கடவுளை எதிர்பார்த்து, காலம்

கடவுளை எதிர்பார்த்து, காலம்
Updated on
2 min read

மூடநம்​பிக்கைகளுக்கு எதிராக எழுதப்​பட்ட, அயர்லாந்து எழுத்​தாளர் சாமுவேல் பெக்கெட்டின் ‘Waiting for Godot’ நாடகம் தமிழில் எஸ்.எம்​.ஏ.ராம் எழுத்​தில், பி.வசந்த் இயக்கத்தில் ‘எப்போ வருவாரோ’ என்ற பெயரில் கூத்துப்​பட்​டறை​யிலும், நுங்கம்​பாக்கம் அலியான்ஸ் பிரான்​செஸிலும் நிகழ்த்தப்பட்டது. சமீபத்தில் நடைபெற்ற மிக்ஸ்துரா கலை நிகழ்ச்​சியில் பலரின் கவனத்​தையும் பெற்றது.

கால்களில் கட்டையைக் கட்டிக்​கொண்டு “அய்யா வரப்போறார்! அய்யா வரப்போறார்!” என்ற குடுகுடுப்​பைக்​காரர்​களின் அறிவிப்புடன், யார்தான் வரப்போகிறார்களோ என்ற ஆர்வத்​துடன் பார்க்கும் மக்கள், நேரம் போகப்போக ‘கடவுள் பூலோகம் வந்து நமது அடிப்​படைத் தேவைகளைப் பூர்த்தி​செய்​வார்’ என்ற மூடநம்​பிக்கை​யில், தங்கள் பணிகளை​யெல்லாம் விட்டு​விட்டுக் கடவுளுக்​காகக் காத்திருக்கத் தொடங்​கு​கிறார்கள். இதன் யதார்த்​தத்தை விளக்கு​கிறது ‘எப்போ வருவாரோ’ எனும் நாடகம்.

விசுவையா, அய்யாசாமி என்ற இரண்டு கதாபாத்​திரங்​களுடன் தொடங்​கு​கிறது இந்த நாடகம். சோம்பேறித்தனம் எனும் கொடிய நோய் ஒருவனுக்குப் பரவுகிறது என்றால், அது கரோனாவைவிட வேகமாக அவர்களைச் சுற்றி​யிருக்கும் ஒவ்வொரு​வருடைய சுயசார்புச் சிந்தனையை சிறிதுசிறிதாக எப்படி​யெல்லாம் அரித்து​விடும் என்பதை அய்யாசாமியை விசுவையா மூளைச்சலவை செய்வதன் மூலமும், போகப்போக தீபிகா, காயத்ரி, விஜயசாந்தி, விக்னேஷ், ரவி ராகுல், அபிநயா, நந்தகுமார் எனக் கூடுகின்ற ஒவ்வொரு​வரின் கதாபாத்​திரங்​களும் காத்திருக்கத் தொடங்​குவதன் வழியே வெளிப்​படு​கிறது.

அதைவிட விறுவிறுப்பாக, இதுவரை நடந்ததைத் திரைப்​படங்​களில் காண்பிக்கப் பயன்படுத்​தப்​படும் ‘ஃபிளாஷ்பேக்’ உத்தியைத் திரைப்​படத்தைப் போல நாடகத்​திலும் மிக அழகியலுடன், கடகடவென நடந்ததை ஒரு குட்டி இசையுடன் கோத்துக் காட்சிப்​படுத்​தி​யிருக்​கிறார்கள். சரியாக இசை முடியும்​போது, அந்த நேரத்தில் வர வேண்டியவர் சட்டென்று குதித்து நிற்பதுவரை மிக அழகாகத் திட்ட​மிடப்​பட்​டிருந்தது, பி.வசந்த்தின் சிறந்த இயக்கத்​திற்குச் சான்று.

‘சாமி கண்ணைக் குத்தும்’ என்று சொல்லி வளர்க்கப்பட்ட நம் சமூகத்தில், திடீரெனக் கடவுள் மீதிருக்கும் மூடப் பழக்கவழக்கங்களை விமர்சிப்பதில் பெரும் சிக்கல் இருக்கத்தான் செய்கிறது. தவறு செய்பவர்களைக் கடவுள் தண்டிப்பதாகச் சொல்பவர்களிடம், கடவுளின் பெயரால் பெருங்குற்றங்களைச் செய்யும் ஒரு பெருங்கூட்டத்தை மட்டும் கடவுள் ஏன் தண்டிப்பதே இல்லை? அவர்களுக்கு மட்டும் கடவுள் எப்படிப் பாரபட்சம் காட்டுகிறார்?’ என்கிற கேள்வியையும் எழுப்புகிறது.

இதில் இந்து, முஸ்லிம், கிறிஸ்துவம் என எந்தவிதப் பாகுபாடுமின்றி, மூன்று மதங்களிலும் இது போன்ற ஆதாயம் தேடும் பெருங்​கூட்டம் மக்களை எப்படி ஆட்டிப்​படைக்​கிறது என்பதைக் காட்சிப்​படுத்​தி​யிருக்​கிறார்கள். அதேவேளை, கடவுளை விட்டொழியச் சொல்லும் ‘சார்​வாகன்’ கதாபாத்​திரத்தின் மூலம் இது போன்ற ஒடுக்​கு​முறையின் வேர்களைப் பிடுங்கி எறிவதற்கான சாத்தி​யக்​கூறுகளை, எந்த விவரமும் அறியாத மக்களிடம் அறிமுகப்​படுத்து​கிறார். “உங்களிடம் ஜாதி, மத சண்டைகளைத் தூண்டி​விட்ட யாரும் தற்போது உங்களுக்கு அடிப்​படைத் தேவை என்ன என்பதைக்​கூடப் புரிந்​து​கொள்ள​வில்லை. உங்களுக்கு உண்ண உணவிருக்​கிறதா? சரியான உடைகள்? ஒதுங்க இடம்கூட அளிக்க​வில்​லையா?” என அவர்களைச் சிந்திக்க வைக்கிறார். மக்களின் மனதில் படிந்​திருக்கும் ஒரு தொழுநோயைக் குணப்​படுத்த இந்த நாடகத்தில் இருக்கும் சார்வாகன் போன்ற, ஒரு சமூக மருத்​துவர் ஒவ்வொரு காலக்​கட்​டத்​திலும் தேவைப்​படத்தான் செய்கிறார்​.

- திரைப்படத் தொகுப்பாளர்

தொடர்புக்கு: goodbadeditor@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in