நூலகக் கொள்முதலில் அவல நகைச்சுவை

நூலகக் கொள்முதலில் அவல நகைச்சுவை
Updated on
2 min read

முறைப்படுத்தப்பட்ட / வெளிப்படைத்தன்மையான நூலக ஆணை குறித்து அரசாணை வெளியாகி, முதல் சுற்று நூலக ஆணை எவ்வாறு இருக்கும் என்று காத்துக் கொண்டிருக்கின்ற நேரத்தில், இப்படி ஒரு கட்டுரை எழுத அவசியம் வரும் என்று ஒருபோதும் நினைக்கவில்லை. பெரம்பலூர் அருகே ஒரு கிராமத்தில் உள்ள நூலகத்தில் எடுக்கப்பட்ட ஒளிப்படத்தை ஒரு வாசகர் பதிந்திருந்தார். அந்த நூலின் பெயர் ‘புயலிலே ஒரு தோணி’. நூலக அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த இந்தப் புத்தக அட்டையின் முதுகுப்புறத்தில் ப.சிங்காரத்திற்குப் பதிலாய் ‘நகுலன்’ என்று இருந்தது. சற்றைக்கெல்லாம் இச்செய்தியைப் புலனங்களிலும் செய்தித்தாள் குழுக்களிலும் இங்கும் அங்குமாய்ப் பகிரத் தொடங்கிவிட்டார்கள்.

கரோனா​வுக்குப் பிந்தைய காலகட்டம் என்பது, ஏற்கெனவே சவாலான பதிப்புத் துறையை மேலும் கடினமான விஷயங்​களைச் சந்திக்க வேண்டிய நிலைக்குத் தள்ளியது. கடந்த இரண்டு ஆண்டு​களாகத் தமிழ்​நாட்டின் வெவ்வேறு மாவட்​டங்​களுக்குச் சென்று புத்தகக் காட்சியில் கலந்து​கொண்டு புத்தகங்களை வாசகர்​களிடம் கொண்டு​செல்லப் பதிப்​பாளர்​களும் விற்பனை​யாளர்​களும் இக்காலத்தில் போராடிக்​கொண்​டிருக்​கின்​றார்கள். இந்நிலை​யில், இது போன்ற ஓர் ஒளிப்படம் சமூக ஊடகத்தில் பரவலாகும்​போது, வெவ்வேறு இடங்களி​லிருந்தும் இத்தகைய நூலகக் கொள்முதல் முறைகேடுகள் குறித்த ஒளிப்​படங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவர ஆரம்பித்தன.

உண்மை​யில், சர்ச்சை உண்டான ‘புயலிலே ஒரு தோணி’ ப.சிங்​காரம் எனும் பெயரில்தான் வெளியானது. நூலின் அட்டை வடிவமைப்பில் மட்டும் பிழையாக ‘நகுலன்’ என்று வந்து​விட்டது. நூலகத்தின் அலமாரியில் பார்க்​கும்போது நகுலன் எழுதி​யது​போலத் தோற்றமளிக்​கும். இந்நிலை​யில், நூலகங்​களில் நடந்த முறைகேடான கொள்முதல்​களைத் தட்டிக்​கேளாமல், மேற்கண்ட பதிவு நகுலனைப் பரிகாசம் செய்த​தாகக் குறிப்​பிட்டுக் கண்டனம் எழுந்தது. அதை ஒட்டிச் சமூக ஊடகங்​களில் வெவ்வேறு நபர்கள் பகிர்ந்த, முறைகேடாகக் கொள்முதல் செய்யப்பட்ட நூல்களின் ஒளிப்​படங்கள் பகிரப்​பட்டன.

‘சில தன்னார்​வலர்கள் முன்னெடுத்தால் இப்படி நூலகங்​களில் தகுதியற்ற புத்தகங்கள் என்னவெல்லாம் வைக்கப்​பட்​டிருக்​கின்றன என்பதைத் தொகுக்க முடியும்’ என நானும்கூட ஃபேஸ்​புக்கில் பதிவுசெய்​தேன். வாசகர்கள் படங்களை அனுப்​பி​வைத்​தனர். மேலும் சிலர், நூலகத்தில் பார்த்​தவை​யாகச் சில தகவல்​களைக் கொடுத்​தார்கள். கிடைத்த தகவல்​களைக் கொண்டு பார்க்கையில் கடந்த ஆட்சிக் காலங்​களில் (இந்த ஆட்சியில் நூலக ஆணை இன்னும் வரவில்லை) முறைகேடாகக் கொள்முதல் செய்யப்பட்ட நூல்களில், வாசகர்​களுக்கு எந்த விதத்​திலும் பயனற்ற நூல்கள் பல வாங்கப்​பட்​டுள்ளன.

