

இந்திய ஜனநாயகத்தின் சிற்பிகளில் முதன்மையானவரும் இந்திய அரசமைப்புச் சட்டத்தைத் தந்தவருமான டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் தன் வாழ்நாளில் பல லட்சம் பக்கங்களை எழுதியுள்ளார். ஆனால், அவர் எழுதியவற்றில் ஒரு பகுதி மட்டுமே நூல்களாகவும் இணையத்திலும் நமக்குக் கிடைக்கிறது. அவர் எழுதியவற்றில் பெரும்பகுதி முறையாகத் தொகுக்கப்படாமல் உள்ளது. இந்தக் குறையை நீக்கும் நோக்கத்துடன் ஆய்வாளரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளருமான கெளதம சன்னா ‘அம்பேத்கரியம் - புரட்சியாளர் அம்பேத்கரின் எழுத்துகள், பேச்சுகள், ஆவணங்கள்’ என்னும் தலைப்பில் 50 தொகுதிகளைத் தொகுத்துள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனின் 60ஆம் பிறந்தநாளை ஒட்டி, ‘கனவுத் திட்ட’மாகத் தொடங்கப்பட்ட இந்தப் பணியை இரண்டரை ஆண்டுகளில் முடித்திருக்கிறார். ஜெய்பீம் ஃபவுண்டேஷன் வெளியிடும் 22,630 பக்கங்கள் கொண்ட இந்த நூல் தொகுப்பு குறித்து கெளதம சன்னாவிடம் பேசியதில் இருந்து:
‘அம்பேத்கரியம்’ என்னும் இவ்வளவு பெரிய தொகுப்புக்கான எண்ணம் எப்படி உருவெடுத்தது?
அம்பேத்கர் வாழும் காலத்திலேயே நிறையப் புத்தகங்களை எழுதி வெளியிட்டார். அதையும் தாண்டி, அவர் பெரிய நூல் தொகுப்புத் திட்டங்களை வைத்திருந்தார். அவற்றுக்கான கட்டுரைகளையும் உள்ளடக்கக் குறிப்புகளையும் (synopsis) எழுதிவைத்திருந்தார். ஆனால், 1956இல் அம்பேத்கர் மரணம் அடைந்துவிட்டதால், அந்தத் திட்டங்கள் எதுவுமே நிறைவேறவில்லை. அவருக்குப் பின் அந்தக் கட்டுரைகள், குறிப்புகள் எல்லாமே சிதறிப் போய்விட்டன. மேலும், அவர் இறப்புக்குப் பிறகு ஏற்பட்ட சில சட்டச் சிக்கல்களால் அந்தக் கட்டுரைகளை வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. பகவான் தாஸ் என்பவர் ஆதார நூல்களாக நான்கு தொகுதிகளைக் கொண்டுவந்தார். மகாராஷ்டிர அரசு, வசந்த் மூன் தலைமையில் ஒரு குழுவை அமைத்து, அந்தப் பணியைத் தொடர்ந்தது. அவர்கள் ஒன்றிரண்டு தொகுதிகளைக் கொண்டுவந்தனர்.
வி.பி.சிங் பிரதமரான பிறகு 1990களில் இந்தத் திட்டம் மீண்டும் உயிர்பெற்றது. டாக்டர் அம்பேத்கர் அறக்கட்டளை தொடங்கப்பட்டு, அதன் தலைவராக வசந்த் மூன் நியமிக்கப்பட்டார். அவர் விறுவிறுவென்று அம்பேத்கர் நூல்களைத் தொகுத்தார். வி.பி.சிங் அரசு கவிழ்ந்த பிறகு, இந்தப் பணிக்கான நிதி ஒதுக்கீடு குறையத் தொடங்கியது. வசந்த் மூன் இறக்கும் வரை அம்பேத்கர் நூல்களைத் தொகுக்கும் பணிக்கு அவர்தான் தலைவராகச் செயல்பட வேண்டும் என்று கே.ஆர்.நாராயணன் குடியரசுத் தலைவராக இருந்தபோது உத்தரவு பிறப்பித்தார். அதற்குப் பிறகு, இந்தப் பணி சற்றுத் துரிதமடைந்தது. வசந்த மூன் இறப்பதற்குள் 19 தொகுதிகள் கொண்டுவரப்பட்டன. அதற்குப் பின் நிதிப் பற்றாக்குறையைக் காரணம் காட்டி, இந்தத் திட்டத்தை மத்திய அரசு மீண்டும் கைவிட்டுவிட்டது. மீண்டும் மகாராஷ்டிர அரசு நரே என்பவரின் தலைமையில் ஒரு குழுவை அமைத்து மேலும் இரண்டு தொகுதிகளைக் கொண்டுவந்தது.
