Published : 21 May 2018 08:45 AM
Last Updated : 21 May 2018 08:45 AM

கதலித் தண்டுக்கு நாணும் கோடரி

‘சி

ல்வர்’ சீனிவாசன் என்கிற 84 வயது முதியவர் ஒருவர் அண்மையில் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். கைதுக்குக் காரணம் திருட்டு. ‘சில்வர்’ சீனிவாசன் என்ற பெயருக்குக் காரணம் அவர் வெள்ளி மட்டுமே திருடுவார் என்பது. திருட்டுக்குக் காரணம் வசதியான வாழ்க்கை என்ற எண்ணமில்லை; வயிறு. நான்கு இட்டிலிகள்– தயிர்ச் சோறு – நான்கு இட்டிலிகள்.

ஒருநாள் உணவை ஒழிஎன்றால் ஒழியாய்;

இருநாளைக்கு ஏல்என்றால் ஏலாய் - ஒருநாளும்

என்நோவு அறியாய்; இடும்பைகூர் என் வயிறே!

உன்னோடு வாழ்தல் அரிது.

ஔவை கிடக்கட்டும். வயிற்றுப் பாட்டுக்குத் திருடுவதுதான் தீர்வென்று வைத்துக் கொண்டாலும்கூட, ஐயாவு வெள்ளிதான் திருடுவாரோ? கணக்கிருக்கும்போலத் தெரிகிறது. திருடுகிற அளவுக்கு வெள்ளிப் பாத்திரங்களைப் புழக்கத்தில் வைத்திருக்கிறவர்கள் வயதானவர்கள்; மென்மையானவர்கள்; பாய்ந்து விட மாட்டார்கள். பிடிபட்டால் பார்த்துக்கொள்ளலாம். திருட்டில் அவருக்கு முறைமைகள் உண்டு. தங்கம் திருடுவதில்லை. திருடினாலும் அற்பமாகவே திருடுவார். ஏனெனில் தங்கம் ஒரு குடும்பத்தின் சேமிப்பு; ஒட்டுமொத்தமாகத் திருடினால் குடும்பம் அழித்துவிடும். வெள்ளி அப்படியல்ல. மொத்தமாகத் திருடினாலும் குடும்பம் தாங்கும். தன் சாதியினரிடம்தான் திருடுவார். திருட்டிலும்கூடவா சாதியுணர்ச்சி? கி.ரா.வின் நாட்டுப்புறக் கதை ஒன்று: கும்மிருட்டில் திருட வந்தவனை வீட்டுக்காரர் கண்டுபிடித்துவிட்டார். எப்படியாம்? வேற்றுக் ‘குசு’ வீச்சம் அடித்ததாம்.

சீனிவாசன் சாதி பார்த்ததற்குக் காரணம் பற்று அன்று; பழிவாங்கல். அதற் கொரு பின்கதை உண்டு: முதல்முறை பிடிபட்டபோது நாணினார். விடுதலை யான பிறகு தன் சாதியாரின் மடத்தை அணுகித் தன் குற்ற நடவடிக்கையை அறிக்கையிட்டு, ‘இனி நேர்மையாகவே வாழ விரும்புகிறேன்; வேலை தந்து ஆதரியுங்கள்’ என்றார். மடத் தலைவர் அவரை நாணங்கெடப் பேசி விரட்டிவிட் டார். சீனிவாசன் 14-லிருந்து 84 வரை 70 ஆண்டுகள் திருடிப் பிளாட்டின விழாத் திருடராக நிலைத்துவிட்டார். நாணம் நல்ல குணம். கோடரியுங்கூடக் கதலித் தண்டுக்கு நாணுமாம். எல்லோரிடத்திலும் இருக்கிற நாணம் சிலரிடத்தில் சிலைபோலத் துலங்கி நிற்கலாம்; சிலரிடத்தில் கல்போல இருண்டு கிடக்கலாம். இருண்டு கிடப்பதைச் செதுக்கிவிடும்போது துலங்கி வருவது தெய்வமாகவும்கூட ஆகலாம். செதுக்கத் தெரியாமல் கொத்திக்கொண்டே இருந்தால் கடவுளை வைத்திருக்கும் கல்லானாலும் சிதைந்து சல்லிக்கல் ஆகலாம். நாணம் மரத்துப் போகுமாறு பகடி செய்து மக்களை மக்கட் பதடியாக்குகிறவர்கள் அருள்கூர்க. @ மீம்சுகள் போடும் மாம்சுகள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x