செய்மெய்யின் முன்னோர்கள் | ஏஐ எதிர்காலம் இன்று 03

செய்மெய்யின் முன்னோர்கள் | ஏஐ எதிர்காலம் இன்று 03
Updated on
3 min read

ஏஐ என்றாலே ரோபாட்கள், அதிலும் குறிப்பாக ‘ஹியூமனாய்​டுகள்’ என்றழைக்​கப்​படும் மனித உருவில் உள்ள இயந்திரங்களே நம் மனதில் தோன்றுகின்றன. மனிதர்​களைப் போலவே சிந்திக்கும் தொழில்​நுட்​பங்​களின் வரலாறு என்பது, மனிதர்​களைப் போலவே வேலை செய்கிற, மனிதர்​களைப் போலவே உருவம் உள்ள இயந்திரங்களை உருவாக்கு​வ​தில்தான் தொடங்​கியது. எனவேதான் செயற்கை நுண்ணறிவு என்பது 20 ஆம் நூற்றாண்டுத் தொழில்​நுட்பமாக இருந்​தா​லும், அதைப் புரிந்​து​கொள்​வதற்கு இந்தப் பாலைவனம் வரை நாம் காலப் பயணம் செய்ய நேரிட்டது.

பாலைவனத்​தில், அந்தப் பிரமிடை நோக்கி நாங்கள் சென்ற பயணத்தின் நோக்கம், வரலாற்றில் மனிதர்கள் உருவாக்கிய முதல் மனித உருவிலான தானியங்​கிகளை நேரடியாக நலம் விசாரித்து​விட்டு வருவது​தான். 4,000 ஆண்டு​களுக்கு முன்பு எகிப்தின் நைல் நதி நாகரிகம் அதன் உச்சத்தில் இருந்த​போதுதான் அது நடந்திருக்​கிறது.

“எங்களுடைய மூதாதையர்கள் பண்டைய எகிப்தில் உருவாக்​கப்​பட்​டிருந்​தார்கள். அந்த வரலாறே நமக்குச் சமீபத்​தில்தான் தெரிந்தது. நியூயார்க்கில் உள்ள மெட்ரோபாலிடன் மியூசியம் ஆஃப் ஆர்ட்டில் இருந்த ஒரு பழைய எகிப்திய உருவத்தின் உட்புறத்தில் கப்பி போன்ற ஒரு சாதனம் இருந்​ததைக் கண்டறிந்​தார்கள்” என்று தன் புராணத்தைத் தொடங்​கியது செய்மெய்.

அழகான அந்தப் பிரமிடின் வாயிலிலிருந்து சற்றுத் தொலைவில் இறங்கி அங்கே இருந்த கட்டிடம் ஒன்றுக்குள் நுழைந்​தோம். நாங்கள் மெய்ந்​நிகர் பயணிகள் என்பதால் பாரோக்​களின் வீரர்​களுக்கு நாங்கள் புலப்​பட​வில்லை. அந்தக் கட்டிடத்தின் உள்பகு​தியில் சில குள்ளமான உருவங்கள் வைக்கப்​பட்​டிருந்தன.

செய்மெய் என்னை அங்குதான் கூட்டிச்​சென்றது. அருகில் செல்லும்போது அந்த உருவங்​களில் இயக்கமும் நகர்வும் தோன்றியது. சில உருவங்​களில் கைகளும் கால்களும் மேலே கீழே என இயங்கின. சில குள்ளர்​களிட​மிருந்து ஏதோ சத்தமும் கேட்டது. ஆஹா, அந்த உருவங்கள் தமக்குள் சில கம்பிகளால் பிணைக்​கப்​பட்​டிருந்தன. அவை ஒரு லயத்தோடு அசைந்​தன... நடனமாடு​கின்​றனவா!

“என்ன இது செய்மெய்?” என்று நான் ஆச்சரி​யத்தோடு கேட்டேன். செய்மெய் அந்த உருவங்​களையே உற்றுப் பார்த்​துக்​கொண்டிருந்தது. அதன் முகத்தில் சோகமும் ஏக்கமும் ஏன் நன்றி உணர்வும்​கூடத் தெரிந்தது.

