தொன்மம் தொட்ட கதைகள் - 14: ராவணனுக்கு வந்த காதல்

தி.ஜானகிராமன்
தி.ஜானகிராமன்
Updated on
2 min read

ராவணனை முதன்மைக் கதாபாத்திர​மாகக் கொண்டு தி.ஜானகிராமன் ‘ராவணன் காதல்’ சிறுகதையை எழுதியுள்​ளார். தி.ஜா.வின் அபூர்வமான கதைகளுள் இதுவும் ஒன்று. இதில் காதலுக்கும் காமத்​துக்​குமான உறவைத் தீவிரத் தொனியில் பேசியிருக்​கிறார். புஞ்சிகஸ்தலை பிரம்​மாவைத் தரிசிக்கச் சென்றுகொண்டிருக்​கிறார். ராவணன் இவரது அழகைக் கண்டு மயக்கம் கொள்கிறார். ஏற்கெனவே, ராவணன் பெற்றிருக்​கக்​கூடிய அசாதாரண வரங்கள் ஆணவத்தை உருவாக்கு​கின்றன. எந்தப் பெண்ணும் தன் விருப்​பத்​துக்குக் கட்டுப்​பட்டவள் என்பது ராவணன் எண்ணம். புஞ்சிகஸ்தலை தி.ஜா.வின் மொழியில் மேலும் அழகூட்​டப்​படு​கிறார். ‘உனக்குப் பிறகு பிரம்மா எந்த அழகையும் படைக்க​வில்​லையோ?’ என்கிறார் ராவணன். இந்தப் பேச்சு புஞ்சிகஸ்​தலை​யிடம் எடுபட​வில்லை. ராவணனின் உடல் காமத்தால் தீப்பற்றி எரிகிறது. பெண்களின் உடலை அடைவதற்​குரிய எளிய வழி, காதல்​தான். அந்தப் பாதையைத்தான் ராவணன் தேர்ந்​தெடுக்​கிறார். இந்தக் கதையைப் பொறுத்தவரை புஞ்சிகஸ்​தலைக்கு இன்னும் திருமணம் முடிய​வில்லை. ‘பார்த்த சில கணங்களில் எப்படிக் காதல் வந்து​விடு​கிறது?’ என்று ஆச்சரியப்​படு​கிறார் புஞ்சிகஸ்தலை. காதலுக்கு மனம் முக்கியமில்லை; ஒருவர் ஆணாகவும் மற்றொருவர் பெண்ணாகவும் இருக்க வேண்டும் என்கிற கள யதார்த்​தத்தைப் பேசுகிறார் ராவணன்​.

​காதலுக்கு எதிர்ப் பாலின உடல்தான் பிரதானம்; அறிமுகமும் நட்பும் காலமும் அவசியமில்லை என்பது ராவணனின் கருத்து. மூலப் பிரதியில் இவ்வளவு பெரிய உரையாடல் நடைபெற​வில்லை. ராவணன் மூலமாக தி.ஜா.தான் காதல் குறித்த புனிதப் போர்வையை விலக்கிப் பார்க்​கிறார். ஆண் - பெண் உறவின் அபத்தங்களை உடைத்துப் பேசியவர் தி.ஜானகிராமன்; காதலுக்குப் பின்னால் காமம் பல்லிளித்துக் கொண்டிருப்பதை அறியாதவரா தி.ஜா.? அக்காலத்​தில், முன்பின் அறிமுகம் இல்லாத தலைவனும் தலைவியும் இயற்கையாக ஓரிடத்தில் எதிர்​பாராத விதமாகச் சந்தித்துக் கூடி மகிழ்ந்ததை இயற்கைப் புணர்ச்சி என்றனர். இது தெய்வத்தால் நிகழ்​வ​தாகவே அவர்கள் நம்பினர். அதே இடத்தில் மறுநாளும் சந்தித்துக் கொள்வர். இதனை ‘இடந்​தலைப்​பாடு’ என்றனர். அவர்களது சந்திப்பில் உள்ளப் புணர்ச்சி, மெய்யுறு புணர்ச்சி என இரண்டுமே அடுத்​தடுத்து நிகழ்ந்துவிடுகிறது. ‘உள்ளப் புணர்ச்​சியும் மெய்யுறு புணர்ச்​சியும் / கள்ளப் புணர்ச்​சியுள் காதலர்க்கு உரிய’ (நம்பியகப்​பொருள்) என்று அன்றே இலக்கணம் எழுதி வைத்திருக்​கிறார்கள்.

