

‘குதிரை வீரன் பயணம், ஆசிரியர்: யூமா வாசுகி, முகவரி: டிமாண்டி வீதி, திருப்பூர்’ கணையாழியில் வெளியாகியிருந்த சிறு விளம்பரம் கவனத்தை ஈர்த்தது. திருப்பூரிலிருந்து ஒரு சிற்றிதழ் என்பது ஆர்வத்தை உண்டாக்கியது. ஈஸ்வரன் கோயில் அருகில் இருந்த அந்த முகவரியைத் தேடிச் சென்றேன். மூன்று தளங்களைக் கொண்ட கட்டிடம். பெயர்ப் பலகைகள் எதுவும் இல்லாததால், இந்த இடம்தானா என்று சந்தேகத்துடன் நின்றிருந்தபோது, ஒரு பதின்வயதுச் சிறுவன் விறுவிறுவெனக் கீழே இறங்கி வந்தான்.
‘என்ன வேணும்ணே?’ சிரித்த படியே கேட்டான். கையில் சிறிய வயர்கூடை. ‘இங்க யூமா வாசுகின்னு இருக்காங்களா?’ என்று சொல்லி முடிக்கும் முன் கேட்டு கைகாட்டியபடியே நகர்ந்தான் ‘ஒசக்க இருக்காங்க’. அவன் சொன்னது எனக்குப் புரியவில்லை. ஆனால், கையை மேலே காட்டியதை வைத்துக்
கொண்டு மேலே ஏறினேன். மொட்டை மாடியை அடைந்தேன்.
பளீரென்று வெளிச்சம் இறைந்த மேசையின் மீது இளைஞர் ஒருவர் குனிந்து வரைந்துகொண்டிருந்தார். இன்னொரு மேசையில் வெள்ளைத் தாளில் வரைந்த எழுத்துகளும் லச்சினைகளும். எல்லாமே பனியன்களில் அச்சிடக்கூடிய படங்கள், எழுத்துகள். கறுப்பு மையில் கச்சிதமாக வரையப்பட்டிருந்த தாள்கள். வரைந்து கொண்டிருந்தவர் நிமிர்ந்து பார்க்கும்வரை காத்திருந்தேன்.
“வாங்க... என்ன வேணுங்க?” வசீகரமான சிரிப்பு. காட்ராய் துணியிலான நீலச் சட்டை அவருக்கு வெகு பொருத்தமாயிருந்தது. “யூமா வாசுகி?” தயக்கத்துடன் கேட்டேன். கழுத்தில் புரண்ட தலைமுடியும் சிரிக்கும் கண்களும் பாடகர் ஹரிஹரனை நினைவுபடுத்தின.
“அதோ, அங்க இருக்கார் பாருங்க” - மங்கிய வெளிச்சம் கொண்ட மொட்டை மாடியின் வடமேற்கு மூலையைக் காட்டினார். நாற்காலியில் அமர்ந்திருந்தவர் வானத்தைப் பார்த்துக்கொண்டிருந்தார். மெல்ல நெருங்கினேன். சட்டென்று கால்களைக் கீழிறக்கிக்கொண்டு முகம் பார்த்தார்.
“நீங்கதான் யூமா வாசுகியா?”
“ஆமா. நீங்க?” தயங்கும் குரல்.
“கணையாழியில விளம்பரம் பார்த்தேன்” என்று என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன்.
திருப்பூரில் இலக்கிய ஆர்வமிக்க ஒருவரைச் சந்திப்பதில் என்னைப் போன்றே அவருக்கும் மகிழ்ச்சி. இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக உரையாடல். விடைபெற்றுச் செல்லும்போது ‘குதிரை வீரன் பயணம்’ முதல் இதழை அளித்தார். சந்திப்புகள் தொடர்ந்தன. யூமா வாசுகி எனும் சிற்றிதழ் ஆசிரியரை, கவிஞரை, ஓவியரை, எழுத்தாளரை அறிந்துகொண்ட நாள்கள். என்னுடைய சில கவிதைகளைக் கொடுத்தேன். வாசித்தார். ‘உங்களால நல்லா கதை எழுத முடியும்னு தோணுது’ என்று அவர் சொன்னது, அப்போது சற்று ஏமாற்றமாகத்தான் இருந்தது.
இரண்டு வாரத்துக்குப் பிறகு, ‘குதிரை வீரன் பயணம்’ இரண்டாவது இதழ் தயாராகிக் கொண்டிருப்பதாகவும் ஒரு சிறுகதை எழுத வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். ‘எழுதித்தான் பார்க்கலாமே’ என்ற எண்ணம் எழுந்தது.
சில நாள்களுக்கு முன்பு நண்பரின் வீட்டில் பாத்திரங் களுக்கு ஈயம் பூசும் முதியவர் ஒருவரைக் கண்டேன். அவரைப் பற்றி அறிந்துகொண்ட செய்திகளையும் அவரைக் கவனித்ததில் எனக்குத் தெரிந்த விஷயங்களையும் வைத்துக்கொண்டு கதையை எழுத ஆரம்பித்தேன். யூமாவுக்குக் கதை பிடித்திருந்தது. சூழலும் உரையாடல்களும் கச்சிதமாக அமைந்திருப்பதாய் சொன்னவர், கதைக்கு ‘விளிம்பில் நிற்கிறவர்கள்’ என்று தலைப்பிட்டார்.
பாத்திரங்களுக்கு ஈயம் பூசும் வழக்கம் அப்போது இருந்தது. எவர்சில்வர் பாத்திரங்கள் புழக்கத்துக்கு வந்த பிறகு அதற்கான தேவை இல்லாமல் போயிற்று. ஈயம் பூசும் அம்மாசியைச் சுற்றிய உலகமும் மனிதர்களும் மாறிக்கொண்டே இருந்தபோதும் அவர் அப்படியேதான் இருந்தார், ‘விவரமில்லாத’வராக. திருப்பூரில் பனியன் தொழில் வளர்ந்து பெண்களுக்கான வேலைவாய்ப்புகள் பெருகிப் பொருளாதாரச் சுதந்திரம் உருவானபோது, தலைகீழான மாற்றங்கள் நிகழ்ந்தன. அம்மாசி போன்ற ‘குடும்பத் தலைவர்’களைச் சார்ந்திருக்கத் தேவையில்லாத நிலை ஏற்பட்டது. பெண்கள் தங்களது எதிர்கால வாழ்வுக்கான பொருளாதாரத் தேவைகளைத் தாங்களே திட்டமிட்டுச் சேர்க்க முடிந்தது. இந்த மாற்றங்களையும் வாழ்வின் ஒரு பகுதியாக ஏற்றுக்கொண்டு தன்னைப் பொருத்திக்கொள்ளும் மனிதர்களையும் அடிப்படையாகக் கொண்டிருந்தது ‘விளிம்பில் நிற்கிறவர்கள்’. இந்த யதார்த்தத்தை விவரிக்கும் இந்த முதல் கதையை இப்போது வாசிக்கும்போதுகூட நிறைவாகவே உள்ளது.
- எம்.கோபாலகிருஷ்ணன்
எழுத்தாளர், தொடர்புக்கு: magopalakrishnan@gmail.com