அம்பேத்கர் அறக்கட்டளை மூலமாக இவற்றில் 17 தொகுதிகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டன. தமிழ் நூல்கள் 37 தொகுதிகளாக உள்ளன. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம், இந்த நூல்களைத் தொகுக்கும் பணி எந்த நிலையில் உள்ளது என்று அம்பேத்கர் அறக்கட்டளையிடம் கேள்வி எழுப்பினேன். நிதி இல்லாததால் இந்தப் பணி நிறுத்தப்பட்டிருப்பதாகப் பதில் வந்தது. இதனால்தான் அம்பேத்கர் எழுதியவற்றை முழுமையாகத் தொகுக்கும் பணியைக் கையில் எடுக்க முடிவுசெய்தேன்.
இந்தத் தொகுப்புப் பணியில் நீங்கள் பின்பற்றிய அணுகுமுறை என்ன?
அம்பேத்கர் நூல்களை நிறையப் படித்திருந்தாலும் அவர் ஒரு கருப்பொருள் குறித்துப் பேசியவற்றை முழுமையாக உள்வாங்கிக்கொள்ளத் தேவையான தொடர்பைக் (link) கண்டறிய வேண்டியிருந்தது. அம்பேத்கரியத்துக்கு என்று ஒரு சிந்தனை முறை உள்ளது. அம்பேத்கர் எப்படி ஒரு கருதுகோளை உருவாக்கிக்கொள்கிறார்... அதை எப்படி எல்லாம் நாம் நீட்டிக்க முடியும் என்று யோசித்தேன். இந்தப் பார்வையுடன் அம்பேத்கரின் நூல்கள் அனைத்தையும் படித்துப் பார்த்து, அந்தத் தொடர்புகளை நான் கண்டுபிடித்தேன். உதாரணமாக, சாதி குறித்த முதல் கட்டுரையை அம்பேத்கர் 1917இல் எழுதினார். அதில் சாதியின் தோற்றம், சாதி எப்படி இயங்குகிறது ஆகியவற்றைப் பற்றித்தான் பேசுகிறார். ஆனால், சாதி எப்படித் தோன்றியது என்பதைத் தொடர் ஆய்வின் மூலம் 20 ஆண்டுகளுக்குப் பிறகுதான் கண்டறிந்தார். சாதி எப்படித் தோன்றியது என்று வேறொரு நூலில் எழுதும்போது அது தொடர்பாக 1917இல் எழுதிய கட்டுரையைப் பார்க்கச் சொல்லி ஓர் அடிக்குறிப்பைக் கொடுத்துள்ளார். அம்பேத்கர் சாதி பற்றி வெவ்வேறு காலக்கட்டத்தில் எழுதிய கருத்துகள் பலவும் வெவ்வேறு தொகுதிகளில் சிதறிக் கிடக்கின்றன. ‘அம்பேத்கரியம்’ தொகுப்பில் அம்பேத்கர் சாதி குறித்துப் பேசிய அனைத்தும் ஒரே நூலில் இருக்கும். இந்தியாவில் சாதியைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கான கையேடாக (Ready reckoner) அந்நூல் இருக்கும். இப்படி இருக்கும்போது ஒவ்வொன்றைப் பற்றியும் அம்பேத்கர் எழுதியவற்றின் முழுப் பரிமாணத்தை வாசகர் உள்வாங்கிக்கொள்ள முடியும்.
அரசியல் பொருளாதாரம் சார்ந்த சிந்தனைகள் பல இடங்களில் சிதறிக் கிடந்தன. அவை மட்டும் தனியாகத் தொகுக்கப்பட்டு, இந்தத் தொகுப்பில் நான்கு தொகுதிகளாக இணைக்கப்பட்டுள்ளன. சட்டம் சம்பந்தமாக அம்பேத்கர் எழுதியவை தனியாகத் தொகுக்கப்பட்டுள்ளன. இதைச் சட்ட மாணவர்களுக்கான பாடநூலாக வைக்கலாம். அரசமைப்புச் சட்டத்துக்கான அவருடைய பங்களிப்பு, இந்தியத் தொழில்துறைக்கும் தொழில்நுட்பரீதியாக இந்தியா வளர்ச்சி அடைந்ததற்கும் அம்பேத்கர் ஆற்றிய பங்களிப்புகள் ஆகியவை குறித்த நூல்கள் இடம்பெற்றுள்ளன. இப்படியாகக் கருப்பொருள் வாரியாகப் பிரித்து, அம்பேத்கரின் சிந்தனை முறையை அடியொற்றி 50 நூல்களைக் கொண்ட இந்தத் தொகுப்பை உருவாக்கியுள்ளேன். இந்தத் தொகுதியில் அம்பேத்கரின் இதுவரை வெளிவராத கடிதங்களும் ஆவணங்களும் தொகுக்கப்பட்டுள்ளன. பிரிட்டிஷ் ஆவணக் காப்பகம், பிரிட்டிஷ் நாடாளுமன்றம், ஆஸ்திரேலிய நாடாளுமன்றம், கனேடிய நாடாளுமன்றம் ஆகியவற்றின் நூலகங்களிலிருந்து அவற்றைப் பெற்று இந்தத் தொகுப்பில் இணைத்துள்ளேன்.
