிய கையும் இதுதான் என்று நெஞ்சுச்சதைகளின் உள்ளே நினைவுகள் விம்மின.
மூத்தவன் சுடப்பட்டு இறந்தான் என்று சொல்லிக்கொண்டாலும், காயப்பட்டவனின் தலையை அடித்து உடைத்தது துவக்கின் இரும்புதான். உடலைக் கைப்பற்றிக் கொண்டுவருவதற்கு எடுத்துக்கொண்ட முயற்சியில் நகுலன் என்ற தளபதியை இழந்திருந்தது படையணி. உடல்களைக் கொண்டுவந்து சேர்த்தது மட்டுமே வெற்றியாகிப்போன நாளில் அழுகைகள் அதிகம் கேட்டன.
அன்னாவின் வீட்டின் சடங்குகளை மட்டும் ஊரே பார்த்துக்கொண்டிருந்ததற்குக் காரணம் இல்லாமல் இல்லை. ஊரில் எத்தனை பெடிபெட்டைகளைச் சேர்த்துவிட்டவள் என்று வாயடித்தவர்கள் காத்திருந்த நாளும் அதுதான். சொந்த மகன் போனால் மட்டும்தான் இவளுக்கெல்லாம் விளங்கும் என்றவர்களை விம்மி அழவைத்துவிட்டது மரண வீடு.
எட்டாம் நாள் அசைவ உணவுகளை எல்லாம் தயார்செய்திருந்தாள். மீனும் நண்டும் மட்டும் இல்லை. கணவாயும் றாலும் மட்டியும்கூடத் தலைவாழை இலையில் நிரம்பியிருந்தது. சோற்றுக்குப் பதில் சிவப்பரிசிமா புட்டு மட்டும் அவித்திருந்தாள். அது சுற்றி நின்ற சனத்துக்கு வித்தியாசமாக இருந்தாலும் அங்கிருந்த சக போராளிகளுக்கு மட்டும் வித்தியாசமாகப்படவில்லை. அது அவர்களுக்குப் பழகிப்போனதுதான்.
களத்தில் இருந்து விடுமுறைக்கு எப்போது வந்தாலும் புட்டுதான் அவன் விருப்ப உணவு. பட்டப்பகல் வெயிலில் வந்தாலும் புட்டுதான் கேட்பான். மகனுக்கு அப்படியே செய்து பழகியதில் சக போராளிகள் யார் வந்தாலும் கேட்காமல் புட்டு அவித்துக் கொட்டிவிடுவாள். சம்பலோ சொதியோ அது நேரங் காலத்தைப் பொறுத்தது. ஆனால், புட்டு மட்டும் நேரங் காலத்திற்கு அப்பாற்பட்டதாக இருந்த வீடு அது.
அன்றைக்குத் தளபதிகள் மூலம் செய்திகளை அனுப்பியும்கூடச் சின்னவன் வரவில்லை. முதலில் போன செய்திகளைத் தவிர்க்கும்போதே, புரிந்துகொண்டிருக்க வேண்டும் என்ற எண்ணம் அன்னாவுக்கு நேரம் கடந்தே புத்தியில் ஏறியது.
“என்ன நடந்தாலும் நீ தலைவரோடதான் இருக்கோணும்.”
மூத்தவன் தம்பிக்காரனிடம் சொல்லி, “நானே செத்தாலும்” என்று இழுத்தபோது, புலிச் சீருடைக்கு மேல் முதுகில் தொம்மென்று விழுந்தது அடி.
சின்னவன் எப்படி ஓடித் தப்பினான் என்று கண்டுபிடிக்கும் கணத்தில், இரண்டாவது அடியும் முதுகில்தான் விழுந்தது. வாழை இலையில் குவிந்திருந்த புட்டில் இருந்து அசைந்து கொடுக்காமல் நெளிந்தான் மூத்தவன். எதற்கும் ஒருமுறை எட்டிப் பார்ப்போம் என்று படலையடி வரையில் வந்து பார்த்தாள்.
“இயக்கம் நல்ல ரெயினிங்தான் குடுத்திருக்குபோல.” நாலா பக்கமும் திரும்பிப் பார்த்துவிட்டு முணுமுணுத்துக்கொண்டு திரும்பி வந்து பார்த்தபோது, வாழையிலை வழித்துத் துடைக்கப்பட்டிருந்தது.
தளபதிகள், வந்தவர்கள், போனவர்கள் செலவழித்தது போகத் தன்னுடைய சிறுசேமிப்பையும் கொட்டி, செத்த வீட்டை ஊரே பார்க்கும்விதமாக நடத்தி முடித்தாள்.
ஊரில் எங்கு வித்துடல் வந்தாலும் சனம் கூடுவது மரபாகிப் போனாலும் அன்னாவின் வீட்டில் அந்தக் கூட்டம் கூடியது தளபதிகள் சிலருக்கே கொஞ்சம் புதினமாகத்தான் பட்டது. போராட்டத்திற்குப் பெடிபெட்டையைச் சேர்த்தாலும், வயது வரம்பில் தொடங்கிக் குடும்பச் சூழல் வரையில் கணக்கெடுத்து இயக்கத்தில் ஆள் சேர்த்தவர்கள் குறைவுதான். வயது வரம்பு மட்டுமே கணக்கில்கொண்டு செயற்பட்டவர்களை விடவும் அன்னாவுக்கு வந்த நல்ல பெயர் கொஞ்சம் அதிகம்தான்.
