

இயற்கையின் விழுமியங்களில் ஒளிரும் கலைஞன் விஜய் பிச்சுமணி. இயற்கையோடு இசைந்தியங்கும் வாழ்வின் மகத்துவத்தையும் மதிப்புகளையும் கொண்டாடுபவை இவருடைய படைப்புகள். இவருடைய கலை மனமும் கலைத் திறன்களும் அயரா உழைப்பும் ஒன்றோடொன்று முயங்கித் திளைத்து உருக்கொண்டிருக்கும் இவருடைய படைப்புலகம் பிரமிப்பும் திகைப்பும் அளிப்பது. கிராமம், காடு, மலை, அதன் மக்கள், மரங்கள், விலங்குகள், பறவைகள் என இயற்கையோடு உணர்வுபூர்வமாக உறவாடும் படைப்பு மனம் கொண்டவர்.
நம் தொன்மையான வாழ்வின் மீதான ஏக்கங்களும் ஆதங்கங்களும் அதன் அழிவு குறித்த கவலைகளும் வேதனைகளும் உள்ளுறைந்திருக்கும் படைப்புலகம் இவருடையது. இவை ஒருவகையில், விஜய் பிச்சுமணியின் கலைரீதியான பிரத்தியேகக் கதையாடல்கள். இவருடைய படைப்புவெளி, தோற்றத்தில் பிரம்மாண்டமானது; வெளிப்பாட்டில் கலை நுட்பங்கள் கூடியது. இவருடைய இந்தத் தனித்துவமான அம்சம்தான் பார்ப்பவர் எவரையும் ஒரே சமயத்தில் பிரமிப்புக்கும் திகைப்புக்கும் ஆளாக்குகின்றன.
தமிழகத்தின் நவீனக் கலைவெளியில், தங்களின் தொடர்ந்த கலைப் பயணத்தினூடாகவும் அறிதல்களினூடாகவும் கலை மேதமையை அடைந்த பல கலைஞர்கள் நம்மிடையே இருந்திருக்கிறார்கள்; இருக்கிறார்கள். கே.சி.எஸ்.பணிக்கர், எஸ்.தனபால், எல்.முனுசாமி, சந்தானராஜ், பி.வி.ஜானகிராம், ஆதிமூலம், ஆர்.பி.பாஸ்கரன், தட்சிணாமூர்த்தி, அச்சுதன் கூடலூர், சி.டக்ளஸ் எனப் பல கலை ஆளுமைகள். எனினும், நான் அறிந்தவரை இளம் வயதிலேயே, ஆற்றல்மிக்க படைப்பாளுமைகளாக, இளம் மேதைகளாக வெளிப்பட்டவர்கள் என கே.ராமானுஜம், சூரியமூர்த்தி (மாணவப் பருவத்திலேயே தேசிய விருது பெற்றவர். அன்று கல்லூரி முதல்வராக இருந்த கே.சி.எஸ்.பணிக்கரும், அச்சமயம் கல்லூரியில் மாணவராகப் பயின்ற சூரியமூர்த்தியும் ஒரே ஆண்டில் தேசிய விருது பெற்றது ஓர் அரிய நிகழ்வு), மரிய அந்தோணிராஜ் ஆகியோரைக் குறிப்பிடலாம். இன்று, ஓர் இளம் படைப்புச் சக்தியாக விஜய் பிச்சுமணி வெளிப்படுவதை அவதானிக்க முடிகிறது.
ஓவியத்தில் ஒரு பையன்
கடந்த ஜூலை முதல் வாரத்தில் சென்னை லலித் கலா அகாடமியின் விஸ்தாரமான கலைக்கூடத்தில் விஜய் பிச்சுமணியின் தனிநபர் கண்காட்சி நடைபெற்றது. அந்த மிகப் பெரிய கலைக்கூடத்தின் சகல பகுதிகளிலும் அவருடைய கலைப் படைப்புகள் நேர்த்தியாக நிறைந்திருந்தன. அவருடைய முந்தைய படைப்புகளில் சிலவும் சமீபத்திய படைப்புகளும் அடங்கி ஒன்றாகப் பிரமிக்கவைத்த கண்காட்சி அது. தாள், கேன்வாஸ், மரம், உலோகம், கல், களிமண் எனப் பல்வேறு சாதனங்களினூடாக அவருடைய கிராமமும் காடும் மலையும் சார்ந்த இளம் பிராயத்து வாழ்க்கை விரிந்து பரந்திருந்தது. கலை ஆற்றலிலும் அதன் நேர்மையிலும் அவை வளமும் பலமும் பெற்றிருந்தன.
நான் யார் என்கிற அடிப்படைக் கேள்விக்கான தேடலில் அவர் கண்டடையும் அடையாளங்களாகவே அவருடைய படைப்புகள் அமைந்திருக்கின்றன. கிராமத்து அப்பா சைக்கிளில் தன்னுடைய குடும்பத்தை- முன்னால் ஒரு பையன், பின்னால் கேரியரில் மனைவியும் இரு பையன்களும் என - அழைத்துச் செல்லும் இரவுப் பொழுதில் சைக்கிளின் டைனமோ வெளிச்சத்தில் விரியும் காடு, அவருடைய பால்யத்தின் இயற்கை வாழ்வைப் பிரத்தியட்சமாக உணர்த்துகிறது; நம் வேர்களிலிருந்து துண்டிக்கப்பட்ட நகர மனிதர்களின் வாழ்க்கை மதிப்புகள் இன்று அவரைக் கலக்கமடைய வைக்கின்றன என்பதையும் அறிய முடிகிறது.
