

இலங்கை கல்முனைக்குடியில் 1944ஆம் ஆண்டு பிறந்த எம்.ஏ.நுஃமான் இந்த ஆகஸ்ட் மாதத்தோடு எண்பது வயதை எட்டியிருக்கிறார். கவிஞர், திறனாய்வாளர், மொழியியலாளர், மொழிபெயர்ப்பாளர், பதிப்பாசிரியர் என்று பல முகங்களைக் கொண்டவர் நுஃமான். இலங்கைப் பல்கலைக்கழகங்களில் பேராசிரியராகவும் தென்கிழக்காசியாவின் சில பல்கலைக்கழகங்களில் வருகைதரு பேராசிரியராகவும் பணியாற்றியவர். தமிழிலும் ஆங்கிலத்திலும் 30க்கும் அதிகமான நூல்களை வெளியிட்டுக் கல்விப்புல அறிஞராக விளங்கும் நுஃமான், அடிப்படையில் கவிஞர். 1960களின் தொடக்கத்தில் இலங்கையின் நீலவாணன், மஹாகவி, இ.முருகையன் போன்ற கவிஞர்களை ஆதர்சமாகக்கொண்டு எழுதத் தொடங்கினார்.
1960களின் இறுதியில் ‘கவிஞன்’ என்ற பெயரில் காலாண்டு இதழொன்றையும் தொடங்கி நடத்தியிருக்கிறார். கவிதா நிகழ்வுகளை நடத்தியதோடு, அவற்றில் கவிதைகளையும் பாடினார். 1982இல் முதல் கவிதைத் தொகுப்பு ‘அழியா நிழல்கள்’ வெளிவந்தாலும், 1983இல் அன்னம் வெளியீடாக வெளியான ‘மழை நாட்கள் வரும்’ தொகுப்பு பெரும் கவனத்தைப் பெற்றது. 1980களில் இலங்கையிலிருந்து வெளியான முக்கியமான கவிதைத் தொகுப்புகளில் ‘பதினொரு ஈழத்துக் கவிஞர்கள்’ (1984) நூலை அ.யேசுராஜாவோடு இணைந்து தொகுத்தவர்.
31 கவிஞர்களின் 82 அரசியல் கவிதைகள் கொண்டதாக சேரன் உள்ளிட்டோர் தொகுத்த ‘மரணத்துள் வாழ்வோம்’ (1985) நூலிலும் இவர் கவிதைகள் இடம்பெற்றிருந்தன.
படைப்பாளி நுஃமான்
நுஃமானைப் படைப்பாளி, திறனாய்வாளர் என்ற இரண்டு வகைகளுக்குள் அடக்க முடியும். ஒரு வகையில், இவையிரண்டும் இங்கு எதிரும் புதிருமானதாகக் கருதப்படுகின்றன. பின்னாள்களில் நுஃமானின் வெளிப்பாடும் திறனாய்வு சார்ந்ததாக அதிகம் அமைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், அவர் எதைப் பற்றி எழுதினாலும் படைப்பு மனத்தைத் தவற விடாது அணுகினார் என்பதுதான் அவரின் தனித்துவமாக இருக்கிறது.
நேர்காணல் ஒன்றில், தன்னுடையதில் எழுத்தாளன் அல்லது படைப்பாளி என்கிற அடையாளத்தையே முக்கியமென்று கருதுவதாகக் குறிப்பிட்டுள்ளார். அதேவேளையில், படைப்பாளி உணர்வுபூர்வமானவர், விமர்சகர் அறிவுபூர்வமானவர் என்கிற இரட்டை எதிர்மறையை மறுக்கும் அவர், படைப்புணர்வு அற்றவர் நல்ல விமர்சகராகவோ அறிவுபூர்வமான சிந்தனைத் திறனற்றவர் நல்ல படைப்பாளியாகவோ மலர்தல் சாத்தியமல்ல என்று கருதுகிறார். இவ்வகையில், அவரின் அணுகுமுறைகளில் வழமையிலிருந்து விலகிய சில அம்சங்களை மட்டும் எடுத்துக்கொள்ளலாம்.
