Last Updated : 25 May, 2018 08:50 AM

 

Published : 25 May 2018 08:50 AM
Last Updated : 25 May 2018 08:50 AM

ராஜதானி எக்ஸ்பிரஸ்: அதிகாரிகளை வறுக்கும் விஜயன்

கேரளத்தில் சொந்த வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டித் தரும் திட்டத்தில் பெரும் ஆர்வத்தோடு இருக்கிறார் முதல்வர் பினராயி விஜயன். ரூ.30,000 கோடி மதிப்பிலானது இத்திட்டம். தன்னுடைய கனவுத் திட்டமான இது, அதிகாரிகளால் தேவையே இல்லாமல் இழுத்தடிக்கப் படுவது விஜயனைக் கடுமையான கோபத்தில் தள்ளி யிருக்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி தலைமைச் செயலரிடம் பொரிந்து தள்ளிவிட்டாராம் விஜயன். இத்திட்டத்தின் நிர்வாக அதிகாரி அடீலா அப்துல்லா ஒரு மாத விடுப்பில் போயிருக்கிறார். நிறைய மாற்றம் இருக்கும் என்கிறார்கள்.

தாராவியின் தரம் உயருமா?

ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதி என்று அறியப்படும் தாராவியை சீரமைக்க முடிவுசெய்துள்ளது மகாராஷ்டிர அரசாங்கம். மாநிலத்தின் தலைநகர் மும்பையில் உள்ள தாராவி, தமிழர்கள் அதிகம் வாழும் பகுதி. 1980-களிலிருந்து ஒவ்வொரு அரசும் இந்தப் பகுதியைச் சீரமைக்கும் திட்டங்களை அறிவித்தாலும் அவை எதுவும் நடைமுறைக்கு வந்ததில்லை. கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும் இதற்கான முயற்சிகளைத் தொடங்கி பின் கைவிட்டது. ஆனால் 2011-க்குப் பிறகு உருவான குடிசைப் பகுதிகளை மேம்படுத்த ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள தேவேந்திர ஃபட்னா விஸ் தலைமையிலான பாஜக அரசு இந்தத் திட்டத்தின் மூலம் தாராவியைச் சீரமைத்தே தீருவது என்பதில் உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது. இதன் மூலம் 2019 சட்டசபை, மக்களவைத் தேர்தல்களில் பாஜகவுக்கு குடிசைப் பகுதி மக்களின் வாக்குகள் குவிய வேண்டும் என்பதே கட்சியின் இலக்கு.

பாஜகவின் காப்பு வியூகம்

ஆந்திரத்தில் தன்னுடைய மாநிலத் தலைவராக கன்னா லட்சுமிநாராயணாவை நியமித்திருக்கிறது பாஜக. காப்பு சமூகத்தைச் சேர்ந்த இவர். ஆந்திரத்தின் செல்வாக்கான சாதிகளில் ஒன்றான இதற்கு 27 % ஓட்டுகள் இருப்பதாக ஒரு கணக்கு சொல்கிறது. ஒய்எஸ்ஆர் காலத்தில் அவருடைய வலது கையாக இருந்தவர் இவர். பாஜக கொஞ்சம் கொஞ்சமாக ஜகன்மோகன் ரெட்டியை நெருங்குகிறது என்பதற்கும் இது சமிக்ஞை என்கிறார்கள்.

சிரிக்க மறுத்த லாலு!

சிறு இடைவெளிக்குப் பின் பிஹார் முதல்வர் நிதீஷ் குமாரும், அவருடைய பழைய சகா லாலுவும் சந்தித்தனர். லாலு மகன் தேஜ் பிரதாப்பின் திருமண வரவேற்பின்போது லாலுவின் இரு கைகளையும் பற்றியவாறு சிரித்தார் அங்கு வந்த நிதீஷ். லாலு எங்கோ வெறித்தபடி நின்றார். சிறைத் தண்டனையிலிருக்கும் லாலு சிகிச்சைக்காக பெயிலில் வந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- கோபால்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x