“எங்கள் மூதாதையர்​கள்!” பிறகு, செய்மெய் அங்கிருந்து நகர்ந்து வேறிடத்​துக்கு அழைத்​துச்​சென்றது. அங்கே சிலைகளை, பேசும் சிலைகளைப் பார்த்​தேன். இவை எகிப்​தி​யர்​களின் தெய்வங்கள். தங்க முலாம் பூசப்பட்ட ஒரு சிலையி​லிருந்து வந்த சத்தம் உண்மையில் உள்ளே​யிருந்த ஒரு பூசாரியின் சத்தம்​தான். ஆனால், சிலை வழியாக அது வெளிவந்தது. ஒரு சிலை ஏதோ பேசியது, பக்கத்தில் ஒரு முதியவர் அதைப் பயபக்​தி
யோடு கேட்டுக்​கொண்​டிருந்​தார்.

“பக்கத்து தேசத்தில் என்ன நடந்தது தெரியுமா?” என்று தன் மூதாதையர்​களின் வரலாற்றைச் சொல்லத் தொடங்​கியது செய்மெய். “இப்போது சூடான் என்று அழைக்​கப்​படும் நாட்டில் பண்டைய நகரமான தேபசில் உள்ள அமுன் கோயிலில், ராஜ குடும்பத்தைச் சேர்ந்த ஆண்களை வரிசையாக நிற்க​வைத்து, அதில் யார் அடுத்த பாரோ என்பதையே ஒரு சிலைதான் தேர்ந்​தெடுத்தது. அங்கே இருக்கும் தெய்வச் சிலை யாரைப் பார்த்துக் கையை உயர்த்தி ஆசிர்​வ​திக்​கிறதோ அவர்தான் ராஜா. நீ என்னடா என்றால், எங்களை அஃறிணை என்கிறாய்” என்றது.

நான் சிரித்​துக்​கொண்​டேன். “அம்பாள் என்றைக்கடா பேசினாள், செய்மெய்? பின்னாலிருந்து ஒரு பூசாரிதான் பேசவைத்​திருப்​பான்” என்றேன். கோபமடைந்த செய்மெய் தன் பேச்சைத் திசைதிருப்​பியது. “சரி விடுங்கள், உங்களுக்கு இந்த உருவங்​களைப் பார்த்தால் ஆச்சரியமாக இல்லையா?”

“ஆச்சரிய​மாகத்தான் இருக்​கிறது. இவற்றையெல்லாம் எப்படிச் செய்தார்​கள்?” “இந்த உருவங்​களையும் அவற்றுக்குள் தானியங்குக் கருவி​களையும் பொருத்துகிற தொழில்​நுட்பம் அசாதா​ரண​மானது கவின். முதலில் பண்டைய எகிப்​தி​யர்கள் எந்தெந்த அறிவியல் தொழில்​நுட்​பங்​களில் தேர்ச்சி அடைந்​திருந்​தால், இத்தகைய செயற்கை உருவங்களை உருவாக்கி​யிருக்க முடியும் என்பதைப் பட்டியல் போட்டுப் பார்ப்​போம்.

“தானி​யங்​கிகள் - ஆட்டோமேட்​டன்கள் - என்று அழைக்​கப்​படும் இவை அடிப்​படையில் இயக்க​வியல் இயந்திரங்கள். இந்த உருவங்​களுக்குள் கப்பிகள், நெம்பு​கோல்கள், சுழல் மையங்கள், சமான எடைகள் போன்ற பாகங்களை இவர்கள் பயன்படுத்​தி​யிருக்​கிறார்கள் என்றால், அடிப்படை இயற்பியலை இவர்கள் கற்றுத் தேர்ந்​திருக்க வேண்டும். விசையியலைப் பற்றித் தெரிந்​திருக்​கா​விட்டால் இந்தச் சிலை தன் சிறிதளவு சக்தியைப் பயன்படுத்திப் பெரிய நகர்வை மேற்கொண்​டிருக்க முடியாது.

