ஃபிரான்ஸ் காஃப்கா நினைவு நூற்றாண்டு: காஃப்காவின் சுழலும் தலை

ஃபிரான்ஸ் காஃப்கா நினைவு நூற்றாண்டு: காஃப்காவின் சுழலும் தலை
Updated on
3 min read

ஃபிரான்ஸ் காஃப்கா மறைந்து நூறு ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு உலகெங்​கும் சிறப்​புக் கண்காட்​சிகள், ஆவணப்​படங்​களின் திரையிடல், ஆய்வரங்​குகள், சொற்பொழிவுகள்​ நடைபெற்​று​வரு​கின்றன. சென்னை​யில் ஜெர்மன்​ பண்பாட்டு மையமான கதே நிறுவனம் நடத்திய நிகழ்வில் கலந்து​கொண்டு காஃப்கா பற்றி உரையாற்றினேன்.

காஃப்கா நினைவாக பிராக் நகரின் மையத்​தில் அவரது தலை மிகப்​பெரிய கண்ணாடிச் சிற்பமாக உருவாக்​கப்​பட்டுள்ளது. 2014இல் டேவிட் செர்னியால் உருவாக்​கப்பட்ட இந்தத்​ தலை சுழலக்​கூடியது. இதன் மூலம் காஃப்​கா​வின் முகம் மாறிக்​கொண்டே இருக்​கிறது. இது ஒரு குறியீடு.

காஃப்காவை வாசிக்​கும் ஒவ்வொரு​வரும் தன்னைக் காஃப்​காவாகவே உணர்கிறார்​கள். தந்தையின் அதிகாரத்தை வெறுக்கிற மகனாக, குழப்​பமடைந்த காதலனாக, அன்றாட வாழ்க்​கை​யில் பொருந்த முடியாமல் போன இளைஞனாக, அதிகாரத்​தால் துரத்​தப்​படும் மனிதனாக என காஃப்கா என்பது ஓர் அடையாளம். எழுத்​தால் மட்டுமே மீட்சி அளிக்க முடியும் என நம்பும் கலைஞனாக காஃப்கா வாழ்ந்​திருக்​கிறார். காஃப்​கா​வின் ஆசைகள். கனவுகள், ஏமாற்​றங்​கள், குழப்​பங்கள்​ யாவும் நமக்குள்​ளும் இருக்​கின்றன. இந்தியக்​ குடும்​பங்​களில் ஒரு காஃப்கா உருவாவது இயல்பானதே.

அவரது புகழ்​பெற்ற ‘உருமாற்​றம்’ சிறுகதையில், விற்பனைப் பிரதிநிதியான கிரிகோர் சாம்சா காலை எழுந்​தவுடன் கரப்பான்​பூச்​சியாக மாறிவிடு​கிறான். அவனது பிரச்சினை கரப்பான் பூச்சியாக உருமாறியதல்ல. எப்படி வேலைக்​குப் போவது, எப்படி ரயிலைப் பிடிப்பது என்பதே. அன்றாடத்​தால் துரத்​தப்​படு​கிறவர்கள்​ தன்னைக் கரப்பான்​பூச்​சி​யாகக் கருதுவது புரிந்து​கொள்​ளக்​கூடியதே.

கிரிகோர் சாம்சா மட்டுமில்லை. காஃப்​கா​வின் கதைகளில் வரும் முக்கியக் கதாபாத்​திரங்கள்​ யாவரும் எதிர்​பாராமையின் சுழலில் சிக்கிக்​கொண்​ட​வர்களே. கிரிகோர் சாம்சா உடலளவில் கரப்பான்​பூச்​சியாக மாறியிருக்​கிறான். ஆனால், மனித மனத்தையே கொண்டிருக்​கிறான். இந்தத்​ தத்தளிப்பு நவீன மனிதனுக்​குரியது. காஃப்​காவைக் கனவுகளே வழிநடத்து​கின்றன. ‘உருமாற்​றம்’ கதையில்​கூடக் கனவுகள்​ குறுக்​கிட்ட தூக்கமற்ற இரவிலிருந்து கிரிகோர் சாம்சா விழித்​தெழுகிறான். துர்க்​க​னவில் சிக்கிக் கொண்டதுபோல, அவனது நிஜ வாழ்க்கை மாறிவிடு​கிறது. உலகை விடவும் வீடு பாதுகாப்​பானது என்று கிரிகோர் சாம்சா நினைக்​கிறான். கரப்பான்​பூச்​சியாக மாறிவிட்டாலும் அன்னை பரிவோடு உணவளித்து அவனைப் பராமரிக்​கிறாள். சகோதரி பாசத்​துடன் நடந்து​கொள்​கிறாள். ஆனால், சம்பாதிக்க வழியற்​றுப் போய்விட்ட மகனைத் தந்தைக்​குத்​தான் பிடிக்​க​வில்லை. அவன் மீது கோபம் கொள்கிறார்; வெறுக்​கிறார்.

