

கலை, தத்துவம் ஆகியவற்றின் சிந்தனை வளங்களில் செழுமை பெற்ற படைப்பு மனம் கொண்டவர் ஓவியர் மு.நடேஷ் (14.01.1960 - 20.09.2024). உத்வேகத்தின் உருவகம்; இவர் ஓர் ஓவியக் கலைஞர் மட்டுமல்ல; நவீன நாடகக் கலையிலும் - இயக்கம், அரங்கமைப்பு, ஒளி ஆகிய தளங்களில் - தன் அடையாளத்தைப் பதித்தவர். எல்லாவற்றுக்கும் மேலாக, தமிழகக் கலைவெளியில் நிர்மாணக் கலையில் (installation art) படைப்பாக்கம் மேற்கொண்ட முன்னோடி. வெளியீடு பற்றிய அக்கறையின்றி, கதை, நாவல், கவிதை, நாடகம், கட்டுரை என ஆங்கிலத்தில் நிறைய எழுதிவைத்திருக்கிறார்.
1960 ஜனவரி 14ஆம் தேதி சென்னையில் பிறந்தவர். தமிழ்ச் சிறுகதை, நவீன நாடகவெளியில் தனித்துவமிக்க ஆளுமையான ந.முத்துசாமியின் மூத்த மகன் இவர். இவருடைய ஆளுமை உருவாக்கத்தில், தந்தைக்கும் தந்தையின் சகாக்களான கலை இலக்கிய ஆளுமைகளுக்கும் பங்குண்டு.
ஓவியக் கல்லூரியில் படித்த காலத்திலும் அதனைத் தொடர்ந்தும் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் (1980-90) ‘கூத்துப் பட்டறை’ முயற்சிகளோடு தன்னைப் பிணைத்துக்கொண்டவர். அரங்க அமைப்பிலும் ஒளி அமைப்பிலும் மேதைமை பெற்றவர். 1990இல் பண்டிட் ரவிஷங்கரின் இசை நாடகமொன்று இந்தியாவெங்கும் நிகழ்த்தப்பட்டபோது, அதற்கு அரங்க நிர்மாணமும் ஒளியமைப்பும் செய்திருக்கிறார். முத்துசாமியின் மறைவுக்குப் பின்பு, கூத்துப் பட்டறையின் நிர்வாக அறங்காவலராகத் தன் பணிகளைத் தொடர்ந்தார்.
நாடகத்துக்கான அரங்க அமைப்பு உருவாக்கத்திலிருந்தே, இங்கிருந்த கலை அரசியல் நிலைமை காரணமாக, நிர்மாணக் கலையாக்கத்துக்கு இவர் வருகிறார். 1998இலிருந்து இவர் நிர்மாணக் கலையாக்கத்தில் ஈடுபட்டார். நிர்மாணக் கலை என்பது, டாடாயிஸம்போல, கலைக்கு எதிரான ஒரு கலை. நிர்மாணக் கலையும் கலை அரசியல் குறித்த பிரக்ஞையிலிருந்து உருவானதுதான். ‘படைப்பாக்கம் என்பதுகூட முன்கூட்டித் தீர்மானிக்கப்பட்ட ஒரு செயலாகிவிட்டது; விற்பனையை முன்னிறுத்தி, போலச்செய்து கலை வணிகமயமாகிக் கொண்டிருக்கிறது; இதன்மூலம் நாம் மலடுகளாகிக் கொண்டிருக்கிறோம்; நாம் படைப்பூக்கமற்றுப் போனது துரதிர்ஷ்டவசமானது’ என்பது போன்ற புரிதல்களிலிருந்து உருவானதுதான் நிர்மாணக் கலை. அது ஓரிடத்தில் சில நாள்கள் வைக்கப்பட்டுப் பின் அகற்றப்பட்டு விடுவது. அது வணிகத்துக்கானது அல்ல; நிரந்தர மதிப்புக்கானதும் அல்ல.
நடேஷ், நவீன உலகப் பிரச்சினை ஒன்றைக் குறித்த விமர்சனக் கருத்தாக்கத்தை வெளிப்படுத்த, அக்கருத்தின் சாரத்தைப் பிரம்மாண்டப் படிமமாக்குகிறார். அக்காட்சிப் படிமமே அவருடைய நிர்மாணக் கலை. அதன் கருத்தாக்கம் குறித்த துண்டறிக்கை ஒன்றையும் வாசிப்புக்கு முன்வைக்கிறார். நிர்மாணக் கலையில் வெளிப்படுத்த முடிகிற பிரம்மாண்டம் அவருடைய சுபாவத்துக்கு உவப்பானதாக இருக்கிறது. நிர்மாணக் கலை, அதன் பணிவற்ற எதேச்சை குணம் காரணமாக ஒரு புதிய கடவுளைத் தோற்றுவிக்க முடியும் என்று நம்புகிறார் நடேஷ்.