இந்தப் பணியில் நீங்கள் எதிர்கொண்ட சவால்கள்?
கடந்த இரண்டரை ஆண்டுகளில் இந்த நூல் தொகுப்புக்கு மட்டுமே என் முழு நேரத்தை ஒதுக்கினேன். காலை ஆறு மணிக்குத் தொடங்கினால், இரவு இரண்டு மணிவரை ஆகிவிடும். நூல்களை வாசிப்பது, தட்டச்சு செய்து வந்த நூல்களைப் பிழைதிருத்தி, லேஅவுட்டுக்கு அனுப்பி, மொழிபெயர்ப்புகளை மூலநூலுடன் ஒப்பிட்டுச் சரிபார்ப்பது எனப் பல பணிகள். சில இடங்களில் மொழிபெயர்ப்பில் வடமொழிச் சொற்களை நீக்கி தமிழ்ச் சொற்களைச் சேர்த்துள்ளேன். சில பகுதிகள் பொருத்தமற்ற மொழிபெயர்ப்பாக இருந்ததால் ஒட்டுமொத்தமாக மீண்டும் மொழிபெயர்க்க வேண்டியிருந்தது.
அம்பேத்கரின் நீண்ட பொதுவாழ்க்கையில் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் அவருடைய அரசியல் சிந்தனை மாறுகிறது. ஆனால், அவருடைய அடிப்படை லட்சியத்தை 1917இலேயே முடிவுசெய்துவிடுகிறார். அது இறுதிவரை மாறவில்லை. அந்தக் கொள்கைக்கு ஏற்பத் தனது சிந்தனையை மாற்றிக்கொண்டே வருகிறார். அந்த லட்சியத்தை நிறைவேற்றுவதற்கான பணியைத் தொடர்ந்து செய்துகொண்டிருந்தார். அவருடைய பணிகளின் வரிசை, சிந்தனை, திட்டங்கள், நோக்கம், லட்சியம் எதுவும் மாறிவிடாமல் பார்த்துக்கொள்வது பெரிய சவாலாக இருந்தது.
அதோடு, காங்கிரஸ் கட்சியின் வரலாறு காந்தி, நேரு போன்ற சமகாலத் தலைவர்களின் செயல்பாடுகள், அம்பேத்கரின் சமகால தலித் இயக்கங்கள் அவருடன் எப்படி இணங்கியும் முரண்பட்டும் செயல்பட்டார்கள் என்பதை எல்லாம் ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டியிருந்தது. அம்பேத்கர் என்னும் பிரம்மாண்டத் தலைவரைப் பரந்துபட்ட அறிவு இல்லாமல் தொட முடியாது. 20 ஆண்டுகளாக இந்தத் தளத்தில் நான் பணியாற்றிவருவதால் அதன் உச்சமாக இந்தப் பணியை நிறைவேற்ற முடிந்தது.
இந்த நூல் தொகுப்பை மக்களிடம் கொண்டுசெல்வதற்கான திட்டங்கள்?
கிராமந்தோறும் இந்தத் தொகுப்பைக் கொண்டுசெல்வதுதான் எங்கள் முதல் நோக்கமாக இருந்தது. தமிழ்நாட்டின் அனைத்துக் கிராமங்களிலும் அம்பேத்கர் படிப்பகங்களை உருவாக்கி, அவற்றில் இந்தத் தொகுப்பை வைக்க வேண்டும் என்று திட்டமிட்டோம். இதன்படி ஏற்கெனவே உள்ள அம்பேத்கர் படிப்பகங்களைத் தாண்டி நிறைய கிராமங்களில் புதிதாக அம்பேத்கர் படிப்பகங்களை அமைத்துள்ளோம். பலர் நன்கொடை அளித்துள்ளதால், 500 கிராமங்களில் உள்ள அம்பேத்கர் படிப்பகங்களில் இந்த நூல் தொகுப்பு சென்று சேர்ந்துவிடும். 6,000 படிப்பகங்களில் இந்தத் தொகுப்பைக் கொண்டுசேர்க்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துள்ளோம். இந்தத் தொகுப்பின் விலை ரூ.24,000. அனைவருக்கும் 50% கழிவு விலையில் (ரூ.12,000க்கு) கொடுக்கவிருக்கிறோம்.
‘அம்பேத்கரியம் - புரட்சியாளர் அம்பேத்கரின் எழுத்துகள், பேச்சுகள், ஆவணங்கள்’ (50 நூல்கள்)
ஜெய்பீம் ஃபவுண்டேஷன்
முன்பதிவுக்கு: 80723 84874