Last Updated : 16 Jun, 2018 09:40 AM

 

Published : 16 Jun 2018 09:40 AM
Last Updated : 16 Jun 2018 09:40 AM

பெண்களுக்கு சமையலறை ஒதுக்கீடு போலதான் இலக்கியத்திலும் இருக்கிறது! - பெருந்தேவி பேட்டி

ரபிலக்கியம், நாட்டாரியல், நவீன இலக்கியம் சார்ந்த புலமை கொண்ட வெகுசில கவிஞர்களில் ஒருவர் பெருந்தேவி. சமகால அரசியல் பார்வையோடு இலக்கியத்தை அணுகும் இவரது விமர்சனங்கள் நுட்பமானவை. அமெரிக்காவில் சியெனா கல்லூரியில் மானுடவியல் இணை பேராசிரியராகப் பணிபுரிகிறார். ‘அழுக்கு சாக்ஸ்’, ‘பெண் மனசு ஆழம் என 99.99 சதவிகித ஆண்கள் கருதுகிறார்கள்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.

ஏன் எழுதுகிறீர்கள்?

இரண்டு காரணங்கள். ஒன்று, எழுதும்போது கிடைக்கும் இன்பம். பல சமயம் நினைவுச் சேகரத்திலிருந்து எடுக்கும் ஒரு நிகழ்வின், ஓர் அனுபவத்தின் மாறுபட்ட சாத்தியங்களைக் கவிதையின் வழி எழுதிப்பார்க்க முடிகிறது. திரும்பிவரவே முடியாத ஒருவழிப் பாதையாகத் தனிப்பட்ட வாழ்க்கை இருக்கும்போது, இத்தகைய மாறுபட்ட சாத்தியங்கள் தருகிற மகிழ்ச்சி கொஞ்சநஞ்சமல்ல. இரண்டாவது, இப்படி வெவ்வேறு சாத்தியங்களை எழுதிப்பார்க்கும்போது, ‘நான்’ என திடப்பட்டுவிட்ட சுயம் சற்றே நெகிழ்தலும், கலைந்துபோதலும் நடக்கிறது. ‘நான்’ பிறராக மாறுகிற, மற்றமையோடு அடையாளம் காணும் முயற்சிகள். இவையெல்லாம் எழுத்தின், கலையின் மூலமன்றி வேறெப்படி நடக்க முடியும்? ஒருவகையில் இது விடுதலை உணர்வுபோல ஒன்றைத் தருகிறது.

எந்த நேரத்தில் எழுதுகிறீர்கள்?

நனவுநிலைக்கும் கனவுநிலைக்கும் இடையிலான ஒரு வெளியில், பல சமயம் அதிகாலையில்தான் கவிதை வரிகள் உருவாகின்றன. திபெத்திய பௌத்தத்தில் குறிப்பிடப்படுகிற ‘பார்டோ’ போன்ற இடைவெளித் தருணம். ஏதோ தூசியால் மூடப்பட்டவை ஒரு பெருங்காற்றடிக்கத் தெரிவதுபோல சில வரிகள் விட்டு விட்டுக் கண் முன்னால் வரும். சில சமயம் மங்கலாக, சில சமயம் தெளிவாக. பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக விடப்பட்டவை நிரப்பப்படும். சில சொற்களில், ஓரிரு வரிகளில் நான் மாற்றம் செய்வதும் உண்டு.

ஆனால், வரிகளின் முதல் தோற்றம் இந்த மயக்குறு பொழுதில்தான். ஓர் உத்வேகம் அல்லது மன எழுச்சி சூல் கொள்ளும் பொழுது இது எனலாம். தமிழ்ச் சூழலில் கவிதையின் பாடுபொருள், பாணி, மொழி உத்தி போன்றவற்றைப் பேசுகிற அளவுக்கு இந்த உத்வேக நிலை குறித்தெல்லாம் பேசியிருக்கிறோமா என்று தெரியவில்லை.

உங்களது எந்தப் படைப்பு உங்கள் எழுத்து வாழ்க்கையைப் பூர்த்தியாக்கியது எனச் சொல்வீர்கள்?