நடேஷின் கோட்டோவியங்களோடு எனக்கு 35 ஆண்டுகளாகப் பரிச்சயம். கண் பார்வை வெகுவாகக் குன்றிய கடைசிக் காலத்திலும் அலாதியான ஈடுபாட்டுடன் நடேஷ் தன் கலைப் பயணத்தைத் தொடர்ந்தது கோட்டோவியங்களில்தான். லயமும் இசைமையும் கூடிய இவருடைய கோட்டின் சரளமான பயணம் வளைந்தும் நெளிந்தும் சுழித்தும் தன் இலக்கைக் கச்சிதமாகவும் துல்லியமாகவும் சென்றடைந்து பரிபூரண அழகை எட்டுகிறது. ஆயிரக்கணக்கான கோட்டுச் சித்திரங்களை இவர் தொடர்ந்து உருவாக்கி வந்திருக்கிறார். இக்கோட்டுச் சித்திரங்கள் மூன்று விதமான தன்மைகளில் உருப்பெறுகின்றன.
முதலாவது, அழகிய கோலங்கள். இவை, கோட்டின் சரளமான பயணத்தில் வடிவ லயத்துடன் ஓர் உருவத்தை வெகு லகுவாக வசப்படுத்துபவை. தூய அழகின் பூரணத்துவத்தை அடைவதில் அலாதியான நிறைவை எட்டுபவை. இத்தன்மையான கோட்டுச் சித்திரங்கள் சிந்தனையின் பாரமற்றவை. எளிமையும் வெகுளித்தனமும் குழந்தைமையும் பேணுபவை. இவருடைய குதிரை சித்திர வரிசை இத்தகையது.
குதிரைகள், குருவிகள், பறவைகள், பூனைகள், மாடுகள், கோழிகள், முட்டையிடும் சேவல்கள், குஞ்சுகள், முட்டைகள், புலி, சிங்கம், காண்டாமிருகம், நெருப்பு, மழை என விலங்குகளும் பறவைகளும் இயற்கையும் இவரிடம் இத்தகைய மகத்துவத்தைக் கொண்டிருக்கின்றன. மனித ஆண் பெண் உடல்களும் ஆடைகளின் ஒப்பனைகளின்றி உடல் மொழியில் சகஜமாய் இயங்குகின்றன. இவ்வரிசைச் சித்திரங்களில் உருக்கொள்ளும் ஓர் உருவம் மெல்லமெல்ல உருமாற்றம் பெற்று, வெவ்வேறு ரூபம் கொள்ளும் நுட்பங்களை அவதானிப்பது ஒரு விந்தையான கலை அனுபவம்.
கோல வடிவங்கள் அதன் தொடர்ச்சியான உருமாற்றப் பயணத்தில், சிந்தனையின் வெளிப்பாடுகளாக விகாசம் பெறுகின்றன. இவையே இவருடைய இரண்டாம் வகையான சித்திரங்கள். சிந்தனையின் சிறகுகளோடு இயங்கும் கோட்டுச் சித்திரங்கள். இவை புனிதங்களுக்கு எதிரான கலகத்தன்மை கொண்டவை. இச்சித்திர வரிசைகள் குறுங்கதைத் தன்மை கொண்ட நாடகார்த்தப் புனைவுகள். இவை, நடேஷின் பிரத்தியேகக் குறுங்கதையாடல்கள். இவ்வகையான கோட்டுச் சித்திரங்கள்தான் ‘புதிய கடவுளைத் தேடும் கலைஞன்’ என இவர் பற்றிய பிம்பத்தை என்னுள் ஏற்படுத்தியிருப்பவை. புனிதங்களுக்கு எதிரான கலகக் கோடுகள் மூலம் புதிய கடவுளைத் தேடுபவராக நடேஷ் இருக்கிறார். ஒரு கொந்தளிப்பான படைப்பு மனநிலையில் இயங்கும் கலகச் சித்திரங்கள் இவை.
ஒரு பிரத்யேகக் குறுங்கதை அம்சத்தின் நாடகார்த்தத் தன்மையோடு, ஒரு கோட்டோவிய வரிசையை மேற்கொள்ளும்போது அவற்றை வெவ்வேறு கோலங்களில் அடுக்கடுக்காய் வரைகிறார். அவற்றின் விசைக்கேற்ப அவற்றினூடாகப் பயணம் கொள்கிறார். வெகு லகுவாகவும் லயத்தோடும் சுதந்திரமாகவும் சரளமாகவும் இவருடைய கோடுகள் பயணிக்கின்றன. அதே வேளை, வீரியமும் அதிர்வும் கொண்டு ஒரு மந்திரச் சுழற்சியில் அபாரமாய் சலனிக்கின்றன. இந்தப் பயணத்தில், அவை மெல்லமெல்ல உருவங்களை இழந்து, அவற்றின் சாரத்தை மட்டும் ஏற்று அரூபம் கொள்கின்றன. இவையே இவருடைய மூன்றாம் வகைச் சித்திரங்கள். இவருடைய மூன்று வகைச் சித்திரங்களும் வெளிப்பாட்டில் ஓர் அற்புதத்தை அடைவதன் மூலம், அழகிய கோலம் கொள்கின்றன.
அரூப வகைச் சித்திரங்களே இவருடைய வண்ண ஓவியங்களாகவும் வெளிப்பாடு கொள்கின்றன. சாரங்களின் அரூப உருவாக்கமாகவே இவருடைய ஓவியங்கள் அமைகின்றன. அழுத்தமான வண்ணங்களை ஒப்பனைகளின்றித் தீர்க்கமாக வைப்பதில் ஆர்வம் கொண்டவர் இவர். இவருடைய கலை நம்பிக்கையும் ஆற்றலும் மகத்துவமானவை.
- எழுத்தாளர், கலை விமர்சகர்.
தொடர்புக்கு: kaalamkalaimohan@gmail.com