பேரக் குழந்தையைத் தன்னோடு இறுக அணைத்துக்கொண்டிருக்கும் ‘பாட்டியம்மா’ ஓவியத்தில் இன்றைய குழந்தைகள் இழந்திருக்கும் ஒரு வாழ்வின் வேதனை உள்ளுறைந்திருக்கிறது. தன் வாழ்விடமான மலைக்காட்டில் தன்னியல்பாக நடந்துசெல்லும் யானையின் கம்பீர அழகில், இன்று நகரத் தெருக்களிலும் கோயில் வாசல்களிலும் ஆசிர்வாதம் வழங்கிப் பிச்சையெடுக்க வைக்கப்படும் அவலம் உள்ளுறைந்திருக்கிறது. ஓர் அழகிய கலைச் சொல்லாடலின் மூலம் சொல்லப்படாத அவலமும் உள்ளுறையாக இவருடைய படைப்புகளில் அமைந்திருக்கின்றன. இவருடைய கலை ஆற்றலின் மகத்துவம் இது.
வாழ்க்கைக் கோலம்
இவருடைய ஆற்றல்மிக்க அதிர்வூட்டும் கோடுகள் இயற்கையின் அலாதியான இசைப் பிரவாகத்தின் அற்புத லயத்துடன் இயங்குகின்றன. இக்கோடுகளில் வெளிப்படும் இயற்கையின் ரகசியங்கள், புது வாழ்வுக்கான நறுமணத்தோடு பரவுகின்றன. நம் பூமி வாழ்வுக்கு உரமளிப்பவர்களாகவும் பாதுகாவலர்களாகவும் வாழும் விவசாயிகளின் வாழ்க்கைத் தடங்கள் நம்பிக்கையுடன் ஒளிர்கின்றன.
ஆந்தையின் விநோத அழகு
மாடுகளின் சிற்ப வரிசை - ஒரு வாழ்க்கையின் கோலாகலம். மாடுகளின் சுபாவமான நடையில் மிளிரும் அழகு வியப்பூட்டும் அதேசமயம், அவற்றின் உடல்களில் மாடுகள் சார்ந்த நம் விவசாயிகளின் வாழ்க்கைச் சித்திரங்களை அவர் தீட்டியிருப்பது அவற்றுக்கு உயிர்ப்பூட்டும் பரிமாணங்களை அளிக்கின்றன. இவருடைய மரச் சிற்பங்கள் மிகவும் பெறுமதியானவை. உணர்வுகளின் நுட்பங்கள் கூடியவை. நம் காலத்தின் மகத்தான கலைஞனான சி.டக்ளஸ், ஒரு கலைஞனுக்கு அத்தியாவசியமான நேர்மையை விஜய் பிச்சுமணி கொண்டிருப்பதாகச் சிலாகிக்கிறார்.
மேலும், விஜய் பிச்சுமணியின் ஒரு மரச் சிற்பம் பற்றி டக்ளஸ் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “அவருடைய ஒரு தொங்கும் மரச் சிற்பத்தை நாம் பார்க்கலாம். அது மேல், மையம், கீழ் என மூன்று துண்டுகளைக் கொண்டிருக்கிறது. மேல் பகுதி, வளமான, உணர்வுபூர்வமான வளைவுகளோடு அமைந்திருக்கிறது. கீழ்ப் பகுதி, ‘V’ வடிவிலான சில கூறுகளைக் கொண்டிருக்கிறது. அவை, ஒழுங்கற்றும் உடைந்த கண்ணாடித் துண்டுகளைப் போன்ற கூர்முனைகளோடும் காணப்படுகின்றன. மையப் பகுதியில் அமைந்திருக்கும் எரிந்த கரித்துண்டம் போன்ற புதிரான பகுதி தனி ஈர்ப்பைக் கொண்டிருக்கிறது. அது, நம் காலத்தின் இருண்ட கதைகளைக் கூறுகிறது. படைப்பு அதன் முழுமையில், வளத்தையும் அதன் அழிவையும் கலை நுட்பத்தோடு சொல்கிறது”.
ஆந்தையின் விநோத அழகு, பரபரத்துத் திரியும் காகங்களின் கூட்டம் என எந்த ஒரு படைப்பின் உருவாக்கத்திலும் இவர் மேற்கொள்ளும் நேர்மையான கடும் பிரயாசைதான், படைப்பு அதிகபட்சச் சாத்தியங்களை அடைய உதவியிருக்கிறது. இனி வரும் காலம், படைப்புவெளியில் இவரைப் பல புதிய திசைகளுக்கும் அறிதல்களுக்கும் அழைத்துச் செல்லும்போது, இவரின் மேதமை அதன் உச்சங்களில் ஒளிரும் என்பதில் சந்தேகமில்லை.
விஜய் பிச்சுமணியின் படைப்புகள், அவற்றை அணுகும் எந்தவொரு பார்வையாளனிடமும் நேசத்தோடு பிணைப்புகொள்ளும் அலாதியான குணம் கொண்டவை. இவருடைய படைப்புகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஆர்ட் ஹவுஸ் கேலரியில் இவருடைய பல படைப்புகள் இருக்கின்றன. அறிதலுக்கான வேட்கையும் ஆர்வமும் உள்ளவர்கள் அங்கு சென்று அவற்றைப் பார்வையிடலாம். ஒரு புதிய கலை உலகம் உங்களை நேசத்தோடு அரவணைத்துக்கொள்வதை உணர்வீர்கள்.
- கவிஞர், கலை விமர்சகர்
தொடர்புக்கு: kaalamkalaimohan@gmail.com