Last Updated : 15 Apr, 2018 10:58 AM

 

Published : 15 Apr 2018 10:58 AM
Last Updated : 15 Apr 2018 10:58 AM

புறக்கணிக்கப்படும் ஜீவனின் துயரார்ந்த கூக்குரல்: மூன்றாம் பாலினத்தவர் குறித்த சித்தரிப்புகளில் மாற்றம் வேண்டும்

தி

ருநங்கைகள் குறித்த இரு எதிரெதிர் துருவங்களினாலான சிந்தனைகளே நம்மிடமிருக்கின்றன. ஒரு சாரார் அவர்களைக் கண்டு அஞ்சுவதாகவும் மற்றொரு சாரார் அவர்களிடத்தே பரிதாபப்படுபவர்களாகவும். ஒருபுறம் சமூகத்திலிருந்து விலக்கிவைக்கப்பட வேண்டியர்கள் என்பதாகவும் இன்னொருபுறம் அவர்களும் நம்மைப் போல உணர்ச்சியுள்ள ஜீவன்கள் என்பதாகவும். இந்த இரு எண்ணங்களுமே மூன்றாம் பாலினத்தவரை அவர்கள் வேறொரு வஸ்து என்று பார்ப்பதுபோலதான் - இந்த இரண்டுமே அவர்களின் விருப்பத்துக்கு எதிரானதாகவே இருக்க முடியும்!

சு.வேணுகோபால் ஒரு சார்புநிலை எடுக்கிறார். அது, மூன்றாம் பாலினத்தவரின் மீது அன்பைப் பொழிவதாக, அனுதாபப்படுவதாக, இரக்கம் காட்டுவதாக இருக்கிறது. அதை வலியுறுத்துவதற்காக அதற்கு எதிர் நிலையிலிருக்கும் பாத்திரங்களை வார்க்கிறார். ஒவ்வொரு கதாப்பாத்திரமும் கிட்ணனுக்கு எதிராகச் செயல்படும்போது, ‘இல்லை இல்லை அது அப்படி அல்ல’ என்று சொல்வதாக கிட்ணனின் குரலும், கதைசொல்லியின் குரலும், ஆங்காங்கே சு.வேணுகோபாலின் குரலும் ஒலிக்கிறது.

பால்கனிகள் நாவலானது கறுப்பு அல்லது வெள்ளை என்ற படைப்புத்தளத்தில் இயங்குகிறது. இங்கு கிட்ணனனை - கிட்ணன் போன்றவர்களை - நல்லவனாகச் சித்திரப்பதற்கே நாவல் முற்படுகிறது. கிட்ணனிடமிருக்கும் குறைகளை, பிழைகளைச் சுட்டிக்காட்டுவதற்கான தடயங்கள் நாவலில் இருந்தபோதும் அது கிட்ணனின் பக்கம் தன்னைச் சாய்த்துக்கொள்கிறது. கிட்ணனின் மீது சுதாகருக்கு இருக்கும் கோபத்தில் அவன் பக்க நியாயங்கள் இருக்கவே செய்கின்றன.

திவ்யா தங்கியிருக்கும் அறையைக் கிட்ணன் சிலாகிப்பது, தனது நண்பனின் மடியில் அமர்ந்திருப்பது, கிட்ணனைக் கணேசன் பாலியல் தொல்லைக்கு உட்படுத்துவது என இன்னொரு பக்கத்தை ஓரிரு வரிகளில் கடந்துசெல்கிறார். கிட்ணனின் தாயார் அவனை மகளாக ஏற்றுக்கொள்கிறார், திவ்யாவுக்கு இருக்கும் தயக்கம் அவளைக் குற்றஉணர்ச்சிக்கு உள்ளாக்குகிறது, திவ்யாவின் தோழிக்குக் கரிசனம் ஏற்படுகிறது, ஒவ்வொரு சச்சரவின்போதும் பெண்களே ஆதரவாக இருக்கிறார்கள். இது குடும்பத்தில் மட்டுமே. ஆண்கள் பெண்கள் என சமூகத்தில் எல்லோரும் ஒரே மாதிரியாகவே நடந்துகொள்கிறார்கள்.

‘என்னடா கோலம் இது’ என சித்தி பதறும்போது, ‘நான் உன்னோட அக்கா மக, என்ன கோலம்ன்னா... இதுதானம்மா என் கோலம். நீங்க எதுக்கு வருத்தப்படுறீங்க? நீங்க என்ன ஆம்பளையாப் பாக்குறதுதாம்மா ஒரே வெக்கமா இருக்கு. வருத்தமாவும் இருக்கு. நான் பொம்பளம்மா, நீ வருத்தப்படாத. என்ன நீ ஒருவாட்டி மகளேன்னு கூப்பிடு. ஜென்ம புண்ணியம் கெடுச்சிரும்மா’ என்கிறான் கிட்ணன்.

