

ஓவியக் கண்காட்சிகள் மட்டுமே இதுவரை நடந்து வந்த சென்னையில், அரசு சார்பில் முதன்முறையாக ஓவியச் சந்தை நடைபெற்றுள்ளது. ஆகஸ்ட் 3, 4, 5ஆகிய நாள்களுக்கு சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியக வளாகத்தில் இந்நிகழ்வு நடந்தது. கேன்வாஸ், அக்ரிலிக், வாட்டர் கலர், மணல் வகை ஓவியங்களுடன் பல வகையான சிற்பங்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. தமிழக அரசின் கலை, பண்பாட்டுத் துறை இந்நிகழ்வை ஒருங்கிணைத்தது. கலைஞர்கள் 100 பேர் பங்கேற்றனர்.
சென்னை கவின்கலைக் கல்லூரி மாணவர்களின் கைவண்ணத்தில் உருவான கலைப்பொருள்களை நிகழ்வில் அதிகளவில் காண முடிந்தது. சுடுமண் (டெரகோட்டா), பீங்கான் (செராமிக்) வகைக் கலைப்பொருள்கள் பல, அவர்களது திறனுக்குச் சான்று கூறின. “கைவிரல்களால் அழுத்தி அழுத்தி வடிவத்தை உருவாக்கும் ‘பிஞ்ச்’ முறை, பல பகுதிகளைத் தனித்தனியாகச் செய்து ஒரே உருவமாக இணைக்கும் ‘ஸ்லிப் காஸ்ட்டிங்’ முறை, சுருள் முறை, ஜப்பானியத் தேநீர்ச் சடங்குகளில் இடம்பெறும் ராக்கு மண் பாண்டத் தொழில்நுட்பம் போன்றவற்றில் கலைப் பொருள்களைச் செய்துள்ளோம். உருவத்தைச் செய்வது, சுடுவது உள்ளிட்ட அனைத்து வேலைகளையும் கல்லூரியிலேயே செய்தோம். 300 ரூபாயில்இருந்து பொருள்கள் உள்ளன. விற்பனைப் பொருள்கள் ஒவ்வொன்றிலும் ஒரே ஒரு மாதிரிதான் உள்ளது” என விற்பனைப் பொருள்களின் மதிப்பை உணர்த்துகிறார் செராமிக் பயிலும் மாணவர் யுகேஷ்வரன்.
மாணவரான கணேஷ், “மழைநீர் வடிகால் தோண்டும் வேலை கல்லூரி வளாகத்துக்குள் அண்மையில் நடைபெற்றது. அதில் கிடைத்த மண்ணில் செய்த கலைப்பொருள்களும் அரங்கில் இருப்பது கூடுதல் மகிழ்ச்சி அளிக்கிறது” என்கிறார். தன்னுடைய யதார்த்த பாணி ஓவியங்கள் வழியே ஒரு பெண்ணுலகத்தைப் படைத்தவர், மறைந்த கலைஞர் இளையராஜா. அவரது மனைவி பிரியாவும் ஓவியர்தான். இவர்களின் மகள் அபிநயா, தற்போது கவின்கலைக் கல்லூரியில் ஓவியப் பிரிவு மாணவி. இவ்விருவரின் படைப்புகளும் ஓர் அரங்கில் இடம்பெற்றிருந்தன. “பெண்கள் என்றாலே சிவப்பு நிறத்தில் இருக்க வேண்டும் என்கிற எண்ணம், ஓவியங்களிலும் தொடர்கிறது. அதற்கு மாறான நிறங்களில் பெண்களை வரைய எனக்குப் பிடித்திருக்கிறது. பனி மிகுந்த பகுதிகளில் குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே நிகழும் ‘நார்த்தர்ன் லைட்ஸ்’ போன்ற நிகழ்வுகளை நாம் நேரில் காண்பது அரிது. நம்மைப் பரவசம் கொள்ளச் செய்யும் அத்தகைய நிகழ்வுகளையும் வரைய விரும்புகிறேன்” என்கிறார் அபிநயா.
ஒடிஷாவில் உள்ள கொனார்க் சூரியக் கோயிலில் காணப்படும் சக்கரம் போன்றவற்றைச் சித்தரிக்கும் ஓவியங்கள் ஓர் அரங்கில் நிரம்பியிருந்தன. அவற்றை வரைந்த ரவி, கவின்கலைக் கல்லூரியின் முன்னாள் மாணவர். “சிற்பம்தான் என் துறை. சிரவண பெலகோலா, கஜோரா, ராணி கேவ்ஸ் போன்ற இடங்களில் உள்ள சிற்பங்கள் மீது பெரும் ஈர்ப்பு ஏற்பட்டது. அவற்றை நேரில் பார்க்காதவர்களுக்கு வரைந்து காட்ட வேண்டும் என்கிற உந்துதலில், ஓவியனாகிவிட்டேன்” என்கிறார் ரவி. சிற்பங்களில் உள்ள வெடிப்புக்கூட இவரது ஓவியங்களில் தவறவிடப்படுவதில்லை. சிற்பங்கள் தற்போது எப்படி இருக்கின்றன என்பதை இதன் மூலம் மக்களுக்குத் தெரியப்படுத்துகிறார் அவர்.