எதுவுமில்லை. அப்படி இருந்திருந்தால் என் எழுத்து அத்தோடு நின்றிருக்கும். “வாழ்க்கையில் ‘முற்றிற்று’, ‘திருச்சிற்றம்பலம்’ என்று கோடு கிழித்துவிட்டு ஹாயாக நாற்காலியில் சாய்ந்துகொள்ளும்படி ஏதாவது இருக்கிறதா?” என்கிறார் புதுமைப்பித்தன். எழுத்து வாழ்க்கைக்கும் இது பொருந்தும்.

எழுத்தில் நீங்கள் சோர்வாக உணர்வது எப்போது?

பல சமயம். குறிப்பாக, வாசக எதிர்வினைகள் இல்லாதபோது. தமிழிலக்கியச் சூழலின் கொடுமையான விமர்சனத் தேக்க நிலையால் தீவிர வாசிப்புகள் நிகழ்வதில்லை. என் நூல்களுக்கு என்றில்லை. பொதுவாகவே இல்லை. எனவே, இது தனிப்பட்ட துயரமில்லை.

‘பெண் கவிஞ’ராக அறியப்படுவதால் தமிழ் இலக்கிய வட்டாரங்களில் எதிர்கொள்ள நேர்கிற ஒரு வினோத வகைப் புறக்கணிப்பு. பொதுச் சமூகப் பிரச்சினைகள், அரசியல், தத்துவம் போன்றவற்றோடு ஈடுபாடுகொள்ளும் எழுத்து பற்றிய பேச்சுத்தளங்களில் ஆண் எழுத்தாளர்கள் முதன்மை பெறுவதும், பெண் குரல், பெண் எழுத்து என்று ஒரு கற்பித வகைமையில் பெண்களின் எழுத்தைப் பூட்டிவைக்கப் பார்ப்பதும் நடக்கிறது. தத்துவம், அரசியல், காட்சி ஊடகம், அறிவியல் தொழில்நுட்பம், நகர அன்றாடம் போன்றவற்றை என் கவிதைகள் சுட்டிச் சென்றிருக்கின்றன. ஆனால், அவை கவனம் பெறுவதோ விமர்சிக்கப்படுவதோ அபூர்வம். வீடுகளில் பெண்களுக்கு ஒதுக்கப்படும் சமையலறை ஒதுக்கீடுபோலத்தான் இது. வெவ்வேறு பொருட்களை உங்கள் எழுத்து தொட்டாலும் உங்களுக்குத் தரப்பட்ட அந்தக் கட்டத்துக்குள் நீங்கள் இருந்தால்தான் இங்கே அங்கீகரிக்கப்படுவீர்கள். இவையெல்லாம் சமயத்தில் கொஞ்சம் சோர்வளிக்கின்றன.

எழுதுவது பற்றி உங்களுக்குக் கிடைத்த சிறந்த அறிவுரை எது?

கலை பற்றி ஒருமுறை உரையாடிக்கொண்டிருந்தபோது நாடகக் கலைஞரான ஜெயலதா, “கலைஞர்கள், படைப்பாளிகளுக்கு செல்வமின்மை, அன்பின்மை இதெல்லாம்கூடப் பெரிய பிரச்சினையில்லை. விசனப்படாமல் இருக்க வேண்டும். விசனம் வந்தாலும் அதை உடனடியாக மீறக் கற்றுக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அது கலைவெளிப்பாட்டைப் பாதிக்கும்” என்றார். இதை மந்திர வாக்கியமாகவே கருதுகிறேன். அசோகமித்திரன் ஒருமுறை என்னிடம், “எதுவும் நடக்கட்டும். ஆனால், தயவுசெய்து அதிகப்படியான மகிழ்ச்சின்மையோடு இருக்காதே” எனச் சொல்லியிருக்கிறார். விசனத்தில், மகிழ்ச்சியின்மையில் தொடர்ந்து இருந்தால், தத்துவ அறிஞர் நீட்ஷே விவரிக்கும் ‘ரீசெண்டிமெண்ட்’ என்கிற காழ்ப்புணர்ச்சிக்கான வீடாக நம் மனம் மாறிவிடும். பின்னர், கலைக்கு அங்கேது இடம்? இயன்றவரை விசனத்துக்கு ஒப்புக்கொடுக்காமல் இருக்க, ஒருவேளை அது நடந்தால் மீட்டெடுத்துக்கொள்ள முயல்கிறேன். மீட்டெடுப்பும் எனக்கு எழுத்தின் வழியாக, வாசிப்பின் வாயிலாகத்தான் நடக்கிறது.