திவ்யா தனது குழந்தைக்குப் பால் தர முடியாமல் உடலாலும் மனதாலும் அவதியுற்று இதென்ன பிழைப்பு எனப் பெண்மையை வெறுக்கும் வேளையில், கிட்ணன் தனது சுரக்காத குறுமார்பை அக்காவின் குழந்தைக்கு உண்ணத்தருகிறான். அவன் பெண்மையை, தாய்மையை ஆராதிப்பவனாக இருக்கிறான். ‘ச்சீ எந்திரி, பொண்டுகா. வழமை கெட்டவன். எங்க வந்து ஒக்கார்றாம் பாரு’ எனப் பேருந்தில் ஒரு பெண் குரல் கடுகடுக்கும்போது, ‘நானும் ஒன்ன மாதிரிதாம்மா. ஆம்பள பக்கம் நான் போய் ஒக்கரா முடியுமா? எனக்கு வெக்கமாயிருக்காதா? என்னைத் திட்டுறியே. ஒன்ன நான் திட்டட்டுமா? ஒன்ன எம் பெறப்புன்னு நெனச்சு ஒக்காந்தா அசிங்கப்படுத்துறியேம்மா’ என்கிறான்.

இதைத் தொடர்ந்து கதைசொல்லியின் குரல் ஒலிக்கிறது, ‘ஆண்கள் சங்கடப்பட்டால் இவனே இடம்விட்டு தள்ளி நிற்பதுண்டு. பெண்கள் ஒருமாதிரி நெளிந்தால் கிட்ணனால் தாங்கிக்கொள்ளவே முடிவதில்லை. அந்தளவு கோவம் வரும்’. ‘நான் உனக்கு மக இல்லையா, சுதாகருக்குத் தங்கச்சி இல்லையா, கிட்ணனின் மகளுக்குத் திவ்யா பெரியம்மா இல்லையா?’ என மீண்டும் மீண்டும் கிட்ணன், இதை அழுத்தமாகச் சொல்ல வேண்டியிருக்கிறது. ‘யக்கா... நான் பட்ட அவமானத்த அசிங்கத்த அடிய வேதனைய இந்த மண்ணுல யாரும் பட்டிருக்க மாட்டங்கக்கா. நீங்க பட்ட வேதனையச் சொல்லிடுவீங்க. நான் யாருகிட்ட சொல்றது. அத எப்படிச் சொல்றது. எப்படிச் சொல்ல முடியும். சொன்னாலும் புரிஞ்சிக்குவாங்களா. இந்த ஜென்மம் போதும்க்கா. இன்னொரு ஜென்மம் எனக்கு வேணாம்’ என்பது நாவலில் இறுதியாக ஒலிக்கும் கிட்ணனின் துயரார்ந்த வார்த்தைகள்.

பெண்களின் மனதைத் தத்ரூபமாகப் படைப்பது சு.வேணுகோபாலுக்குக் கைவந்த கலையாகிறது. பெண் பாத்திரங்களையும் கிட்ணனின் பெண்மையையும் உயிர்ப்புடன் வார்த்திருக்கிறார்.

கி.ராவின் ‘கோமதி’ வெளியான ஆண்டு 1964. சு.வேணுகோபாலின் ‘பால்கனிகள்’ டிசம்பர், 2013-ல் வெளியானது. கோமதிக்குச் சிறு பிராயத்திலிருந்தே ஜடைபோட்டு பூ வைத்துக்கொள்வதிலும், வளை அணிந்துகொள்வதிலும் கொள்ளை ஆசை. கிட்ணனும் மீசை மழித்து சிகை வளர்த்துக்கொள்கிறான். அக்காவின் செருப்பை அணிவதில் கிட்ணன் தயக்கம் காட்டுவதில்லை. கோமதிக்கும் கிட்ணனுக்கும் பெண்மையின் நளினம். கோமதிக்கு சமையல் கலை அற்புதமாகக் கைவந்திருந்தது. கிட்ணனுக்கும். கோமதி பெண் குரலில் உருக்கமாகப் பாடுகிறான். இந்நாவலில் கிட்ணனும் பாடுகிறான். ஐம்பது ஆண்டுகளில், மூன்றாம் பாலினத்தவர் குறித்த சித்தரிப்புகளைக் கையாள்வதில் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை.

தலித் இலக்கியம் தளிர்விடத் தொடங்கியபோது, அவை பெரும்பாலும் ஒருவித ஆவணத்தன்மையைக் கொண்டிருந்தன. அப்போது அது அவசியமாகவும் அதுவே போதுமென்பதாகவும் இருந்தது. ஒரே மாதிரியான படைப்புகள் தொடர்ந்து வெளியானபோது அவை விமர்சனத்துக்கு உள்ளாயின. இதை ஈழ இலக்கியத்துக்கும் பொருத்திக்கொள்ளலாம். அப்படித்தான் ‘பால்கனிகள்’ நாவலிலும் புறக்கணிப்பட்ட ஜீவன்களின் துயரார்ந்த குரலாக, பிரச்சார நெடியுடன், முன்முடிவுடன், ஒரு வகை ஆவணத்தன்மையுடன் வெளிப்படுகிறது.

திருநங்கைகளைப் பாலியல் இச்சைக்கு உட்படுத்தும் சுற்றத்தார், குடும்பமே புறக்கணிக்கும் அவலச் சூழல், அவர்களின் மீது ஏற்றிவைத்திருக்கும் பொதுபுத்தி இவற்றைத் தாண்டி வேறு விஷயங்களையும் பேச வேண்டியிருக்கிறது. என்றாலும், திருநங்கைகள் சார்ந்து நம்மிடமிருக்கும் படைப்புகள் மிக சொற்பம் எனும் வகையில் இந்த நாவல் கையாண்டிருக்கும் விஷயங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை.

- த.ராஜன்,

தொடர்புக்கு: rajan.t@thehindutamil.co.in

(ஏப்ரல் 15, திருநங்கையர் நாள்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x