Published : 05 Jan 2024 06:10 AM
Last Updated : 05 Jan 2024 06:10 AM

வாசகர் குரல்: மழைக்குத் தயாராகவில்லையா புத்தகக் காட்சி?

சென்னை புத்தகக் காட்சியின் இரண்டாவது நாளில் பெய்த மழை, பல அரங்குகளையும் வாசகர்களையும் பாதித்ததைக் காண முடிந்தது. “புத்தகக் காட்சி போன்ற பெரு நிகழ்வுகளை ஒருங்கிணைப்பதற்கு முன் அனைத்து வானிலை நிகழ்வுகளுக்கும் ஏற்ப இடத்தைத் தயார்செய்ய வேண்டியது அடிப்படை.

சென்னை போன்ற கடலோர நகரங்களில் திடீர் மழைப்பொழிவு பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள், வாசகர்கள் என அனைவருக்கும் இடையூறாகத்தானே இருக்கிறது. ஒருவேளை மக்கள் கூட்டம் அதிகமாக இருந்திருந்தால் என்னவாகும் என்பதையும் சேர்த்தல்லவா ஏற்பாட்டாளர்கள் யோசித்திருக்க வேண்டும்” என்று ஆதங்கப்படுகிறார் ஓய்வுபெற்ற ஆசிரியர் சுப்ரமணியன்.

“பொது இடத்தில் நிகழ்ச்சிகளை நடத்தும்போது உரிய வகையில் பாதுகாப்பு வசதிகள்செய்யப்பட்டுள்ளனவா என்பதை ஒருங்கிணைப்பாளர்கள் உறுதிப்படுத்த வேண்டியது அவசியம். கூரையைத் தாண்டி அரங்கத்துக்குள் விழும் மழையைப் பார்த்தால் கவலையாக இருக்கிறது.

ஆங்காங்கே அமைக்கப்பட்டிருக்கும் மின் கம்பிகள், தூண்களின் அருகே கொட்டும் நீரினால் அசம்பாவிதம் நேராமல் இருக்க வேண்டுமே. குழந்தைகள், முதியவர் என அனைத்து வயதினரும் வந்துபோகும் புத்தகக் காட்சி அரங்கம் முழு பாதுகாப்புடன் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்” என்கிறார் பெயர் சொல்ல விரும்பாத சென்னை வாசகி.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x