

வில்லி பாரதத்தில் இடம்பெற்றுள்ள பானுமதிக்கும் கர்ணனுக்கும் இடையிலான தொன்மக் கதையை அடிப்படையாகக் கொண்டு எழுத்தாளர் கரிச்சான்குஞ்சு ‘பானுமதி’ என்றொரு சிறுகதையை எழுதியுள்ளார். பதினேழாம் நாள் யுத்தத்தில் கர்ணன் கொல்லப்படுகிறார். துரியோதனனின் இறுதி நம்பிக்கையாக இருந்த கர்ணனின் மறைவிற்குப் பிறகு ஏறக்குறைய போர் முடிந்துவிட்டது என்றே அனைவரும் கருதுகின்றனர். திருதராஷ்டிரனும் காந்தாரியும் எப்படியாவது துரியோதனனையாவது காக்க வேண்டும் என்று முயல்கின்றனர். துரியோதனன் எவருடைய பேச்சையும் கேட்கத் தயாராக இல்லை. துரியோதனனை விட்டுவிடும்படி தன் பெரியப்பா கோரிக்கை வைத்தால் தன்னால் நிராகரிக்க முடியாது என்று தருமன் பதற்றமடைகிறார். அதற்குள் அவரைக் கொன்றுவிட வேண்டும் என்று பாண்டவர்கள் ஆர்வமாகக் காத்திருக்கின்றனர். துரியோதனனைக் கொன்றால்தான் போர் முடியும்; பீமன், திரௌபதியின் சபதம் நிறைவேறும். இச்சூழ்நிலையில், தன் மனைவி பானுமதியைத் தேடி துரியோதனன் வருகிறார். ஓர் இழைகூடப் பொன்னும் மணியும் அணியாமலும் கூந்தலை அலங்கரிக்காமலும் இருக்கிறார் பானுமதி.
பானுமதியின் உத்தரவைப் பெற்றுப் போருக்குச் செல்ல ஆர்வமாக இருக்கிறார் துரியோதனன். கர்ணனின் மறைவு துரியோதனனைவிடப் பானுமதியைத்தான் கடும் துயரத்தில் ஆழ்த்துகிறது. கணவன் இறந்துவிட்ட ஒரு பெண்ணின் துன்பத்தை பானுமதி வெளிப்படுத்துகிறார். போரில் தான் வெற்றி பெறுவதற்காக பானுமதி நோன்பிருப்பதாகத் துரியோதனன் புரிந்துகொள்கிறார். பானுமதியிடம் சிறிதுநேரம் காதல் விளையாட்டில் ஈடுபட விரும்புகிறார் துரியோதனன். அவரோ மறுத்து ஓடுகிறார். துரியோதனன் எட்டிப் புடவையைப் பிடிக்கிறார். கை பானுமதியின் மாங்கல்யத்தைப் பிடித்துவிடுகிறது. துரியோதனன் இதனைத் தீய நிமித்தமாகக் கருதிப் பதறுகிறார். ஆனால், இச்சம்பவம் பானுமதிக்குக் கர்ணனை நினைவூட்டுகிறது. சொக்கட்டான் விளையாட்டின் இறுதியில் தன் மேகலையைப் பிடித்திழுத்த கர்ணனின் நினைவு பானுமதியின் மனதை ஆக்கிரமிக்கிறது. சிரித்துவிடுகிறார்.
துரியோதனனைப் போன்று கர்ணனும் பானுமதியிடம் அனுமதி பெற்றே போருக்குச் சென்றார். ‘வெற்றி பெறுங்கள் என்றேன். என்னைக் குளிரவும் குளிர்ந்தும் பார்த்தார். நானும்தான்’ என்று கர்ணனின் நினைவுகளை அசைபோடுகிறார் பானுமதி. பானுமதியின் சிரிப்புக்குக் காரணம் கேட்கிறார் துரியோதனன். சொல்லித் தீர்த்துவிட வேண்டும் என்று பானுமதி நினைக்கிறார். “தாவிப் பிடிக்கப் பார்த்தீர்களே, அந்த நேரத்தில் எனக்குக் கர்ணனின் நினைவு வந்தது” என்கிறார். “ஆமாம்... அவரும் போய்விட்டார்... என்னை இப்படி ஆக்கிவிட்டு” என்று தன் தலை முதல் கால் வரை சுட்டிக்காட்டுகிறார். துரியோதனனுக்கு அப்போதுதான் புரிகிறது. ஒன்றுமே சொல்லாமல் துரியோதனன் வெளியேறுகிறார். “இதைக் கேளுங்கள்... மனத்தளவில்...” என்று பானுமதி சொல்லத் தொடங்கியதைத் துரியோதனனும் கேட்கவில்லை. “ஆமாம் போ. இனி யாருக்கு எதை நான் விளக்கிச் சொல்ல வேண்டும்?” என்று முணுமுணுத்துக் கொண்டு பானுமதியும் அதை முடிக்கவில்லை என்று கரிச்சான்குஞ்சு கதையை முடித்திருக்கிறார்.
கர்ணனும் பானுமதியும் நல்ல நண்பர்கள் என்ற தொன்மக் கதையாடலின் மீது கரிச்சான்குஞ்சு மறுவாசிப்பை நிகழ்த்தியிருக்கிறார். பானுமதியைத் துரியோதனன் கடத்திக்கொண்டு வரும்போது, கர்ணனே பின் தொடர்ந்துவந்த மன்னர்களைப் போரிட்டு வெல்கிறார். அவனது வீரத்தை நேரில் கண்டவர் பானுமதி. கர்ணன் இருக்கும் தைரியத்தில்தான் துரியோதனனும் இப்படியொரு செயலைச் செய்யத் துணிகிறார். அதனால் கர்ணன் மீது பானுமதிக்குக் காதல் இருந்திருக்க வாய்ப்பில்லை என்று மறுக்க முடியாது. இவர்கள் இருவரின் உறவுமீது கரிச்சான்குஞ்சுக்கு வேறொரு பார்வை இருந்திருக்கிறது. அதனைத்தான் ‘பானுமதி’ என்கிற சிறுகதையில் வெளிப்படுத்தியிருக்கிறார்.
தவிர, ‘மனத்தளவில்...’ என்றொரு வார்த்தையை பானுமதி பயன்படுத்துகிறார். இதனைச் சொல்ல வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது என்ற விமர்சனத்தையும் கரிச்சான்குஞ்சு மீது வைக்கலாம். ஏனெனில், ‘உடலளவில் தான் தூய்மையானவள்’ என்கிற வாசிப்பையும் இச்சொல் உருவாக்குகிறது. ‘ஆமாம் போ. இனி யாருக்கு எதை நான் விளக்கிச் சொல்ல வேண்டும்?’ என்ற இடம் புனைவில் புதிர்த்தன்மை நிரம்பியதாக இருக்கிறது. ‘துரியோதனன் இனி திரும்ப வர மாட்டார்’ என்கிற எண்ணம் பானுமதிக்கு இருந்திருக்க வேண்டும். அதனால்தான் தனது ஒழுக்கத்தை யாருக்கும் இனி நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை என்கிற முடிவுக்கும் வருகிறார். இப்புனைவுக்குள் கரிச்சான்குஞ்சு நிகழ்த்தியிருக்கும் மீள் வாசிப்பு மிகப் பெரிது. நெடுங்காலமாக நம்பப்பட்டு வந்த, ஒரு தொன்மக் கதையின்மீது ஓர் உடைப்பை ஏற்படுத்துதல் அவ்வளவு எளிதானது இல்லை.
தொடர்புக்கு: ramesh5480@gmail.com