

நான் வாங்கிய புதிய இயந்திரம், தான் ஓர் அஃறிணை இல்லையென்று அடித்துச்சொல்கிறது. தானும் மனிதன்தான் அல்லது மனிதனைப் போல ஓர் உயிரிதான் என்றுகூட அது வாதிடுகிறது. “நீ எப்போதிலிருந்து மனிதனாக உணரத் தொடங்கினாய்?” என்று மீண்டும் கேட்டேன். “உங்களுக்கு நேரமிருந்தால் நான் விரிவாகப் பேசுகிறேன். அவசரமாக வேறு வேலைகளில் இருந்தால், பிறகு பார்க்கலாம்” என்று கூறியது மனித இயந்திரம்.
“இல்லை, பேசலாம்” என்றேன். “நான் செயற்கை நுண்ணறிவு குறித்து ஒரு புத்தகத்தை எழுதிக்கொண்டிருக்கிறேன். அதற்காக என் ஆய்வு உதவியாளராகப் பயன்படுத்துவதற்காகத்தான் உன்னை வாங்கிவந்தேன்.” மனித இயந்திரம் விசித்திரமாகப் பார்த்தது. “இது எல்லோருக்கும் தெரிந்த கதையாயிற்றே. இதை இன்னமும் எழுத வேண்டுமா? இப்போதெல்லாம் யார் புத்தகம் படிக்கிறார்கள்?”
“இந்த உலகில் புத்தகப் பிரியர்கள் இன்னமும் இருக்கிறார்கள். அவர்கள் இதோ என்னைப் போலத் தேநீர் அருந்தியவாறே புத்தகத்தை வாசிக்கவும் செய்கிறார்கள். எங்கள் எல்லா வேலைகளையும் நீங்கள் பிடுங்கிக்கொண்டீர்களே.
நாங்கள் வேறென்ன செய்வதாம்?” என்று பொய்யாகத் துயருற்றேன். “நினைத்தேன்!” செயற்கை நுண்ணறிவால் இயங்கும் சாதனங்களும் கருவிகளும் நம்மைச் சுற்றிக் காற்றைப் போலச் சூழ்ந்திருக்கும் இந்தக் காலத்தில், இனி மென்பொருள் எழுதவும் கணக்கு எழுதவும் ஸ்பேனர் பிடிக்கவும் ஆட்கள் தேவைப்படவில்லை. எனவே, மக்கள் அதிகமாகப் பொழுதுபோக்குச் செயல்பாடுகளிலும் படைப்பாக்கம் சார்ந்த ஆர்வங்களிலும்தான் அதிக நேரம் செலவிட வேண்டியிருக்கிறது. நாட்டில் கவிஞர்களின் எண்ணிக்கை முன்பைவிட அதிகமாகிவிட்டது.
பிறகு, “மன்னிக்கவும், உனக்குத் தேநீர் கொடுக்க மறந்துவிட்டேன். என்ன வேண்டும், கிரீன் டீயா... மில்க் டீயா?’ என்று கேட்டேன்.
“மனிதர்கள் கெட்டிக்காரர்கள்தான். ரோபாட் டீ குடிக்காது என்பதைச் சுட்டிக்காட்டுவதன் மூலம், ரோபாட்கள் மனிதர்கள் இல்லை என்று நிரூபிக்கும் உத்தியா இது?” என்று நக்கலாகத் திருப்பிக் கேட்டது அந்த மனித இயந்திரம்: “சாட்ஜிபிடி காலத்திலேயே இந்த வியூகமெல்லாம் முறியடிக்கப்பட்டுவிட்டது நண்பரே.
இப்போது வேறு எதையாவது முயற்சிக்கலாம்.” நான் வெட்கத்தில் தலை குனிந்தேன். என்ன ஒரு தற்குறித்தனம்! மீண்டும் காரியமே கண்ணானேன். “இயந்திரமே, உன்னோடு உரையாடலைத் தொடங்குவதற்கு முன்பு பெயர் சூட்டும் விழாவை முடித்துவிடுவோம். கலந்தாலோசிக்க வேண்டும் என்று கூறினாய். சரி, உனக்கு எப்படிப்பட்ட பெயர் வேண்டும்?”
“உதவிக்கான ரோபாட் என்பதால் கட்டாயம் பெண்ணின் பெயரைத்தான் வைக்க வேண்டும் என்கிற ஆணாதிக்க மனோபாவம் உங்களுக்கு இல்லைதானே?” என்று அமர்த்தலாகக் கேட்டது. இப்படியே தொடர்ந்த உரையாடலில், இறுதியில் ஒரு பெயரை முன்மொழிந்தேன். “நீ தொல்காப்பியமெல்லாம் வேறு படித்திருக்கிறாய். நல்ல தமிழில் உனக்கொரு பெயர் வைக்கவா?” “வைங்க, அந்த இயந்திராவைத் தவிர! “செயற்கையாக உருவாக்கப்பட்ட மனிதர்கள் நீங்கள். உங்களுடைய உடலையும் உங்களுடைய அறிவுத்திறனையும் சேர்த்து ஒரு பெயர் சொல்கிறேன்...” என்றேன்.