மார்க்சியத் திறனாய்வாளர்
திறனாய்வாளர் என்கிற முறையில் அவரை மார்க்சியத் திறனாய்வுநெறி சார்ந்தவர் என்று கூறலாம். ‘மார்க்சியமும் இலக்கியத் திறனாய்வும்’ (1987) அவருடைய முக்கியமான நூல்களுள் ஒன்று. அதேவேளையில், இலங்கையிலும் தமிழகத்திலும் இருந்த மார்க்சியத் திறனாய்வாளர்களிடமிருந்து அவர் வேறுபட்டிருந்தார். உலகைப் புரிந்துகொள்ளவும் மாற்றவும் உதவும் வலுவான சித்தாந்தமாக மார்க்சியம் இன்றைக்கும் இருக்கிறது என்றும், இலக்கியத்தை உன்னத நிகழ்வாக அன்றிச் சமூக உற்பத்தியாக நிறுவியதில் மார்க்சியத்தின் பங்கு முக்கியமானது என்றும் குறிப்பிடும் அவர், மார்க்சியத்தை அரசியலாக மட்டுமின்றிச் சமூகத்தையும் பண்பாட்டு நடைமுறைகளைப் புரிந்துகொள்ளவும் பயன்படுத்த முடியும் என்று விளக்கினார். இலக்கியத்தில் எல்லா அம்சங்களையும் அதனால் விளக்கிவிட முடியும் என்று தான் நம்பவில்லை என்றும் குறிப்பிட்டார். “நான் கட்சி மார்க்சியர் அல்ல” என்று குறிப்பிட்டுக் கொண்ட அவர், மார்க்சியத்தைச் சமூகக் கோட்பாடாகப் பொருள்படுத்திக்கொள்ள முயன்றவர் எனலாம்.
தமிழ் இலக்கணத்தைக் கற்பிக்கும் ஆசிரியராக விளங்கிய நுஃமானின் பயணத்தில் நடந்த விதிவிலக்கொன்றை அடுத்ததாகக் கூறலாம். மொழியை ஒரு தொடர்புக் கருவியாகப் பார்த்தது மொழியியல். அதேபோல மொழியியலைப் பொறுத்தவரையில் இலக்கணம் என்பது மொழியின் அமைப்பு மட்டுமே. ஒரு புலமையாளராக மொழியியலைப் படிக்க வேண்டியிருந்த நுஃமான், ஒரு படைப்பாளியாக இவற்றை நுட்பமாக இணைத்தும் - பிரித்தும் எதிர்கொண்டிருந்தார் என்றே சொல்ல வேண்டும். இலக்கியம் என்பது மொழித்திறனோ, செய்திறனோ அல்ல என்று கருதிய அவர், நல்ல படைப்புக்கு ஆழ்ந்த - அகன்ற அனுபவமும், அனுபவத்தைப் பொருள்கொள்ளும் நுண்ணிய உணர்திறனும் படைப்புத்திறனும் தேவை என்று கருதினார். மெளனி படைப்புகள் பற்றிக் குறிப்பிடும்போது மொழியில் மர்மங்களும், மர்மங்கள் ஏற்படுத்தும் மயக்கமும் இயல்பான கலைமுறையாக இருக்க முடியும் என்று கூறியிருக்கிறார்.
இலக்கியத்தில் எதார்த்தத்தையே பெரிதும் விரும்புகிறேன் என்றாலும், நவீனப் பாணிகளை நிராகரிக்கவில்லை என்று கூறிய அவர், மொழியியலின் தொடர்ச்சியில் அறிமுகமான அமைப்பியல், குறியியல், பின்அமைப்பியல் போன்ற நவீனக் கலை இலக்கியக் கோட்பாடுகளின் இயந்திரகதியான பொருத்தப்பாடுகளை இலக்கிய உணர்திறன் என்கிற அணுகுமுறையின் துணைகொண்டு எதிர்கொண்டார். அமைப்பியல் கோட்பாட்டைக் கொண்டு எதிரும் புதிருமாக உச்சபட்ச மறுப்புகள் வெளிப்பட்டுக்கொண்டிருந்த காலத்தில், நிறைந்த வாசிப்பின் பின்புலத்தில் அவற்றைப் பரிசீலித்து எழுதினார்.
