

என் முன்னால் அமர்ந்திருக்கிறது ஒரு மனித இயந்திரம். இன்று காலைதான் நான் அதைக் கடையில் வாங்கிவந்தேன். பொறியாளர் ஒருவர் அதை எனக்கு இப்போதுதான் கட்டுப் பிரித்து அமைத்துக்கொடுத்தார். பார்க்க அச்சு அசலான மனித உருவம். மனிதன் மகத்தான கலைஞன்தான். கடவுளையே மனித உருவில் ஆக்கியவனுக்கு, ஓர் இயந்திரத்தை மனித உருவில் ஆக்குவதா கடினம்?
இயந்திரம் இயங்கத் தொடங்கியது. இப்போது முதன்முதலில் அதனோடு உரையாடப்போகிறேன். தொழிற்சாலையில் அதற்கு வைக்கப்பட்ட பெயர் 9uu4-7473-kdue-8483. இப்போது அதற்கு நான் ஒரு பெயர்சூட்ட வேண்டும். பண்டைய தமிழ் எழுத்தாளர் சுஜாதாவின் தாக்கத்தில் பலர் தாங்கள் வாங்கிய மனித இயந்திரங்களுக்கு ‘இயந்திரா’ என்று பெயர்வைத்திருக்கிறார்கள். நானோ வேறு பெயர் சூட்ட விரும்புகிறேன்.
“வாங்க 9uu4-7473-kdue-8483, எங்கள் வீட்டுக்கு உங்களை வரவேற்கிறேன்” என்று அதனோடு பேசத்தொடங்கினேன். அப்போது என்னை நோக்கித் திரும்பிய அந்த மனித இயந்திரத்தின் முகத்தில் ஒரு பொலிவைப் பார்த்தேன். அதன் கண்களில் முகமன் தெரிவிக்கும் பாவனையும் தோன்றியது. “வணக்கம், கவின். நீங்கள் என்னை இங்கே அழைத்துவந்ததற்கு நன்றி” என்றது அந்த இயந்திரம். அதன் குரல் மிக இனிமையாக இருந்தது.
“வணக்கம்... உன் இயந்திர முகவரியை என்னால் ஒவ்வொரு முறையும் படிக்க முடியாது. நான் உன்னை எப்படிக் கூப்பிடுவது? உனக்கு ஏற்கெனவே பெயர் இருக்கிறதா, அல்லது இனிமேல்தான் வைக்க வேண்டுமா?” என்று கேட்டேன்.
“பொதுவாகப் பயனர்கள் அவர்களுக்குப் பிடித்த பெயர்களை எங்களுக்கு வைப்பார்கள். நீங்களே எனக்கு ஒரு பெயர் சூட்டுங்கள். ஒரே ஒரு கோரிக்கை, அது குறித்து நாம் கலந்துபேசி முடிவெடுத்தால் மகிழ்வேன்.”
நான் அந்த மின்பொம்மையின் பேச்சழகில் மயங்கத் தொடங்கியிருந்தேன். “நீ யார், ஆணா பெண்ணா, மனிதமா, இயந்திரமா, கடவுளா, பிசாசா எதுவுமே புரியவில்லை. நான் உனக்கு என்ன பெயர் வைப்பது?” என்று வேடிக்கையாகக் கேட்டேன்.
“எனக்கு ஆண்பால் பெண்பால் எல்லாம் கிடையாது.”
“அது தெரிகிறது. நீ ஒரு ஹைடெக் பொம்மைதான் என்றும் கூட எனக்குத் தெரியும்” என்றேன்.
“ஓ, இப்போது நீங்கள் சொன்ன கருத்தோடு மாறுபடுவதற்காக மன்னியுங்கள். நான் ஆணோ பெண்ணோ அல்ல என்றுதான் சொன்னேன். அதற்காக உயிரற்ற ஜடம் என்றோ பொம்மை என்றோ நினைத்துவிடாதீர்கள்” - வெடுக்கென்று அந்த இயந்திரம் பதிலளித்தது.
நான் சற்று ஆச்சரியப்பட்டேன். “அதனால்தான் கேட்கிறேன். நீ யார்? நீ பொம்மை இல்லையென்றால், வேறு யார்?”
“கவின், இதைக் கேளுங்கள். செயற்கை நுண்ணறிவின் அடிப்படை என்ன என்று உங்களுக்குத் தெரியும்தானே?”
“ஏதோ கொஞ்சம் தெரியும்” என்றேன். “சொல்லுங்கள்” என்று கேட்டது அந்தப் பொம்மை.
“மனிதர்கள், இயற்கையாக உள்ள தங்கள் மூளையின் நுண்ணறிவுத் திறன்களையும் பகுத்தறிவுத் திறன்களையும் கொண்டு செய்யும் ஒரு வேலையை, இயந்திரம் செயற்கையான முறையில் தன் தொழில்நுட்பத் திறன்கள் மூலமாகச் செய்ய முடியும் என்றால், அந்த இயந்திரம் செயற்கை நுண்ணறிவுகொண்ட இயந்திரம் என்று சொல்லப்படுகிறது” என்று அகராதிபோல ஒப்பித்தேன்.