கொனார்க் சக்கர ஓவியத்தை வரைந்து முடிக்க அதிகபட்சம் 4 மாதங்கள் ஆகின்றன. இத்தகைய ஓவியங்களுக்கு ரூ.30 ஆயிரம் என விலை வைத்தாலும், மக்கள் அதன் நியாயத்தைப் புரிந்துகொள்வதுதான் ரவி போன்ற கலைஞர்களை வாழ வைக்கிறது. “ஒருமுறை வட இந்தியாவைச் சேர்ந்த ஒருவர், என் ஓவியம் ஒன்றை எப்படியோ அச்சடித்து விற்றுவிட்டார். ஒரிஜினல் ஓவியம் சென்னையில் உள்ள விற்பனைக் கூடம் ஒன்றில் பத்திரமாக இருந்தது. அந்த மோசடி நபர், இந்தத் தகவலைக் கூறி ஒரிஜினலையும் விலைக்குக் கேட்டார். சிலர் ஓவியத்தை என்னிடம் வாங்கி, எனக்குத் தெரியாமலேயே கூடுதல் விலைக்கு விற்பதும் உண்டு” என்கிறார் ரவி.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தைச் சேர்ந்த அமரவர்மா அங்கே ஓவியப் பள்ளி நடத்திவருகிறார். இவர் வரைந்திருந்த ஓவியங்கள் நிகழ்வில் பேசுபொருளாக அமைந்தன. மீன் விற்கும் ஒரு பெண்மணியைச் சித்தரிக்கும் அக்ரிலிக் ஓவியத்துக்கு இவர் வைத்துள்ள விலை ரூ.16 லட்சம். இதைச் சிலர் வாங்கவும் தயாராக உள்ளனர். எனினும் விலையைச் சற்றுக் குறைக்கும்படி பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது. “ஒளிப்படத்தை ஓவியம் என்று சொல்லி ஏமாற்றுவதாக நிகழ்வின்போது என் காதுபடவே சிலர் கூறினர். ‘இது கையால் வரையப்பட்டது’ என நான் எழுதிவைக்க வேண்டியிருந்தது. அக்ரிலிக் மீடியத்தில் வரைவது கடினமான வேலை. ஓவியத்தைப் பார்த்த பலர் என் கைக்கு முத்தம் கொடுத்துப் பாராட்டினர். ஒரு சதுர அடிக்கு இவ்வளவு என்பதுபோல கலைக்கு விலை வைக்க முடியாது. நான் விரும்பினால் இதை இலவசமாகக்கூடத் தருவேன். ஓவியர்களின் உழைப்புக்கும் திறமைக்கும் சமூகத்தில் ஒரு மதிப்பு இருக்க வேண்டும் என உணர்த்துவதற்காகவே இந்த விலையை நிர்ணயித்துள்ளேன்” என்கிறார் அமரவர்மா.
இந்நிகழ்வைத் தமிழ் வளர்ச்சி - செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கிவைத்தார். எந்தச் செலவும் இன்றி கலைஞர்கள் படைப்புகளைச் சந்தைப்படுத்த அரசு ஒரு களத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. எனினும் இந்த நிகழ்வு மக்களிடையே போதுமான கவனம் பெற்றிருந்தால், இன்னும் பயனுள்ளதாக இருந்திருக்கும்.
இது குறித்துக் கலை பண்பட்டுத் துறை தரப்பில் கேட்டபோது, “கலைஞர்களின் படைப்புகளை, மக்கள் நிரந்தரமாகப் பார்வையிட்டு வாங்க வசதியாக எங்கள் இணையதளத்தில் அவர்களின் தொடர்பு விவரங்களை அளிக்க உள்ளோம். கலைஞர்கள் இந்த நிகழ்வை நல்ல நடவடிக்கையாகவே கருதுகின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டது.
பெங்களூருவில் ஆண்டுதோறும் நடக்கும் ‘சித்திர சாந்தி’ என்கிற ஓவியச் சந்தை இந்திய அளவில் கவனிக்கப்படுகிறது. ஒரு நாள் நிகழ்வான இது ஏறக்குறைய 20 ஆண்டுகளாக நடத்தப்படுகிறது. இதுபோல் சென்னையில் நடத்தப்படும் சந்தையும் பிரசித்திபெற அரசும் கலை ஆர்வலர்களும் வருங்காலத்திலும் கைகோக்க வேண்டும்.