எழுத்தாளன் சும்மா முந்திரிக்கொட்டை பொறுக்குபவன்தான் - நேர்காணல்: கண்மணி குணசேகரன்

எழுத்தாளன் சும்மா முந்திரிக்கொட்டை பொறுக்குபவன்தான் - நேர்காணல்: கண்மணி குணசேகரன்
Updated on
3 min read

கண்மணி குணசேகரன், தமிழின் தனித்துவமான நடுநாட்டு கதைசொல்லி. இவர் எழுதிய ‘அஞ்சலை’ தமிழ் கிளாசிக் நாவல்​களில் ஒன்றாகக் கருதப்​படு​கிறது. ‘நடுநாட்டுச் சொல்ல​க​ரா​தி’யைத் தொகுத்​துள்ளார். இவரது சமீபத்திய ‘பேரழகி’ நாவல் குறித்து உரையாடியதன் சுருக்​கப்பட்ட பகுதி:

பேரழகி நாவலின் பின்னணி என்ன?

என்னுடைய நாவல்கள் பொதுவாக உண்மைச் சம்பவத்தின் அடிப்​படையில் எழுதி​ய​வை​தான். ஆனால், இந்த நாவல் அதிலிருந்து வித்தி​யாசப்​பட்டது. இந்த நாவலின் கரு மட்டும்தான் நிஜத்தில் நடந்தது. என்னுடைய திருமண வீடியோவைப் போட்டுப் பார்க்​கும்​போது, அதிலிருந்த ஒரு பெண்ணை எல்லாரும் நிறுத்தி நிறுத்திப் பார்த்தார்கள். என் மனைவி, “அந்தப் பெண்ணையே ஏன் பார்க்​கிறாய்” எனக் கேட்டார். போட்டோகிராபரும் அந்தப் பெண்ணைத்தான் வளைச்சு வளைச்சு போட்டோ எடுத்​திருக்​கிறார். இது ஒரு சம்பவம். எங்கள் வீட்டுக்கு எதிரில் ஒரு அண்ணன்​-அண்ணி இருக்​கிறார்கள். இவர்கள் இருவரும் மாநிறம். ஆனால், அவர்கள் மகள் புதுநிறம். நான் கிண்டலாக அவரிடம் கேட்டேன். “விடிஞ்சு எழுந்​திருச்சு உம்மூஞ்சில முளிச்சா வேற எப்படி இருக்​கும்?” என அந்த அண்ணி கிண்டலாகப் பதில் சொன்னார். இந்த இரண்டையும் வைத்துத்தான் இந்த நாவலை எழுதினேன்.

அந்தப் பெண்ணின் அழகுதான் பிரச்​சினைக்குக் காரணமா?

ஆமாம். அந்தப் பெண்ணுக்கு அவரது அழகுதான் பிரச்​சினையாக இருக்​கிறது. அந்த அழகுதான் எல்லோரையும் வசீகரிக்​கிறது. அந்தப் பெண்ணின் அம்மா இந்த அழகைவைத்து அந்தப் பெண்ணை ஏதாவது நல்ல வேலையில் இருப்​பவருக்குக் கட்டிக் கொடுத்து​விடலாம் என நினைக்​கிறார். ஆனால், அந்தப் பெண் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் ஒரு சாதாரண ஆளைத்தான் விரும்​பு​கிறாள்.

இந்தப் பெண்ணை உங்களது ‘அஞ்சலை’​யுடன் தொடர்​படுத்திப் பார்க்​கலாமா?

அது ஒரு தனி உலகம். அஞ்சலை என்பது ஒரு தனியான வாழ்க்கை; மண்ணும் மக்களுமான ஒரு வாழ்க்கை. அந்த அளவுக்கு இதை யோசிச்சு எழுதவில்லை. இந்த நாவல் அஞ்சலை​யைவிட மேம்பட்ட சூழல்.

மேம்பட்டது என்றால் ‘பேரழகி’யின் வாழ்க்கைச் சூழலா?

ஆமாம். கொஞ்சம் மேம்பட்​டது​தான். சாப்பாடு கீப்பாடு பிரச்​சினைகள் இல்லாத ஒரு வாழ்க்கைச் சூழல். உழைப்​புக்கான பெரும் வெளி, பெரும் பாடுகள் எதுவும் இல்லாத கொஞ்சம் மேம்பட்ட சூழல்.

பெண்கள் பக்கம் அவர்களது பலவீனங்​களுடன் உங்கள் எழுத்து நிற்கிறது...