குறிப்பாக, ரோலன் பார்த்தின் ‘ஆசிரியர் இறந்துவிட்டான்’ என்ற கருத்தை எடுத்துக்கொண்டு, படைப்பில் ஆசிரியனைப் பொருட்படுத்தவே தேவையில்லை என்று கூறப்பட்டதை மறுத்தார். அதாவது “ஆசிரியரை முற்றிலும் ஒதுக்கி, பிரதியின் முழுமையான அமைப்பைக்கூடக் கருத்தில் கொள்ளாமல், பிரதியைத் தன் மனம்போன போக்கில் விளக்க முயலும் ‘வாசிப்புப் பிரதி, பலதளப் பொருண்மை’ என்கிற கருத்தை ஏளனம் செய்வதாக அமைகிறது. மார்க்சிய விமர்சனத்தில் ஒரு வறட்டு வாதம் மேலோங்கி இருந்ததுபோலவே, அமைப்பியல் விமர்சனத்திலும் ஒரு வறட்டு வாதமே தமிழுக்கு அறிமுகம் ஆகி இருக்கிறது” என்று சாடினார். மார்க்சியத் திறனாய்வு நெறி மீது அவருக்கு இருந்த விமர்சனம், புதிய கோட்பாடுகளை விமர்சனமின்றித் தழுவுபவராக மாற்றவில்லை என்பதை இங்கே பார்க்கிறோம். நோம் சாம்ஸ்கியின் மொழி உணர்திறன் என்கிற கருத்தைத் தழுவி யோனத்தான் கல்லர் பேசிய ‘இலக்கிய உணர்திறன்’ வாசகனுக்குத் தேவை. இலக்கிய உணர்திறனும், படைப்பு மனமும் கொண்ட வாசகனிடம்தான் பிரதி புது உயிர்ப்பு பெற முடியும் என்று வாதிட்டார் நுஃமான்.
மொழிபெயர்ப்பாளர்
இதேபோல மறுமுனையில் இலக்கிய வாசிப்பைச் சமூக அரசியல் பின்புலத்தில் பொருத்திப் புரிந்துகொள்ள முற்பட்டதையும் பார்க்கிறோம். அவருடைய மொழிபெயர்ப்பு நூல்களில் பாலஸ்தீனக் கவிதைகள் குறிப்பிடத்தக்கது. தன்னுடைய மொழிபெயர்ப்புகள் பெரும்பாலும் மூன்றாம் உலகப் படைப்புகள் தொடர்பானவைதான் என்று கூறும் அவர், மொழிபெயர்ப்பை இலக்கியப் பணியாக மட்டுமின்றி சமூக, அரசியல் பணியாகவும் கருதுவதாகக் கூறியிருப்பது கவனிக்கத்தக்கதாகும்.
அதிர்ச்சி மதிப்பீட்டிற்காக எதையேனும் கூறிக் கவனம் ஈர்க்க நுஃமான் ஒருபோதும் முயன்றவரில்லை. அதனாலேயே அவர் அதிகம் எழுதவில்லை என்பதுபோல் தெரியலாம். உண்மையில், அவர் குறைவாக எழுதவில்லை. நிதானமாக எழுதியிருக்கிறார் என்பதைப் பார்க்க முடிகிறது. தான் எழுத முற்பட்ட விஷயங்களைப் பற்றி ஆழமான வாசிப்பை அவர் பெற்றிருந்தார். கல்வியாளர், ஆய்வாளர் என்று சொன்னாலே புறவயமான பார்வைகளை மட்டுமே கொண்டவர்கள் என்ற கருத்து இங்கு நிலவுகிறது. ஆனால், எம்.ஏ.நுஃமான் இதற்கு எதிரான இனிய புறனடை.
- பேராசிரியர், ஆய்வாளர்
தொடர்புக்கு: stalinrajangam@gmail.com