தன்னைப் புரிந்து​கொள்ளாத தந்தையின் மீது கோபமும் கசப்புணர்​வும் கொண்ட​வ​ராகவே காஃப்கா இருந்​தார். அது அவரது படைப்​பு​களில் தொடர்ந்து வெளிப்​படு​கிறது. புதுமைப்​பித்​தன், க.நா.சு., மௌனி எனத் தமிழ் இலக்கியத்​தின் முன்னோடி எழுத்​தாளர்கள்​ 1940களிலே காஃப்காவை வாசித்​திருக்​கிறார்​கள்; கொண்டாடி​யிருக்​கிறார்​கள். இவர்களுக்கு காஃப்கா பிடித்​துப்​போனதற்கு முக்கியக் காரணம், அவரும் தங்களைப் போலவே தந்தையைப் பிடிக்காத மகன் என்பதே.

1919இல் காஃப்கா தன் அப்பாவிற்கு ஒரு கடிதம் எழுதி​யிருக்​கிறார். இந்தக்​ கடிதத்தை எழுதி​யபோது அவரது வயது 36. தான் எழுதிய கடிதத்தை அப்பாவிடம் நேரில் கொடுக்​க​வில்லை. அம்மாவிடம் கொடுத்து ஒப்படைக்கச்​ சொல்லியிருக்​கிறார். ஆனால், காஃப்​கா​வின் அம்மா அந்தக்​ கடிதத்தை அப்பாவிடம் தரவில்லை. அந்தக்​ கடிதம் தந்தையின் அதிகாரத்​தைக் கேள்வி கேட்கும் மகனின் குரலாக ஒலிக்​கிறது. கசப்பேறிய பால்யத்​தின் உணர்வு​களைக் காஃப்கா துல்லியமாக எழுதி​யிருக்​கிறார்.

ஆம்பூரில் ஒரு காஃப்கா ரசிகர்!

ஆம்பூரைச் சேர்ந்த அசோகன், காஃப்காவின் தீவிர வாசகர். காஃப்காவின் எல்லாப் படைப்புகளையும் வாசித்தவர். காஃப்கா பிறந்த செக் தலைநகரான பிராக்கில் நடைபெற்றுவரும் காஃப்காவின் நூற்றாண்டுக் கொண்டாட்டத்தைப் பார்க்க அங்கு சென்றுள்ளார். அந்த நகரமே விழாக் கோலம் பூண்டுள்ளது போன்ற அவர் எடுத்த ஒளிப்படங்கள் சிலவற்றை மொழிபெயர்ப்பாளர் ஜி.குப்புசாமி இணையத்தில் பகிர்ந்திருந்தார். அவர் எடுத்த சில படங்கள் இதில் பகிரப்பட்டுள்ளன.

காஃப்​கா​வின் சிறுகதைகள் விநோத​மானவை. குறிப்பாக, அவர் எழுதும் கருப்​பொருட்களை இன்னொருவர்​ நினைத்​துக்​கூடப் பார்க்க முடியாது. ‘பட்டினிக் கலைஞன்’ கதையில் ஒருவன்​ பட்டினி கிடப்​ப​தைக் காட்சிப்​பொருளாக மாற்றி, அதில் கிடைக்​கும் வருவாயைக் கொண்டு வாழ முற்படு​கிறான். அவரது குறுங்கதை ஒன்றில் குளிர்​தாங்க முடியாமல் கணப்பு அடுப்​பிற்கான நிலக்கரி கேட்டு வரும் ஏழை அவமானப்​படுத்​தப்​படு​கிறான். அந்த அவமானத்​தைத் தாங்க முடியாமல் வாளியோடு வானில் பறந்து​விடு​கிறான். இன்னொரு கதையில் நாய் தன்னை மனிதர்கள்​ நேசிப்​ப​தற்கான காரணத்​தைச் சந்தேகம் கொள்கிறது. தனது இனத்தின் வரலாற்றை விசாரணை செய்கிறது. பசித்த வேளையில் ஏன் நாய் வானை நோக்கிச் சப்தம்​ எழுப்​பு​கிறது. அது பூமியை நோக்கி அல்லவா குரைக்க வேண்டும் என்று யோசிக்​கிறது.

