Published : 27 Nov 2023 06:10 AM
Last Updated : 27 Nov 2023 06:10 AM

கணை ஏவு காலம் 46 - எப்படி நடந்தது குடியேற்றம்? @ இஸ்ரேல் பாலஸ்தீனம் போர்க்களக் குறிப்புகள்

இஸ்ரேலின் நிர்ஓஸ் நகரை சேர்ந்தவர் யோனி. கடந்த அக்டோபர் 7-ம் தேதி அவரது மனைவி டோரன், மகள்கள் அவிவ், ராஸை பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர். 49 நாட்களுக்குப் பிறகு தாயும் 2 மகள்களும் சில நாட்களுக்கு முன்பு விடுதலை செய்யப்பட்டனர். இஸ்ரேலின் பீட்டா டிக்கா நகருக்கு திரும்பிய மனைவி, மகள்களை, யோனி ஆரத் தழுவி ஆனந்த கண்ணீர் வடித்தார். படம்: பிடிஐ

யூத குடியேற்றங்கள், இந்தக் கணை ஏவு காலத்திலும் சரி, இதற்கு முன்னால் எழுதப்பட்ட பாலஸ்தீனம் தொடர்பான வேறு எந்த ஒரு வரலாற்று பிரதியிலும் சரி, திரும்ப திரும்ப இதுதான் வரும். சிக்கலின் மையப்புள்ளியாக இதனைத் தான் அத்தனை வரலாற்று ஆசிரியர்களும் சுட்டிக்காட்டுவார்கள். வரலாறு இருக்கவே இருக்கிறது. இன்றைக்கு நடக்கின்ற விவகாரத்தின் மையம் என்னவென்று பார்த்தாலும் இதையேதான் போர் தொடங்க காரணமாக இருந்த ஹமாஸும் சொல்லியிருக்கிறது. மேற்கு கரையிலும், காஸாவிலும் இஸ்ரேல் தொடர்ந்து அத்துமீறிக்கொண்டிருக்கிறது. முஸ்லிம்களின் நிலப்பகுதியில் வலுக்கட்டாயமாக யூதர்களை குடியேற்றுகிறது. அவர்களை இஸ்ரேலிய ராணுவம் பாதுகாக்கிறது. வீடிழந்த, நிலமிலந்த முஸ்லிம்கள் அகதிகளாக முகாம்களை தேடிச் செல்ல வேண்டியதாகிவிடுகிறது.

இந்தச் சிறு குறிப்பை சிறிது விரித்துஆராய வேண்டிய நேரம் இது. உண்மையில் இம்மாதிரியான ஆக்கிரமிப்புகள் சாத்தியம்தானா? என்றால் எவ்வளவு முடியும்? எத்தனை காலத்துக்குச் செய்ய முடியும்? எப்படி இதனைச் செய்கிறார்கள்? ஏன் யாரும் எதுவும் கேட்பதில்லை, தடுக்க முடிவதில்லை?

பாலஸ்தீனத்தில் நடைபெறும் யூதக் குடியேற்றங்கள் தொடர்பாக நமக்கு இன்று பொதுவெளியில் கிடைக்கக் கூடிய ஆதாரங்களை முற்று முழுதாக நம்புவது ஆபத்து. எந்தச் சார்பும் இல்லாமல் அணுகினால் பல நூற்றுக் கணக்கான தரவுகளில் பூதாகரமாக்கும் காரியம் நடந்திருப்பதைப் பார்க்க முடியும். அதெல்லாம் பாலஸ்தீனர்களுக்கு நல்லது செய்வதாக நினைத்துக் கொண்டு மேலும் மேலும் அவர்களைச் சிக்கலில் தள்ளும் ‘திருப்பணியே’ ஆகும். இஸ்ரேலிய அத்துமீறல் - ஆக்கிரமிப்பு இல்லாமல் இல்லை. ஆனால் எந்த அளவுக்கு என்பது முக்கியம். இதுதொடர்பாக நாம் மனித உரிமை கமிஷன் மற்றும் பாலஸ்தீனத்துக்கான ஐ.நா.வின் சிறப்புப் பிரிவு அளிக்கும் தரவுகளை மட்டும் சரி என்று எடுத்துக் கொள்வதே நல்லது.