தி.ஜானகிராமன்
தி.ஜானகிராமன்

பெண்ணுடலைப் பார்ப்​பதுதான் காதலின் முதல் படிநிலை. இதனைப் பழங்காலத்தில் ‘காட்சி’ என்றார்கள். தலைவியின் மெய் தொட்டுக் காதலைப் பயின்ற தலைவன், தலைவியின் மெய் பயிறக் கிடைக்​காதபோது தவித்துப் போனான். தோழியையும் பாங்கனையும் தேடி ஓடினான். தலைவி மீண்டும் புணர்ச்​சிக்கு உடன்படாதபோது மடலேறுவேன் என்று மிரட்டல் விடுத்​தான். எனவே, காமமும் சேர்ந்​ததுதான் காதல். ராவணன் இதனைத் தெளிவாகப் புரிந்து வைத்திருக்​கிறான். புஞ்சிகஸ்​தலைக்கு ராவணனால் சொல்லிப் புரிய​வைக்க இயலவில்லை. எனவே, அவனது வழக்கமான வழியைத் தேர்ந்​தெடுக்​கிறார். தி.ஜா. அந்தக் காட்சியை இப்படி எழுதுகிறார்: “அந்த வனப்புடல் எதிர்த்துப் போராடு​வதும் மழையையும் புயலை​யும்போல ஓர் அழகாகத்தான் பட்டது அவனுக்கு. தீயில் விழுந்​ததுபோல் துடித்​தாள். மூவுல​கையும் வென்ற வீரம் அவளை மிஞ்சி​விட்​டது.” இப்போது பிரச்சினை பிரம்​மா​விடம் செல்கிறது. இந்தப் பகுதி புனைவில் மிக முக்கிய​மானது. ‘தாங்கள் தேவதைகளை எதற்காகப் படைத்​தீர்​கள்?’ என்று கேட்கிறார் ராவணன். ‘தேவர்​களுக்காக மட்டும்; இத்தேவதைகள் அவர்கள் நல்வினைக்கான பரிசு’ என்பது பிரம்​மனின் வாதம். ராவணன் இதனைக் கடுமையாக எதிர்க்​கிறார். பாற்கடலைக் கடைந்தபோது அறுபதா​யிரம் அரம்பையர் தோன்றிய​தாகப் புராணங்கள் கூறுகின்றன. தேவர்களை மகிழ்​விப்​பதுதான் அவர்களது பிரதான தொழில். இதில் பிரம்மா தேவர்​களின் சார்பாக நின்று பேசுகிறார். ‘தேவலோகம் இதற்குத்​தானா? இதற்குத்தான் இவ்வளவு நல்லவர்களாக வேஷம் போடுகிறீர்​களா?’ என்பது ராவணனின் மனக்குரல்.

இந்த உரையாடலின் முடிவில், ‘இனி, எந்தப் பெண்ணை​யாவது - உன்னை விரும்பாத பெண்ணை - பலாத்​காரம் செய்யும் எண்ணத்​துடன் நீ தொட்டால், உன் தலை நூறு துண்டாக வெடித்து​விடும்’ என்ற சாபத்தை அளிக்​கிறார். இந்தச் சாபம்தான் ராவணனிட​மிருந்து சீதையைக் காப்பாற்றுகிறது. மீண்டும் புஞ்சிகஸ்​தலையைச் சந்திக்கிறார் ராவணன். காமத்​திற்குச் சாபம் தெரியாது. ராவணனின் கை நீளுகிறது. சாபம் நினைவுக்குவர கையை இழுத்துக்கொள்கிறார். ராவணனைப் பழிவாங்கி​விட்ட திருப்தி புஞ்சிகஸ்​தலைக்கு. ‘ராவணன் ​காதல்’ என்ற இப்பு​னைவை மேலோட்​ட​மாகப் பார்த்​தால், ராவணன் பெற்ற சாபத்தையே ​தி.ஜா. எழு​தி​யிருப்​ப​தாகத் தோன்​றும். ஆனால், இந்தச்​ சாபக் கதையை ​வைத்​துக்​கொண்டு அவர் நடத்​தி​யிருக்​கும்​ உரை​யாடல்​ ​காத்​திரமானது.

- உதவிப் பேராசிரியர்
தொடர்புக்கு ramesh5480@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in