ஒரு பொம்பளை... ஒரு தாய்... என்று தமிழ் மரபில் இருந்த அத்தனை பெண் ஸ்தானங்களும் அன்னாவுக்குப் பூட்டி கடிந்து கொண்டவர்கள், அந்த ஊரின் சனத்தொகையில் பார்த்தால் கொஞ்சம் அதிகம்தான். அவர்கள் அழுதுகொண்டு வித்துடலைக் கொண்டு போனதுதான் அன்னாவுக்குக் கிடைத்த ஒரேயொரு இறுதி மரியாதை.
பூவரசம் வேலியடியால் அசைந்துபோன ஒளியின் நிழல் காக்காதான் என்று கண்டுபிடித்து எழும்பிப் போவதற்கு அன்னாவுக்கு ஒரு நொடி போதுமானதாக இருந்தது. காக்கா மகனைக் கண்டுபிடித்துவிட்டார் என்று சொல்லித் தெரிய வேண்டியதாக இருக்கவில்லை அன்னாவுக்கு. காக்காவும் மகனை முதுகில் அடித்துதான் வளர்த்திருப்பார். ஒத்த பிள்ளை என்று சொன்ன ஞாபகம். அணைத்தும்தான் வளர்த்திருப்பார் இல்லையா? ‘தொப்பி பிரட்டியள்’ என்று சொல்லுகிற சனம் கிளிநொச்சியிலும் இருக்கத்தான் செய்தார்கள்.
“நடந்த எதையும் முழுசாத் தெரிஞ்ச சனமும் இப்ப குறைஞ்சு கொண்டுதான் போகுது. மிஞ்சுகிறவர்கள் தன்னையும் நாளைக்குப் பிரட்டிப்போட யோசிக்க மாட்டினும்.”
மனதில் விம்மி வந்த வார்த்தைகளை மென்று விழுங்கிக்கொண்டு வெளி விறாந்தையில் கால்களை நீட்டி அமர்ந்தாள். காக்காவின் மகன் கடைசியாக வீட்டுக்கு வந்து போகும்போதும், அதுதான் கடைசிச் சந்திப்பு என்பதைக் கண்டுபிடிக்க காக்காவால் முடியவில்லை. அவன் அடிக்கடி வீட்டுக்கு வந்து போய்க்கொண்டு இருந்ததும், அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். அவன் இயக்கத்தில் இருந்தாலும் நடவடிக்கைகளில் எந்த ஒரு மாற்றமும் தென்பட்டதில்லை.
புளொட் இயக்கத்தின் பிடியில் இருந்த போராளிகளை மீட்பதில் பெரும் பின்னடைவு ஏற்பட்டதற்குக் காரணம், புளொட்டின் முகாமை அடைவதற்கு இந்திய ராணுவத்தின் பாதுகாப்புச் சோதனைச் சாவடிகளைக் கடந்துபோக வேண்டி இருந்ததுதான். புலிகளின் முகாமைத் தாக்கி நான்கு பேரைக் கொன்றதுடன் மூவரைப் பிடித்துக்கொண்டு போயிருந்தது புளொட்.
இந்திய ராணுவம் புலிகள் தாக்கப்பட்டது குறித்துக் கண்டுகொள்ளாமல் இருந்ததுடன் அவர்களின் ரகசியங் களை அறிவதற்கு உயிருடன் பிடிபட்ட போராளிகளை அடித்துச் சித்ரவதை செய்துகொண்டிருந்தது. எந்த வகையிலும் தங்கள் பெயர் வெளியே வந்துவிடாமல் இருக்கத்தான் புளொட் இயக்கத்தைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள். இந்திய ராணுவத்தின் பாதுகாவலை மீறி உள்ளே போகும் திறமை காக்காவின் மகனிடம்தான் இருந்தது. அவன் காக்காவின் மகனாகவே புளொட் அமைப்பில் சேர்வதற்கு அடிக்கடி அங்கு சென்று வந்துகொண்டிருந்தான்.
ஒரு மாதத் தொடர் அலைச்சலின் பின்னேதான் உயிருடன் பிடிக்கப்பட்ட இயக்கப் போராளிகள் அங்கு எந்த இடத்தில் அடைத்துவைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை அவன் கண்டுபிடித்தான். மிகுந்த போராட்டத்தின் இடையே அவர்களைக் கண்டுபிடித்தாலும் அவர்களை மீட்பது என்பது ஐமிச்சம் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டி இருந்தது. இந்திய ராணுவ முகாமைத் தாக்காமல் புளொட் முகாமின் உள்ளே போவது சாத்தியமில்லை. இந்திய ராணுவத்தையும் புளொட் இயக்கத்தையும் ஒரே இடத்தில் எதிர்கொள்வது பெரும் மோதலாக உருவெடுக்கும் என்பதால், அதைத் தவிர்ப்பதில்தான் தலைமை கவனம் கொண்டிருந்தது.
அவர்களை மீட்கும் பொறுப்பு அவனிடம் மட்டுமே ஒப்படைக்கப்பட்டது. இந்திய ராணுவ முகாமைக் கடந்து கொண்டுபோகக்கூடிய ஒரே ஆயுதம் உயிராயுதமான சயனைடுதான். அவன் கேட்டுக்கொண்ட சயனைட் குப்பிகள் அவனிடம் ஒப்படைக்கப்பட்டன.
பெருமாள் முருகனின் ‘அரைஞாண்’ (காலச்சுவடு), கரன் கார்க்கியின் ‘கருந்துளை’ (சீர் வாசகர் வட்டம்), என்.ஸ்ரீராமின் ‘இரவோடி’ (பரிசல் புத்தக நிலையம்), சு.தமிழ்ச்செல்வியின் ‘பிள்ளைக்கனியமுதே’ (என்.சி.பி.எச்) ஆகிய புதிய நாவல்களின் பகுதிகளும் இந்து தமிழ் திசை தீபாவளி மலரில் இடம்பெற்றுள்ளன.