காஃப்கா நிறையக் கடிதங்கள்​ எழுதி​யிருக்​கிறார். அவரது காதலி மெலினா, ஃபெலிஸ் பாவர் ஆகியோ​ருக்கு எழுதிய கடிதங்கள்​ தனித் தொகுப்பாக வெளிவந்துள்ளன. இதுபோலவே காஃப்​கா​வின் டயரியும், அவரது குறிப்​பேடும் தனி நூலாக வெளியாகி​யுள்ளன. நாட்குறிப்​புகள்​ காஃப்​கா​வின் எழுத்​தைப் புரிந்து​கொள்​வதற்கான வரைபடமாக மட்டுமின்றி, அவரது அகவுல​கின் சலனங்​கள், எழுத்துலக ஆசைகளின் ஆவணமாகவும் வெளிப்​படு​கின்றன.

காஃப்கா இறக்கும்போது அவரது முக்கிய நாவல் எதுவும் அச்சில் வெளியாகியிருக்​க​வில்லை. அவர் தனது அத்தனை படைப்​பு​களை​யும் எரித்​து​விடும்படி நண்பன்​ மாக்ஸ் பிராட்டிடம் சொல்லியிருந்​தார். மாக்ஸ் பிராட் அவரது கையெழுத்​துப் பிரதிகளை முறையாகத் திருத்​திப் பதிப்​பித்து, காஃப்​கா​விற்கு அழியாப் புகழை உருவாக்​கினார். காஃப்​கா​விற்கு மிகவும் பிடித்​தமான எழுத்​தாளர் பியோதர் தஸ்தாயெவ்​ஸ்கி. தஸ்தாயெவ்​ஸ்கியின் கதாநாயக​னைப் போலவே காஃப்கா வாழ்ந்​திருக்​கிறார். டிக்கன்ஸ், கதே இருவரை​யும் மிகவும் விரும்பி வாசித்​திருக்​கிறார்.

காஃப்​கா​வின் வாழ்க்கை வரலாற்றை மூன்று தொகுதிகள்​ கொண்ட விரிவான நூலாக ரெய்னர்​ ஸ்டாச் எழுதி​யிருக்​கிறார். காசநோய் பாதிப்​பின் காரணமாகத் தனது நாற்ப​தாவது வயதில் காஃப்கா இறந்து போனார். ஆண்டன்​ செகாவ், ஜான் கீட்ஸ், ஷெல்லி, ஸ்டீவன்​சன், ஹென்றி டேவிட் தாரோ, எமிலி ப்ராண்டே எனக் காசநோய்க்​குப் பலியான எழுத்​தாளர்​களின் எண்ணிக்கை அதிகம். காசநோய் சிகிச்சை மையத்​தைப் பற்றிய தாமஸ் மானின் ‘தி மேஜிக் மவுண்​டன்’ நாவலைப் படித்​துப் பாருங்​கள். நோயின் பாதிப்பு எப்படிப் பரவியிருந்தது என்ப​தைப் புரிந்து​கொள்​ளலாம்.

காஃப்​கா​வின் அகப்பிரச்​சினைகள், அவர் எதிர்​கொண்ட சமூக, குடும்ப நெருக்​கடிகள், உறவுச்​சிக்​கல்​கள், மனக்குழப்​பங்கள்​ எவையும் இன்றைக்​கும் மாறிவிட​வில்லை. அவரது ‘விசாரணை’ நாவலில் யாரோ சொன்ன பொய்க்காக ஜோசப் கே கைது செய்யப்​படு​கிறான். முடிவற்ற விசாரணை​யால் அலைக்​கழிக்​கப்​படு​கிறான். பொய்க் குற்றசாட்டிற்கு உள்ளாகும் மனிதன் இருக்​கும் வரை காஃப்​கா​வும் இருப்​பார்.

அதிகாரம், நீதி, குடும்​பத்​தின் கட்டுப்​பாடுகள், கல்​வியின் போதாமை, சமூக, பண்​பாட்டுத் தளங்​களில் காணப்​படும் போலித்​தனம் குறித்த சிந்​தனைகள், கலை​யை... கலைஞனைப் புரிந்து​கொள்ளாத சமூகத்​தின் மீதான கோபம் என காஃப்​கா​வின் எழுத்​துகளில் வெளிப்​படும் உண்மையே அவரை இன்​றும் கொண்டாட வைக்​கிறது. நமக்கு நெருக்​க​மாக்​கு​கிறது.

- எழுத்தாளர்
தொடர்புக்கு: writerramki@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in