இலக்கியம் தவிர்த்து - இசை, பயணம், சினிமா, ஒவியம்... - வேறு எது இல்லாமல் உங்களால் வாழ முடியாது?

மொழியின் கொதிநிலையில் உருவாவது கவிதை. கற்பனையூக்கம் மேலெழும்போது மொழி கொதிநிலை அடைந்து சில சமயம் இசையாக உருவாக்கம் கொள்கிறது; சில சமயம் சிற்ப வடிவம் காட்டுகிறது. கற்பனையூக்கத்தை வளர்த்தெடுக்கக் கலையாக்கங்கள் உதவுகின்றன. குறிப்பாக எனக்கு சிற்பமும், ஓவியமும். இவை அளிக்கும் கற்பனை ஊக்கம் அதிகம். பயணமும் புத்துணர்ச்சியும் அளிக்கிறது. குறிப்பாக நதிக்கரைகளில் இருக்கும் நகரங்கள், அவற்றின் சிதிலமடைந்த கட்டிடங்கள், கற்பாதைகள், வழிபாட்டுத் தலங்கள் போன்றவை.

இதை இன்னும் வாசிக்காமல் இருக்கிறோமே என நீங்கள் நினைக்கும் புத்தகம் எது?

வாசிக்காமல் இருக்கிறோமே என்பதைவிட எனக்கு ஸ்பானிய மொழி தெரியாததால் வாசிக்கவே முடியாதே என்று ஏங்க வைக்கும் புத்தகம்; நிகனோர் பர்ராவின் ஷேக்ஸ்பியரின் கிங் லியர் நாடகத்தின் மீள் உருவாக்கம். மரபார்ந்த வடிவமின்றி, பேச்சுமொழியில் பர்ரா அதை ஆக்கியிருக்கிறார். அடுத்து, சார்லஸ் ப்யூகோவ்ஸ்கியின் கவிதை, நாவல், கட்டுரைத் தொகுப்பு உள்ளிட்ட நூல்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட தொண்ணூறு. இதில் சில கவிதை நூல்கள், நாவல்கள் தவிர பலவற்றை நான் வாசித்ததில்லை. மணிமேகலை அவ்வப்போது புரட்டிப்பார்த்திருக்கிறேன். இனிதான் முழுக்க வாசிக்க வேண்டும். தமிழ் பௌத்தத்தைப் பற்றி அறிந்துகொள்ள விருப்பம் இருப்பதாலும் இன்னும் படிக்கவில்லையே என்றிருக்கிறது. இது முற்றுப்பெறாத, தற்காலிகமாகப் பெருமூச்சில் மட்டுமே முடியக்கூடிய பட்டியல்.

இலக்கியம் ஒருவரைப் பண்படுத்துமா?

வாசிப்பவற்றை எந்த அளவுக்கு மனதில் கொள்கிறோம், அவற்றை எந்தெந்த வாழ்க்கைத் தருணங்களில் நினைவுகூர்கிறோம், பொருத்திப்பார்க்கிறோம்; இவை முக்கியம். யதார்த்த வாழ்வில் நான் சந்தித்த சில விந்தையான சிக்கல்களை அணுக புதுமைப்பித்தன், அசோகமித்திரன் போன்றோரின் சிறுகதைகள் உதவியிருக்கின்றன. மன அமைதி அல்லது சாந்தம் என்பது பண்படுதலின் ஓர் இன்றியமையாத பரிமாணம் என்றால், இலக்கியத்தால் பண்படுத்தப்படுகிற பேறு சில சமயங்களில் எனக்குக் கிடைத்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

- த.ராஜன்,

தொடர்புக்கு: rajan.t@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x