பாலஸ்தீனத்தில் யூதக் குடியேற்றங்கள் என்பவை 1967 யுத்தத்துக்குப் பிறகு நிகழத் தொடங்கின. அந்தப் போரின் அபத்தங்கள் குறித்து நாம் முந்தைய அத்தியாயங்களில் விரிவாகப் பார்த்திருக்கிறோம் என்பதால் இங்கே விவரிக்கவில்லை. போரில் இஸ்ரேல் வெற்றி கண்டது. பாலஸ்தீனத்துக்கு உதவுவதாகச் சொல்லிக் கொண்டு வந்த அண்டை நாடுகள் ஆளுக்குக் கொஞ்சம் லாபம்பார்த்துக் கொண்டு திரும்பிச் சென்றன.பாலஸ்தீனத்து நிலப்பரப்பில் பெருமளவு இஸ்ரேல் வசமாகிப் போக, எங்கெல்லாம் கைப்பற்றினார்களோ அங்கெல்லாம் யூதர்களைக் கொண்டு குடியமர்த்த ஆரம் பித்தார்கள்.

இந்தக் குடியமர்த்தும் பணி எப்படி நடந்தது என்பதில்தான் விவகாரம்.

போர் உச்சம் பெறும்போதே பகுதிவாழ் மக்கள்அகதி முகாம்களுக்கோ, அண்டை அயல் நாடுகளுக்கோ,அக்கம் பக்கத்து ஊர்களுக்கோ வாவதுஉயிரைக் காத்துக் கொள்ளச் சென்றிருப்பார்கள். பெரும்பாலும் வசிப்பிடங்கள்காலியாகவே இருக்கும். ஆனால் முழுவதும் அல்ல. என்ன ஆனாலும் இடத்தைவிட்டு நகர மாட்டேன் என்று நினைப்போரும் உண்டல்லவா? அவர்கள் இருப்பார்கள். தவிர கடை வைத்து வியாபாரம் செய்பவர்கள், நிலம் வைத்து விவசாயம் செய்பவர்கள் எங்கே போவார்கள்? நோயாளிகள், முதியோர், ஊனமுற்றோர் என்ன செய்வார்கள்?

எனவே, இஸ்ரேலிய ராணுவம் ஊருக்குள் நுழையும்போது பெருமளவு ஊர் காலியாக இருக்கும். கொஞ்சம் பேர் மட்டும் இருப்பார்கள். அந்தக் கொஞ்சம் பேரை முதலில் அடையாளப் பரிசோதனைக்கு வரச் சொல்லுவார்கள். பெரும்பாலும் நீ இன்ன இயக்கம், நீ துப்பாக்கி வைத்திருக்கிறாய், உன்னிடம் வெடிமருந்து உள்ளது என்று எதையாவது சொல்லி கைது செய்துவிடுவார்கள் என்பதால் மக்கள் அதைத் தவிர்க்கவே விரும்புவார்கள். கொஞ்ச நாட்களுக்காவது தலைமறைவாக இருக்க வழி தேடுவார்கள்.

இப்போது ராணுவம் மைக் வைத்து அறிவிக்கும். பகுதிவாழ் மக்கள் முறைப்படி ராணுவத்திடம் வந்து பதிவு செய்து கொள்ள வேண்டும். தவறினால் நடவடிக்கை.

இந்தப் பக்கம் அறிவித்துவிட்டு அந்தப் பக்கம் குடியிருப்புகளில் புகுந்து தேடுதல் வேட்டை நடத்த ஆரம்பிப்பார்கள். அதாவது தீவிரவாதிகளைத் தேடுகிறார்கள். வீடுகள், கடைகள், வழிபாட்டிடங்கள் என்று கண்ணில்படுவதையெல்லாம் உடைத்து நொறுக்கிக் கொண்டே செல்வது. தப்பி ஓடும் மக்களை ஒன்று, கைது செய்வது அல்லது சுட்டுக் கொல்வது.

பிராந்தியம் முழுவதும் காலியானதும் அது மொத்தமாக ராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் வந்துவிடும். அதன் பிறகு என்ன? குடியேற்றங்கள்தாம். ராணுவக் கட்டுப்பாட்டுப் பிராந்தி யத்தில் வசிக்க யூதர்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை? அடிமாட்டு விலைக்கு நிலங்களை வாங்கிக் கொண்டு வந்துவிடுவார்கள். இது போக அரசாங்கமே வீடு கட்டி வாடகைக்கும் விடும். முஸ்லிம்களின் விளைநிலங்களை மொத்தமாக வேலி போட்டு வளைத்து, குத்தகைக்கு விடுவார்கள்.

இது ஒரு பக்கம். இன்னொரு பக்கம், எந்த எதிர்ப்பும் காட்டாமல் சொன்னபடி ராணுவத்திடம் பெயர் பதிவு செய்து கொண்டு அங்கேயே வசிக்க நினைக்கும் மக்களுக்கு வேறு விதமான நெருக்கடி வரும். அது வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. கிட்டத்தட்ட வாழ்நாள் அடிமைசாசனம் எழுதித் தந்துவிட்டு உயிரைத் தக்கவைத்துக் கொள்வது போல.

(தொடரும்)..

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x