இதுநாள் வரை நாம் அறிந்​ததெல்லாம் நாட்டுடைமை ஆக்கப்பட்ட நூல்கள், ஆசிரியருக்கே தெரியாமல் நூலக ஆணை பெற்ற நூல்கள், மலினமாக அச்சடித்து அனுப்​பப்பட்ட நூல்கள் போன்ற​வை​தான். ஆனால், தற்போது தெரியவந்​துள்ளவை புது வகைத் திருட்​டுகள்.

1. ஒரே நூல் இருபதுக்கும் மேற்பட்ட பிரதிகள் ஒரே நூலகத்தில் இருப்பது. (சர்வதேச நூலகங்​களில்கூட இப்படி 20 நூல்களைக் கொள்முதல் செய்ய வேண்டிய அவசியம் இருக்​காது.)

2. நூலின் தலைப்பை மாற்றுவது (நூலின் பெயர் ‘தியாக பூமி’. அதை ‘பனி நிலம்’ என்கிற பெயரில் நூலகங்​களில் காணலாம்).

3. நூலின் ஆசிரியரை மாற்றுவது. (எழுத்​தாளர் மணவை முஸ்த​பாவின் பெயருக்குப் பதிலாக வேறு ஒருவரின் பெயரில் வெளியிடுவது. இது குறித்து ஏற்கெனவே தமிழக முதல்வர் கண்டனம் தெரிவித்​திருந்​தார்).

4. ஊர்ப்பு​ற/கிராம நூலகங்​களில் கொஞ்சம்​கூடப் பொருத்​தமற்ற ஆங்கில நூல்களைத் தருவிப்பது (இதில் சில நான்கு இலக்க விலை கொண்டவை).

5. ஊர்ப்பு​ற/கிராம நூலகங்​களில் தேவையற்ற நூல்களைத் தொடர்ந்து தருவிப்பது (ஒவ்வொரு கொள்முதலிலும் சங்க இலக்கியத் திரட்​டுகள் வரும், எந்த ஆட்சி வந்தாலும் ஒவ்வொரு கொள்முதலிலும் சில ஆன்மிக நூல்கள், மலர்கள் தொடர்ந்து இடம்வரும், பரமார்த்த குரு கதைகள் போன்ற நூல்கள் 50க்கும் மேற்பட்டவை இருக்​கும்).

6. சில நூல்களின் அட்டையில் ஒரு ஆசிரியரும், உள்ளடக்​கத்தில் ஒரு ஆசிரியரும் குறிப்பிடப்​பட்​டிருப்பார். மொழிபெயர்ப்​பாளர்களே நூல் ஆசிரியர்​களாகக் கருதப்​படு​வார்கள். சில நூல்கள் அட்டை மட்டும் மாற்றப்​பட்டு, ஒரே கொள்முதலில் வேறு பதிப்​பகங்​களிடம் இருந்து பெறப்​பட்​டிருக்​கும்.

7. முன்னர் அறிந்​ததெல்லாம் நூலாசிரியர்​களுக்குத் தெரியாமல் சில நூல்கள் பதிப்​பகங்கள் மூலம் நூலக ஆணை பெறப்​பட்​டிருக்​கும். ஆனால் புதிதாகத் தெரிந்​து​கொண்டது, சில நூல்கள் ஆசிரியருக்கே தெரியாத பதிப்​பகங்​களால் கொள்முதல் செய்யப்​பட்​டிருக்​கின்றன. (உதாரணம், விட்டல் ராவ் எழுதிய ‘காலவெளி’ நாவல், சி.மோகன் மொழிபெயர்த்த ‘ஓநாய் குலச் சின்னம்’ நாவல் - முறையே முகுந்தன் பதிப்​பகம், அரசன் பதிப்பகம் - புத்தகக் கடைகளில் முறையே கலைஞன் பதிப்​பகம், அதிர்வு பதிப்பகம் வெளியிட்டவை)

மேற்சொன்னவை எல்லாம் வெவ்வேறு வாசகர்கள், சமூக ஊடகத்தில் புழங்​கும் நண்​பர்​களின் பங்​களிப்பு​தான். இதுவே ஒரு பெரிய எண்​ணிக்கை​யில் வாசகர்கள்​ நூல​கங்​களுக்​குச் சென்று இப்​படியான பகல் ​கொள்​ளைகளை அம்​பலப்​படுத்​தினால், வருங்​காலத்​தில் அறி​வுத் துறை​யின் ​முதன்​மைத் தொழில்​களில் ஒன்றான ப​திப்புத் தொழில் என்​பது உலகளா​விய அள​வில்​ புகழ்​ பெறும்​.

- யாவரும் பதிப்பாளர்
தொடர்புக்கு: kaalidossan@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in