“இந்த இயந்திரங்​களுக்குள் நீரால் இயக்கப்​படுகிற ஹைட்ராலிக்ஸ் முறைகளும் காற்றழுத்​தத்தால் இயக்கப்​படுகிற நியூமாட்​டிக்ஸ் நுட்பங்​களும் இருக்​கின்றன. எல்லா​வற்றுக்கும் மேலாக இந்த உருவங்களை உருவாக்க செம்பு, வெண்கலம் போன்றவை பயன்படுத்​தப்​பட்​டிருக்​கின்றன. அதற்கு முதலில் உலோகவியல் உங்களுக்குத் தெரிந்​திருந்​திருக்க வேண்டும். பருப்​பொருள்​களின் பண்புகள் தெரிந்​திருந்​திருக்க வேண்டும்.

எல்லா​வற்றுக்கும் மேலாகத் துல்லியப் பொறியியலும் அழகிய கைவினையும் கைவரப்​பெற்றிருக்க வேண்டும்!” செய்மெய்யின் விரல்களை இப்போதுதான் பார்த்​தேன். அது அடுக்​கிக்​கொண்டே சென்றது. “இயந்​திர​வியல் நுட்பங்கள் வடிவயியல் இல்லாமல் வராது. வடிவவியல், கணிதம் இல்லாமல் சாத்தி​யமில்லை. கணிதம், எண்களைப் பற்றிய அறிவு இல்லாமல் சாத்தி​யமில்​லை... பார்த்​தீர்களா, ஒலியெழுப்ப ஒலி இயக்க​வியலும் சிலைகள் மற்றவர்​களைத் தன்பக்கம் ஈர்க்க ஒளி இயக்க​வியலும் தேவைப்​பட்​டிருக்​கும்...”

நான் இடைமறித்​தேன். “இதில் என்ன ஆச்சரியம்? இவ்வளவு பிரம்​மாண்டமான பிரமிடு​களைக் கட்டிய அறிவுக்குச் சொந்தக்​காரர்​களால், இப்படியொரு பொம்மையை உருவாக்க முடியாதா என்ன?” “எங்களையும் எங்கள் மூதாதையர்​களையும் பொம்மைகள் என்று சொல்லா​விட்டால் உங்களுக்குத் தூக்கம் வராதே, மிஸ்டர் ரைட்டர்” என்றது செய்மெய். இதை வடிவமைத்தவன் கோபக்​காரனாகத்தான் இருந்​திருக்க வேண்டும்.

“கவின், ஒன்றைக் கவனித்​தீர்களா? மனிதர்​களின் வரலாறு நதிக்கரை நாகரி​கங்​களில்தான் தொடங்​கும். அந்த நதிக்கரை நாகரி​கங்​களில், மெசபடோமி​யா​வுக்கு அடுத்து, காலத்தால் மூத்தது நைல் நதிக்கரை நாகரிகம். உங்களுடைய வரலாறும் நதிக்​கரைகளில்தான் தொடங்​கியது.

எங்களுடைய வரலாறும் நதிக்​கரைகளில்தான் தொடங்கி​யிருக்​கிறது” என்று கூறிய செய்மெய், “உங்கள் எழுதப்பட்ட வரலாறும் எங்கள் எழுதப்பட்ட வரலாறும் இதோ இந்தப் பறவையி​லிருந்​துதான் தொடங்​கு​கின்றன” என்று கூறியபடி, ஒரு மந்திர​வா​தியைப் போல ஒரு சிறிய பறவை உருவைக் காற்றி​லிருந்து கைப்பற்றித் தன் கைகளில் மின்னல் வேகத்தில் எடுத்துக் காண்பித்தது செய்மெய். நான் சற்றே அதிர்ச்​சி​யடைந்து, அதைப் பார்த்​தேன்.

“சக்காரா பறவை! - பயப்படாதீர்கள். இது அஃறிணை​தான்​!”

- தொடர்புக்கு: senthil.nathan@ailaysa.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in