மாற்று இடம் கேட்கும் சாகித்ய அகாடமி

மாற்று இடம் கேட்கும் சாகித்ய அகாடமி
Updated on
2 min read

இந்தியாவில் பல்வேறு மொழிகளின் இலக்கியங்களைப் பாதுகாக்​கவும் பரப்பவும் சாகித்ய அகாடமி 1954இல் நிறுவப்​பட்டது. சிறந்த எழுத்​தாளர்​களுக்கு விருது வழங்கி ஊக்கு​விப்பது, அவர்களது பணிகளுக்கு நிதிநல்கை வழங்குவது, பல்வேறு இந்திய மொழிகள் சார்ந்த நூல்களை வெளியிடுவது, அவற்றை ஆங்கிலத்​திலும் வெளியிடுவது, வெவ்வேறு மாநிலங்​களைச் சேர்ந்த எழுத்​தாளர்​களுக்கு இடையே பண்பாட்டு நோக்கில் தொடர்பு ஏற்படும் வகையில் நிகழ்வுகளை நடத்துவது போன்றவை சாகித்ய அகாடமியின் செயல்​பாடுகள்.

ஒவ்வோர் ஆண்டும் சிறந்த எழுத்​தாளர், சிறந்த மொழிபெயர்ப்​பாளர் போன்ற பிரிவு​களின்கீழ் சாகித்ய அகாடமி வழங்கும் விருதுகள், இலக்கிய வாசகர்​களின் கவனத்தை ஈர்ப்பவை. அகாடமிக்கு டெல்லியில் தலைமையகமும் மும்பை, கொல்கத்தா, பெங்களூரு ஆகிய இடங்களில் பிராந்திய அலுவல​கங்​களும் உள்ளன.

ஒருகாலத்தில் சென்னை​யிலும் இதற்குப் பிராந்திய அலுவலகம் இருந்தது. அது பெங்களூருக்கு மாற்றப்​பட்டது. இது தமிழ் வாசகர்​களுக்கு ஓர் இழப்பு எனினும், அதை ஈடுசெய்​யும்​வகை​யில், அகாடமியின் துணை அலுவலகம் (Sub-Regional Office) சென்னையில் செயல்​படு​கிறது. இந்திய மொழிகளில் தமிழுக்கு மட்டுமே இந்த வாய்ப்பு அளிக்​கப்​பட்​டுள்ளது. இந்த அலுவலகம், சென்னை தேனாம்​பேட்​டையில் குணா கட்டிட வளாகம் என்னும் தனியார் இடத்தில் இயங்கிவரு​கிறது. அகாடமி அச்சிடும் நூல்கள், வேறோர் இடத்தில் வாடகை செலுத்திப் பராமரிக்கப்​படு​கின்றன. இந்தி மொழி நூல்களுக்கு இணையாக சாகித்ய அகாடமி தமிழ் மொழியில் வெளியிடும் நூல்களும் ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு விற்பனை ஆகின்றன. வேறெந்த மொழியிலும் சாகித்ய அகாடமி நூல்கள் இவ்வளவு விற்பனை ஆவ​தில்லை.

தமிழ் வாசகர்​களின் ஆதரவோடும் லாபத்​துடனும் இயங்கி வரும் தமிழகப் பிரிவுக்குத் தனிக் கட்டிடம் கேட்டு, சாகித்ய அகாடமி சார்பில் தமிழக அரசிடம் 2023இல் கோரிக்கை வைக்கப்​பட்டது. இலக்கியத் துறையில் முத்திரை பதித்த முன்னாள் முதல்வர் மு.கருணாநி​தியின் நூற்றாண்டு நினைவாகத் தமிழக அரசு, சாகித்ய அகாடமிக்கு இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பதே அக்கோரிக்கை. கருணாநி​தியின் நூற்றாண்டு நிறைவடைந்​து​விட்ட நிலையில், சாகித்ய அகாடமியின் கோரிக்கை என்ன ஆனது? அகாடமியின் தமிழகப் பிரிவுக்கான ஆலோசனைக் குழுவின் ஒருங்​கிணைப்​பாளரும் பேராசிரியருமான அறவேந்​தனிடம் கேட்டோம். ‘தற்போது தேனாம்​பேட்​டையில் உள்ள அலுவல​கத்தில் அகாடமியின் அலுவலகம், இலக்கிய நிகழ்வுகள் நிகழும் அரங்கு, நூலகம், விற்பனைப் பிரிவு ஆகிய நான்கும் குறுகிய பரப்பில் செயல்​பட்டு வருகின்றன. இந்தச் சூழல் அகாடமியின் செயல்​பாடு​களுக்குத் தடையாக உள்ளது.

அலுவலகம், அரங்கம், நூலகம், விற்பனையகம் நான்கும் இட நெருக்கடியில்லாமல் செயல்​படு​வதற்கு ஏற்பப் புதிய இடம் அமைய வேண்டும். அதற்காக 10,000 சதுர அடி கொண்ட இடம் எங்களுக்குத் தேவை. சென்னை போன்ற மாநகரத்​துக்குள் இப்படி ஓர் இடத்தை ஒதுக்கீடு செய்வது கடினம் எனில், இடத்தை இரண்டு பகுதிகளாக அரசு அளிக்கலாம். அவற்றில் ஒன்றில் நூல்களைப் பராமரிப்போம். கர்நாடக அரசு பெங்களூருவில் உள்ள சாகித்ய அகாடமிக்கு இடம் அளித்துள்ளது. படிப்​பறிவையும் வாசிப்பு இயக்கத்​தையும் வலுப்​படுத்து​வதில் மிகுந்த அக்கறை காட்டும் தமிழக முதல்வர் மு.க.ஸ்​டா​லின், சாகித்ய அகாடமியின் கோரிக்கையை நிறைவேற்றுவார் என்னும் நம்பிக்கை எங்களுக்கு உள்ளது” என்கிறார் அறவேந்தன்.

சென்னை கோட்டூர்​புரத்தில் இயங்கி வரும் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் சாகித்ய அகாடமிக்கு இடம் ஒதுக்​கப்​பட்​டால், நூல் வேண்டுவோர் தங்களை அணுக எளிதாக இருக்​கும்; அலுவல​கத்​துக்குத் தேவைப்​படும் பரப்பளவு அங்கு அமையச் சாத்தி​யங்கள் அதிகம் என்றும் ஓர் ஆலோசனையை அவர் முன்வைக்​கிறார். இலக்கியம் மூலம் தெற்கையும் வடக்கையும் இணைக்கும் சாகித்ய அகாடமிக்கும் வாசகர்​களுக்கும் அது பயன் உள்ளதாக இருக்​கும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in