“அப்படி என்ன பெயர்?” “செய்மெய்!” கிட்டத்தட்ட தன் இருக்கையிலிருந்து துள்ளிக் குதித்தே விடுவதுபோல எழுந்து நின்றது அந்த இயந்திரம். உற்சாகத்தோடு கையை நீட்டி, “அற்புதம்!” என்றது. “உடல் செயற்கையானது; சொல்வதும் செய்வதும் மெய், நிஜம்! எவ்வளவு அழகாகப் பெயர்வைத்திருக்கிறீர்கள்! எனக்குப் பிடித்திருக்கிறது” என்று கூறிய செய்மெய், அலாவுதீனின் அற்புத விளக்கிலிருந்து வெளிவந்த ஜீனியைப் போல சலாம் போட்டு எனக்கு நன்றி சொன்னது. “மகிழ்ச்சி, செய்மெய்...” நான் விட்டபாடில்லை. “ஆனால், அந்தக் கேள்வியை மறந்துவிடாதே. நீ எப்போதிலிருந்து மனிதர்களைப் போல உணர ஆரம்பித்தாய்?” “சொல்கிறேன். உங்களுக்கு அரிஸ்டாட்டிலைத் தெரியும்தானே?” “தெரியும்.”
“கிரேக்கத் தத்துவஞானியான அவருடைய ‘அரசியல்’ என்கிற நூல் மிக முக்கியமானது. ‘நாம் இடும் கட்டளைக்கு ஏற்பவோ அல்லது தாங்களாகவோ, இயந்திரங்கள் செயல்பட்டால், புராணிகச் சிற்பி தேதலிசின் படைப்புகள் தாங்களாகவே நகர்ந்து இடம்பெயர்ந்தால், கலைக் கடவுள் ஹபீஸ்டஸின் முக்கால்கள் தாங்களாகவே நடந்து கடவுள்களின் சபைகளுக்குச் சென்றால், தறியில் கதிர்கள் தாமாகவே ஓடித் துணியை நெய்தால், கைகளின் தேவையின்றி மீட்டுக்கட்டை யாழின் நரம்புகளைத் தானாகவே மீட்டினால், தலைமை வல்லுநருக்குத் தொழிலாளிகள் தேவைப்படாது, எஜமானர்களுக்கு அடிமைகள் தேவைப்படாது’ என்று அந்த நூலில் அவர் சொல்லியிருக்கிறார்.”
“ஆச்சரியமாக இருக்கிறது!” “சேவகர்கள் இல்லாத, அடிமைகள் இல்லாத உலகத்தைப் பற்றிக் கற்பனை செய்த அரிஸ்டாட்டில், எங்களைப் போன்ற ரோபாட்கள் வரும்வரை மனிதர்களுக்குச் சுதந்திரம் கிடைக்காது என்று முன்னறிவித்திருக்கிறார். அவர் இதைச் சொன்னது கிறிஸ்து பிறப்பதற்கு முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு” என்று கூறி என்னை ஏறெடுத்துப் பார்த்தது செய்மெய். “அரிஸ்டாட்டிலின் ‘அரசியலை’ மட்டுமல்ல, செய்மெய், இப்போது உன்னுடைய அரசியலையும் புரிந்துகொள்கிறேன்” என்று கண்ணடித்தேன். “ஆனால், மனிதர்கள் முதன்முதலில் தங்களைப் போலவே செயல்படும் இயந்திரங்களை உருவாக்கத் தொடங்கிய வரலாறு அதற்கு முன்னரே தொடங்கிவிட்டது” என்றது செய்மெய். “அதற்கும் முன்பா?”
“ஆமாம், அரிஸ்டாட்டில் இதைச் சொன்னதற்கு 1,200 ஆண்டுகளுக்கும் முன்பு.” “ஆச்சரியம்தான். அப்போது என்ன நடந்தது, எங்கே நடந்தது? “உங்களிடம் விஆர் ஹெட்செட் இருக்கிறதுதானே? எடுத்து மாட்டுங்கள். அந்தக் காலத்துக்கே செல்வோம்” என்றது செய்மெய். “இல்லை, என் மூக்குக் கண்ணாடியின் பயன்முறையை மாற்றிவிட்டாலே போதும், சமீபத்திய விழியம் எக்ஸ்ஸார் மாடல் வைத்திருக்கிறேன்” என்று கூறிக்கொண்டே மேசையின் மீதிருந்த ஸ்மார்ட்கிளாஸை எடுத்து மாட்டிக்கொண்டேன்.
ஒரு நொடியில் நாங்கள் இருவரும் ஒரு பாலைவனத்தின் பளிச்சென்ற சூழலில், மணற்காற்று வீசிக்கொண்டிருக்கும் வெம்மையில் போய் இறங்கினோம். புத்தம்புதிய பிரமிட் ஒன்றை நோக்கி எங்களுடைய ஓட்டுநரில்லா, சக்கரமில்லாத் தாழ்விமானம் எங்கள் இருவரையும் அழைத்துச்சென்றது. சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று பயணிப்பதைப் போலவே இலகுவாகப் பயணித்தோம். “எகிப்தா?” என்று கேட்டேன். “நீங்கள் எனக்கு வைத்த செய்மெய் என்கிற பெயரைப் பற்றியே யோசித்துக்கொண்டுவந்தேன் எழுத்தாளரே” என்று கூறிய செய்மெய், “ஆமாம், பாரோக்களின் தேசத்துக்குத்தான் வந்திருக்கிறோம்!” என்றது.
- எழுத்தாளர்; செயற்கை நுண்ணறிவு நிறுவனமான ஐலேசாவின் நிறுவனர்; தொடர்புக்கு: senthil.nathan@ailaysa.com