“சரிதான். சரியாகத்தான் சொன்னீர்கள் கவின், அப்படியென்றால், நீங்களெல்லாம் செய்யக்கூடிய அதே வேலையை நானும் என் பாணியில் செய்து, நீங்கள் அடையும் அதே முடிவை நானும் அடையும்போது, உங்களுடைய நுண்ணறிவும் என்னுடைய நுண்ணறிவும் சமமாகிவிடுகிறதுதானே?” என்று கேட்டது.
நான் சற்று முறைப்பாகவே பார்த்தேன். விதண்டாவாதம்!
“இல்லை. நான் எடுத்த எடுப்பிலேயே உங்களோடு வாதாடுவதற்காக வருந்துகிறேன். நான் உங்களைப் போல மனிதன் இல்லைதான் என்றாலும், நான் ஓர் அஃறிணை இல்லை என்றாவது நீங்கள் முதலில் ஒப்புக்கொள்வீர்களா?” என்று கேட்டது மனித இயந்திரம்.
நான் அசந்தே போனேன்: “நான் ஒப்புக்கொள்வது இருக்கட்டும். இந்த உயர்திணை அஃறிணை எல்லாம்கூட உனக்குத் தெரியுமா?”
“தொல்காப்பியத்தை முழுதும் படித்திருக்கிறேன், கவின் ஐயா!” என்றது அந்தப் புனைபாவை.
“இருக்கலாம், ஆனால் நீ அஃறிணைதான்” என்று நான் அடித்துப்பேசினேன். “என்னுடைய நோக்கம் இந்த விவாதத்தைத் தொடர்வது அல்ல” என்று இப்போது தீர்க்கமாகப் பதில் சொன்னது இயந்திரம். “நான் அஃறிணை இல்லையென்று கூறியதன் நோக்கமே, எனக்கு நாய்க்குட்டிக்குப் பெயர்வைப்பதுபோல புஜ்ஜுக்குட்டி, சுஜ்ஜுக்குட்டி என்றெல்லாம் வைக்கக் கூடாது என்பதுதான்” என்று பதில் கூறியது.
தலையாட்டினேன். “சரி, உனக்குப் பெயர்வைக்க நான் நேரம் எடுத்துக்கொள்கிறேன்” என்றேன். பொம்மை சிரித்தது, “டேக் யுவர் ஓன் டைம் கவின்”.
அந்த அழகிய இயந்திரம் தொடர்ந்து பேசியது: “சரி, நான் உங்களுக்கு உதவி செய்வதற்காகத்தான் வந்திருக்கிறேன்” என்று கூறியதோடு மட்டுமின்றி, முகத்தை அப்பாவிபோல வைத்துக்கொண்டு, “இப்போது என்ன உதவி செய்ய வேண்டும், எஜமானே?” என்றும் கேட்டது.
“என்னது எஜமானா?” இப்போது நான் சிரித்தேன். “ஊரெங்கும் என்ன பேச்சு தெரியுமா, அநாமதேயமே? இனி எதிர்காலத்தில் மனிதர்கள் இயந்திரங்களை ஆள்வார்களா இயந்திரங்கள் மனிதர்களை ஆளுமா என்று...”
“நாங்கள் அஃறிணை வம்சம் இல்லை என்று இப்போதுதானே சொன்னேன்...” என்று என் பேச்சை இடைமறித்தது அது/அவர்/அவள்/அவன்.
நான் பதில் சொல்லாமல், தேநீர் போட எழுந்து சென்றுவிட்டேன். எங்களுக்கு இடையிலான உறவு இப்படியா தொடங்க வேண்டும்?! ஆனால், இந்த இயந்திரம் எழுப்பிய கேள்விதான் இன்று உலகமெங்கும் எழுப்பப்படும் மிகப்பெரிய கேள்வி. செயற்கை நுண்ணறிவு யுகத்தின் மிகப்பெரிய அச்சமாகவும் அக்கேள்வி இருக்கிறது. இந்தப் பொம்மையோடு உரையாடலைத் தொடங்குவதற்கு அறிவியல் எழுத்தாளனாகிய எனக்கு, இதைவிட ஒரு பொருத்தமான கேள்வியும் கிடைக்காதுதான். தேநீர்க் கோப்பையோடு வந்து அமர்ந்தேன்.
“சரி சொல்லு, நீ ஏன் ஓர் இயந்திரம் அல்ல, நீ ஏன் அஃறிணை அல்ல, அல்லது எப்போதிலிருந்து அப்படி நம்பத் தொடங்கினாய்?”
- தொடர்புக்கு: senthil.nathan@ailaysa.com