பொதுவாகக் கதைகளில், ‘வீறு கொண்டு எழு’ என்கிற மாதிரி பெண்கள் தீர்மானிக்​கப்​பட்​ட​வர்களாக இருப்​பார்கள். விடிஞ்சு எழும்​பினால் அந்தப் பெண்கள் முகத்​தில்தான் முழிக்​கிறேன். சக்கையா சாத்து​கிறார்கள், அடிக்​கிறார்கள் என்கிறார்கள்; லோல் படுகிறார்கள். இப்படித்தான் இருக்​கிறார்கள். வீறு கொண்டு எழுவது மாதிரி ஒன்றும் இல்லை. என் சின்ன வயசிலேயே என் அம்மா இறந்து​விட்​டார். தெருவில் இருக்கும் பெண் சனங்கள்தான் என்னிடம் பாசமாக இருந்தது. அதனால், பெண்கள் பேரில் எனக்குப் ப்ரியம் உண்டு. எங்களுக்குக் கொல்லையில் கொஞ்சம் நிலம் இருக்​கிறது. அங்கு களை வெட்டப் பெண் பிள்ளை​கள்தான் வருவார்கள். அப்போது அவர்கள் தங்கள் பாடுகளைச் சொல்வார்கள். பெண் பிள்ளைகள் அரைப் பாவாடை கட்டும்போது ஒரு கனவு இருக்​கும். முழுப் பாவாடை கட்டும்போது ஒரு கனவு இருக்​கும். தாவணிப் பருவத்தில் கனவு குதிரைகளாக இருக்​கும். ஆனால், யதார்த்தம் அவர்களை வேறு எங்கோ கொண்டுபோய் விட்டு​விடும். வீட்டில் சொன்னவனைக் கல்யாணம் செய்து​கொண்டு பிள்ளை​களைப் பெற்றுப் பெரும்பாடு படுவார்கள். பெண் பிள்ளை​களின் நிலை, சர சர என்று மாறிக்​கொண்டு இருக்​கும். பையன்​களுக்கு அப்படி இல்லை. எனக்குப் பெண்களின் மீது ஒரு அக்கறை உண்டு. அதனால் பெண் சனங்கள் இருந்தால் மத்தியில் போய் உட்கார்ந்​து​கொள்​வேன். எனக்குக் கூச்சமெல்லாம் கிடையாது. அவர்களுக்கு இடையில் கதை சொல்வதும் பாட்டு பாடுவதுமாக இருப்​பேன்.

ஆனால், உங்கள் கதைகளின் பெண்கள், ஆணைச் சார்ந்​திருக்​கிறார்​கள். இது முரணாக இருக்​கிறது...

இயல்பில் அப்படித்தான் இருக்​கிறது. நாம் கொஞ்சம் கூட்டி எழுதினாலும் அப்படித்தான் இருக்​கிறது. ‘அஞ்சலை’யில் கொஞ்சம் எல்லா​வற்​றையும் மீறிய​தாகச் சொல்லி​யிருப்​பேன். ஆனால், என்னதான் செய்தாலும் நீந்தி மேலவரப் பார்த்​தாலும் தொடர்ந்து அழுத்​திவைக்​கப்​பட்டுதான் இருக்​கிறார்கள். ஆண் அடிக்க வரும்போது திருப்பி அடிக்க​வில்லை; தடுக்​கிறாள் பெண். அதுவொரு எதிர்ப்பு​தான். ஆனால், அதற்காகக் கூடுதலாக அடி வாங்கு​கிறாள். ஆண்களால்தான் பெண் கட்டமைக்​கப்​பட்​டிருக்​கிறாள். நாம் வெளியில் சொல்லிக்​கொண்டு இருக்​கலாம். ஆனால், இயல்பு அப்படி இல்லை.

இந்த நாவலை அழகு பற்றிய விமர்​சன​மாகக் கொள்ளலாமா?

அழகு என்பது கூர்ந்து கவனிக்​கக்​கூடியதாக இருக்​கிறது. அழகு என்பது எல்லாரும் பார்க்​கக்​கூடியது​தான். அம்மா இதை முதலீடாகப் பார்க்​கிறார்; ஒருவன் அதைக் கொண்டு​போய்ச் சொந்தம் கொண்டாட நினைக்​கிறான். அழகு என்பது நேசிக்​கக்​கூடியதாக, பொறாமைப்​படக்​கூடிய​தாகப் பல்வேறு பரிமாணத்தில் இருக்​கிறது.

அதுதான் நாவலின் பொருள் எனக் கொள்ளலாமா?

இது ஒரு பெரிய தத்து​வ​மெல்லாம் இல்லை. எழுத்​தாளன் பெரிதாக இந்தச் சமூகத்​தையெல்லாம் புரட்​டிப்​போட்டுவிட முடியாது. எழுத்​தாளன் சும்மா சாதாரண ஆள். அவன் பத்தாவது படித்​திருப்​பான்; முந்திரிக்​கொட்டை பொறுக்​கிக்​கொண்​டிருப்​பான். ‘அவன் பேனா முனையால் சமூகத்தை மாற்றி​விடு​வான்’ அப்படி​யெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. அப்படி​யெல்லாம் நினைத்து இந்த நாவலை எழுதவில்லை.

பொதுவாக எழுத என்ன திட்டம் வைத்துக்​கொள்​கிறீர்கள்?

இந்த நாவலைத் தவிர்த்து என் எல்லா நாவல்​களும் சிறுகதைகளும் 90 சதவீதம் அப்படியேதான் எழுதி​யிருப்​பேன். அது கற்பனை​யாகத் தெரிய வேண்டும் என்பதற்காக உண்மைச் சம்பவத்தைக் குறைத்​திருப்​பேன். கற்பனையாக எழுதலாம் என்று எழுதிப் பார்த்த நாவல் இது. இதுவும் தீர்மானமாக எழுதவில்லை. போற போக்கில் எழுதியது​தான்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in